Thursday, May 18, 2023

வந்தே பாரத் ரயில்

 வந்தே பாரத் ரயில்

ரயில்வே ரிடையர்

ரிடையர் ஆகும் நிலையில் இருப்பவர்களிடம், இந்திய ரயில்வே நிர்வாகம் ஒரு கேள்வி கேட்கும்.

"இந்தியாவில் உங்கள் விருப்பப்படி எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் மாறுதல் தருவோம், சொல்லுங்கள் உங்கள் விருப்பம் என்ன?"

வாழ்நாள் முழுக்க இட மாறுதலில் சிக்கும் பணியாளர்கள், கடைசியில் ஒரு ஊரை தேர்வு செய்து, அந்த ஊரில் ஒரு சொந்த வீடு வாசல் வாங்கி செட்டிலாகட்டுமே! என்ற நல்லெண்ணம் தான்.

வெறும் இரண்டு வருடங்களே இருக்கும் நிலையில், சுதான்ஷு மணியிடம் இதே கேள்வி வந்தபோது அவர் தேர்வு செய்தது சென்னை ICF (Integral Coach Factory).

எதுக்குய்யா சென்னைக்கு போகணும்னு அடம் பிடிக்கற?

பாரதத்துக்காக ஒரு அதிவிரைவு ரயில் உருவாக்கணும். அதுக்கு எனக்கு ஒரு நல்ல டீம் வேணும்.

அதேநேரத்தில் தான் ஸ்பெயின் நிறுவனமான Talgo மணிக்கு 180 கிமீ வேகத்தில், பத்து பெட்டிகள்(coaches) மட்டுமே கொண்ட ஒரு ரயிலை 250 கோடிக்கு இந்திய ரயில்வேக்கு விற்க ஒப்பந்த புள்ளி கோரியது.

தொழிற்நுட்பம் சார்ந்த எந்த தகவல் பரிமாற்றமும்(Knowledge Transfer) தர மாட்டோம்! என்ற நிபந்தனை வேறு.

அய்யா, ஸ்பெயின் ரயிலை விட உன்னதமான ரயிலை நம்மால் டிசைன் செய்ய முடியும், அதுவும் பாதி விலையில்.

மணியின் ஆர்வத்தை பார்த்து, ரயில்வே சேர்மன் வாயை பிளந்து விட்டார்.

நிஜமா? மணி, நீ ரிடையர் ஆகற நேரத்துல என்னை வெச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணலையே?

சரிப்பா, உன் அணியை நீயே தேர்ந்தெடுத்துக் கொள், ஆராய்ச்சி பணிக்கு 100 கோடி (ஆயிரம் பார்மாலிட்டீஸ் முடிஞ்ச பிறகு) ஒதுக்கீடு செய்கிறோம்.

மணி பெட்டி படுக்கையோடு ICF வந்து விட்டார். இரண்டு வருஷம், அசுர உழைப்பு. கர்ம யோகத்தின் உச்சம்.

அந்த டிரெயின் தான் வந்தே பாரத் (இதற்கு முன் Train 18 என அழைக்கப்பட்டது).

16 கோச்சுகள் கொண்ட ரயில் - அதே 180 கிமீ வேகம்.

100 கிமீ வேகம் எடுக்கும் வெறும் 54.6 செகண்டில். 180 கிமீ வேகம் 145 செகண்டுகளில்.

ஆனால் 97 கோடி ரூபாயில் சாத்தியமானது.

ஸ்பெயின் நிறுவனம் Talgo கேட்டது 250 கோடி ரூபாய் வெறும் 10 கோச்சுகளுக்கு.

அப்படி என்ன பெரிய டிசைன் இந்த வந்தே பாரத் ரயிலில்?

இந்த ரயிலுக்கு என்று தனியே ஒரு இன்ஜின் தேவையில்லை. ஒவ்வொரு கோச்சும் சுய உந்துதலில்(Self Propellant) முன்னேறும். சுருக்கமா சொன்னால், ஒவ்வொரு கோச்சிலும் ஒரு மோட்டார்.

டில்லியிலிருந்து வாரணாசி வரை முதல் ஓட்டம் வெற்றி.

கிழக்கே போன இந்த ரயில், வெற்றிகரமா ஓடிய போதெல்லாம் நம்ம மணியை ஒருவரும் பாராட்டவில்லை. மணி யாருன்னு கூட உலகுக்கு தெரியவில்லை.

ஒரு எருமை கூட்டம், தண்டவாள பாதையில் வந்து இந்த ரயில் மோதியவுடன்,

"என்னத்த ரயில் செஞ்சு விட்டிருக்காங்க? தகர டப்பா மாதிரியில்ல இருக்கு?"

"இதுல எந்த இஞ்சீனியருக்கு எவ்ளோ கமிஷனோ?"

"அந்த காலத்துல, பிரிடிஷ் செஞ்ச இன்ஜின் இருக்கே! அதுல காண்டாமிருகமே குறுக்கே வந்தாலும், சும்மா தூக்கி வீசிட்டு ரயில் போயிட்டே இருக்கும் தெரியுமா?"

என்று தகவல்களை சும்மா அள்ளி விட, இணைய ஊடகங்களில், ஏகப்பட்ட Mechanical இன்ஜினியர்கள். என்னே நாம் செய்த பாக்கியம்!

இவ்வளவு சர்ச்சை வெடித்ததும், மனம் பொறுக்க முடியாமல் தனது டிசைன் எப்படி வேலை செய்யும்? எவ்வளவு மேம்பட்டது? என மணி ஒரு கட்டுரை எழுதினார்.

நம்பி நாராயண் வடிவமைத்த விகாஸ் இன்ஜின் தான் செவ்வாய் கிரகம் வரை நமது செயற்கை கோள்களை நிலை நிறுத்துகின்றது. அவரையும் நாம் 15 வருடம் அல்லாட விட்டோம் என்ற கதையைதெரிந்து கொள்ளவே ஒரு திரைப்படம் வர வேண்டியிருந்தது.

நம் நாட்டில் இது போல சில நம்பிகள், சிவன்கள், மணிகள் தன்னலம் பாராமல், கர்ம யோகம் பயில்வதாலேயே, பாரதம் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறது.

2018ல் மணி தன் பணியிலிருந்து மன நிறைவோடு ஒய்வு பெற்று லக்னோவில் வசித்து வருகிறார்.

பி.கு: இந்த ரயிலை டிசைன் செய்ய ரயில்வே நிர்வாகம் ஒதுக்கிய 100 கோடியில், 97 கோடி போக, மிச்ச 3 கோடியை மணி பத்ரமாக திருப்பி தந்து விட்டாராம். தேன்குடத்தில் கைவிட்டும் புறங்கையை நக்க வில்லை.

படித்தேன், தமிழில் பகிர நினைத்தேன்