Tuesday, May 31, 2022

பேஸ்புக் (FACEBOOK)

 பேஸ்புக் (FACEBOOK)

 

இதுதான் பேஸ்புக்கில் இருக்கும் உண்மை நிலை..

 

            ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். உரக்க பேசிய படி நடக்கிறார். எதிரே ஒருவரை சிரித்த படியே பார்க்கிறார். புதிதாக அவர் வாங்கிய கார் குறித்தும், பார்த்த திரைப்படம் குறித்தும், பிறந்த நாளுக்கு மனைவியும், மகளும் சேர்ந்து அவருக்கு அளித்த, 'சர்பிரைஸ்' குறித்தும், அச்சு பிசகாமல், வர்ணித்து கொண்டிருக்கிறார்.

 

                 'இவருக்கு என்னாச்சு...' என, குழம்புவதற்கு முன், யோசித்து பாருங்கள். இது தான் இன்று, பேஸ்புக் எனும் சமூகவலை தளத்தில் நடக்கும் கூத்து. ரகசியத்தின் கதவுகளை உலகத்துக்கு முன் திறந்து வைப்பது... பழக்கமே இல்லாதவர்களை உள்ளுக்கு அழைப்பது... இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

         நேரடியாக பார்த்தால், நேருக்கு நேர் மோதினால் கூட பேசுவதில்லை. ஆனால், பேஸ்புக்கில் பேச்சை நிறுத்துவது இல்லை. சூரியனுக்கு மேலும், கீழேயும் உள்ள எந்த விஷயத்தை பற்றியும் பேச்சு. கண் முன் தவறை காண நேர்ந்தால் கூட பேசுவதில்லை. பார்த்தது போன்ற நினைப்பு கூட இருக்காது.

 

          ஆனால், பேஸ்புக்கில் என்றால், அணை மீறும். அது வரை அடக்கி வைத்திருந்த நேரமும், தார்மீக கோபமும் கொப்பளிக்கும்.கற்பனை உலகுதன் முகத்தை வித விதமாக காட்டி, 'லைக்' மற்றும் 'கமென்ட்டு'க்காக காத்து கிடப்பது. நாம் வாழும் உலகத்திலிருந்து, இங்கு விஷயங்கள்

கொஞ்சம் மாறுதல் தான். வித்தியாசமான, விசித்திரமான கற்பனை உலகு என்று கூட, இதை மிகைப்படுத்தலாம்!

 

         ஆற்றில் தன் பிரதி பிம்பத்தை பார்த்து, காதலில் வீழ்ந்த இளைஞனின் கதை, கிரேக்க புராணங்களில் உள்ளது. காதல் பித்து பிடித்து, மனதின் சம நிலை தடுமாறி, அந்த இளைஞன் மரணம் வரை, தன் பிரதி பிம்பத்தை பார்த்தே இருந்தானாம். அவர் பெயர், நார்சிஸஸ். தன் உருவம், தன் ஆற்றல், தன் திறமை போன்ற தன் அனைத்தையும் விரும்பும், சுய பெருமை பேசுபவர்களை தான், 'நார்சிஸிஸ்ட்' என, ஆங்கிலத்தில் கூறுகின்றனர்.

 

          அத்தகையோர் கூட்டம் இன்று, பேஸ்புக்கில் நின்று, உட்கார்ந்து, படுத்து, சாப்பிட்டு, குடித்து, ஆடிப்பாடிக் கொண்டிருக்கிறது. என் சொந்த சுவரில், என் படத்தை போட்டால் யாருக்கு என்ன நஷ்டம்... என, பலரும் சிந்திக்கலாம். ஆனால், நெருங்கி பழகுபவரை விட, அன்னியர் அதிகமாக உள்ள பேஸ்புக்கில், சொந்த போட்டோவை, எல்லாரும் பார்க்கும்படியான விதத்தில் போட வேண்டுமா?

 

             கடலில் விஷம்பின்பற்ற நிறைய நண்பர்களும், என்ன வேண்டுமென்றாலும் எழுதலாம் என்ற, எருமை மாட்டுத்தோலும் இருந்து விட்டால் போதும் என, மனப்பால் குடிப்பவர்கள் இவர்கள். 'லைக்' அதிகமாக கிடைக்க ஒரே வழி, மற்றவர்களை திட்டுவது தான் என, அவர்கள் நினைக்கின்றனர்; திடமாக நம்புகின்றனர்.

 

           நிகழ்காலத்தில் கை, உதடு அசைக்காதவர்கள். எங்கு, என்ன தான் நடந்தாலும், 'விர்சுவல் லேண்ட்' எனப்படும் சமூக வலைதளத்தில், தடி எடுப்பது, கூடை கணக்கில் பதில்களை அவிழ்த்து விடுவது என, செயல்படுகின்றனர்.

 

           நாம் கடலில் நீச்சலடித்து, ஆனந்தமாக குளியலில் ஈடுபட்டுள்ள போது, திடீர் என, எங்கிருந்தோ சிலர் வருகின்றனர்; கடலில் விஷம் கலந்து விடுகின்றனர். நாம் குளிப்பதை நிறுத்தி விட்டு, கரையை வந்தடைகிறோம். அவர்கள் கடலில் மீன் பிடிக்கின்றனர். விஷம் கலந்த அந்த மீன், பல இடங்களுக்கு கை மாறுகிறது. அது போல தான் பேஸ்புக்கின் நிலைமை!

          எவ்வளவு தெளிவான போஸ்ட் போட்டாலும், பழக்கமில்லாத சில நண்பர்கள் அதில் விஷம் கலப்பர். தெரிந்தும், தெரியாமலும், அதை வழிமொழிவர்.சேர்ந்து கலக்குவர். தெளிந்த நீரோடையாக இருந்தது, கூவமாக மாறி விடும். கரையில் நிற்பவர்கள், தெரியாமல் கால் நனைத்து செல்வர். கடைசியில், போதை தலைக்கு ஏறி விஷம் போல, வாரி வாரி வீசுவர்.பயணம் போவது கூட, பேஸ்புக்கில் போட்டோ போட மட்டும் தான் என, நம்புவர்களும் அதிகரித்து விட்டனர்.

 

                மனைவியின் மகிழ்ச்சி; கணவனின் மகிழ்ச்சி; வீர தீர செயல்கள்; மனைவியும், கணவனும், 'வால் போஸ்டர்' அடித்து, பேஸ்புக்கில் விளம்பரம் செய்கின்றனர்!  கணவன் காலையில், மனைவியுடன் சண்டை போட்டு தான் அலுவலகம் கிளம்பியிருப்பார். என்றாலும், 'டார்லிங், இன்று, 20 முத்தம் தந்து விட்டு தான் கிளம்பினார்' என, பேஸ்புக் வழியாக, உலகத்துக்கு உரக்க கூறி, முகத்தை காப்பாற்றுகின்றனர். ரகசியங்கள் உலகத்துக்கு திறந்து வைக்கிறோம் என்ற சிந்தனை, பல தம்பதிகளுக்கு துளி கூட இல்லை. குழந்தைகளின் நிலை தான் அதை விட மோசம். அவர்கள் சிரிப்பதும், அழுவதும், விளையாடுவதும், சண்டை போடுவதும், 'கேக் கட்' செய்வதும், தேர்வில் மதிப்பெண் வாங்குவதும், பேஸ்புக்கில் பதிவு பண்ண தானாம்!

 

            தன்னையும், தன் பிள்ளைகளையும் கணவர் வெளியே கூட்டிச் சென்றார் என்பதற்காக, 'என்னை வெளியே அழைத்து சென்ற கணவருக்கு நன்றி' என, பேஸ்புக்கில் பதிவு பண்ண வேண்டுமா?

ஏன், கணவரிடம் நன்றியை நேரடியாக சொன்னால் தான் என்ன... எதற்கு, ஊரில் உள்ளவர்களை தொந்தரவு செய்ய வேண்டும் என்ற சிந்தனைக்கு இன்று இடமே இல்லை. ஆனாலும், பேஸ்புக்கில் பதிவாகும் அல்பதனத்தை கிண்டலடிக்கும் போஸ்ட்கள், சில வேளை மின்னுவதுண்டு!

பேஸ்புக்கில் உள்ள நுாறு நண்பர்களில், தேவைக்கு உதவுவோர், மூன்று பேர் கூட இருக்க மாட்டார்கள் என்பது அனுபவஸ்தர்களின் கூற்று!

அண்மையில், அமெரிக்கா வெளியிட்டுள்ள தகவல் நடுக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. பேஸ்புக்கை இடை விடாது பயன்படுத்துவோரில், 33 சதவீதம் பேர், கவலை நோய்க்கு அடிமையாகின்றனராம். மற்றவர்களின் ஆடம்பர வாழ்க்கையை கண்டு, பொறாமை அதிகரித்து, அவர்களுக்கு கவலை ஏற்படுகிறதாம்.

 

             இந்த நிலைமை, நம் நாட்டிலும் ஏற்பட நாட்கள் குறைவு தான்!இதெல்லாம் இருந்தாலும், பொதுவாக, நல்ல எண்ணங்களுக்காக, பேஸ்புக்கை பயன்படுத்துவோரும் இல்லாமல் இல்லை. 'பாசிட்டிவ்'வான பல பிரசாரங்களும் அதில் நடக்கின்றன. வெளியே தெரியாத எழுத்துக்கும், கவுரவமான வாசிப்பிற்கும், புதுமை சிந்தனைகளுக்கும், பிடித்தமான விஷயங்கள் பற்றியும், அறிவுக்கும், நண்பர்களுடனான சந்திப்புகளுக்கும், பேஸ்புக்கை ஒரு பாலமாகவும் பயன்படுத்துகின்றனர்.

 

         ஆனால், மொத்தமான, பேஸ்புக் கணக்கர்களில் இவர்கள் சிறிய சதவீதம் என்பது தான் உண்மை. மீதமுள்ளவர்கள், கூடவே உள்ளவர்கள், உற்றார், சொந்தம் பந்தம் போன்றவர்களை நேருக்கு நேர் பார்ப்பதை விட, அதிக நேரம் கற்பனை உலகத்தில், 'அப்டேட்'களுக்காக காத்து கிடக்கின்றனர்.

 

           பேஸ்புக்கிற்கும், நம் ரேஷன் கார்டுக்கும் உள்ள ஓர் உறவு, ரேஷன் கார்டில், உள்ளதில் நுாறுக்கு ஒன்று காட்டும்; பேஸ்புக், உள்ளதை விட நுாறு மடங்கு காட்டும்!நாளைக்கு, என்ன தற்பெருமை சொல்லலாம் என்ற சிந்தனையோடு தான் பலர், இரவு படுக்கைக்கு துாங்கப்போவதே.

விடியல் மலர்கிறது முதல் நாளே சித்தரித்து, மெருகூட்டின, 'ஸ்டேட்டஸ் மெஸேஜ்' மற்றும் சூரிய தேஜுடனான புரொபைல் போட்டோவும், காலை கண் விழித்த மறு நொடி, அப்டேட் செய்வதோடு சேர்ந்து, அவர்களின் பேஸ்புக் விடியல் மலர்கிறது. வெளியே சூரிய உதயம், அஸ்தமனம் அவர்களை பாதிப்பதே இல்லை. காரணம், அவர்களின் சூரியன் அவர்களே தான்!குடிக்கும், மயக்க மருந்துக்கும் அடிமை போல, சோஷியல் மீடியாவுக்கும், அடிமையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள், அதிகரித்து வருகிறது. இந்த விஷயத்தில் வயது வித்தியாசமே கிடையாது என்பது தான் நிதர்சனம்.

 

           அதிகப்படியான கோபம், துாக்க மின்மை போன்ற குணங்களும், இவர்களின் குணாதிசயங்களாக மாறுகின்றன. பேஸ்புக் லைக்குகளை அளவுக்கு அதிகமாக ரசிப்பவர்கள், 'லைக்கஹாலிக்'குகள் என, அழைக்கப்படுகின்றனர்.இப்படிப்பட்டவர்கள், காண்பவை அனைத்தும், 'லைக்' செய்வதும், அவர்கள் போஸ்ட் செய்வது எல்லாம், 'லைக்' செய்ய வேண்டும் என, ஆசைப்படுகின்றனர். இந்த அடிக் ஷன் மூலமாக, இரவு துாக்கமில்லாமல், அவர்களுக்கென்று ஓர் உலகை படைக்கின்றனர்.

ஏமாற்று வேலை அன்று, நல்ல மனிதர் என்று நிரூபிக்க, சமூகத்தில் பல நல்ல வேலைகளை செய்து, நிரூபிக்க வேண்டியிருந்தது. ஆனால், இன்று, சோஷியல் மீடியா அதை எளிதாக்கி விட்டது. யதார்த்த உலகில் பெரிய நட்பு வட்டத்தை அடைய, சோஷியல் ஸ்கில்ஸ் வேண்டும். இதற்கு மேல், அங்கு ஏமாற்று வேலையும் அதிகம். சரி, இதிலிருந்து எப்படி தப்புவது?

நேரடியாக தெரிந்தவர்களிடம் மட்டும் பழகுவது; அறிமுகமான நட்பு வட்டத்தில் மட்டும்

 

          விவாதங்கள் நடத்துவது; மிக பழகியவர்கள் கூட, தவறாக நடக்க முற்பட்டால் அவர்களை, 'பிளாக்' செய்வது; ரகசியங்கள், தெரியாதவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது.மேலும், சொந்த பிரச்னைகளை, பேஸ்புக்கில் பழக்கமானவர்களிடம் பகிர்ந்து, ஆசுவாசம் அடைவது கூடாது.

 

            பழக்கமில்லாதவர்கள் காணும்படியாக போட்டோக்கள் போஸ்ட் செய்யக்கூடாது.குடும்ப புகைப்படங்கள் போடுவதும், சொந்தமான போட்டோவுக்கு தேவையற்று, அடுத்தவரை, 'டேக்' செய்வதும் தவறு; செய்யக்கூடாது. தேவையான நேரம் மட்டுமே பேஸ்புக் பயன்படுத்துவது. அளவுக்கு அதிகமாக அதற்கு அடிமையானால், முகத்துக்கு முகம் பார்த்து பேசும் நபர்களை தவிர்க்கும் மன நிலை, உடல் மொழி தனியாகவே வந்து விடும்.

 

         மற்றவர்களுடன் தனக்குத்தான் ஒப்பிடாமல் இருப்பதும், உள்ளதை வைத்து, திருப்தி அடைய முடியும் என்றால், மற்றவர்களின் பேஸ்புக் வாழ்க்கை, நம்மை அடிமையாக்க முடியாது என்பதை உணர வேண்டும். எழுதியவர்: .டி.ஹேமமாலினி சமூக ஆர்வலர்.  தினமலரில் வெளியான கட்டுரை..