Friday, January 12, 2024

வாய்வுத் தொல்லை நீங்க சில மருத்துவ டிப்ஸ்.

வாய்வுத் தொல்லை நீங்க சில மருத்துவ டிப்ஸ்...

உடலில் ஏற்படும் வாய்வுத் தொல்லையை சரி செய்வதற்கான சில மருத்துவ டிப்ஸ்கள் இங்கே...

பெரும்பாலும் 40 வயதை கடந்தவுடன் பெரும்பாலோனோர் சந்திக்கும் பிரச்சனை வாய்வுத் தொல்லை. இப்போதெல்லாம் 10 வயது சசிறுவனுக்கும் வாய்வுத் தொல்லை வந்துவிட்டது. செரிமானத்தில் கோளாறுகள் உண்டாகும்போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும்போது காற்று அதிகமாக உடலில் உருவாகி தொல்லையை தருகிறது. வேலைப் பளு, மன அழுத்தம், நேரம் தவறி சாப்பிடுவது போன்றவை தான் வாய்வுத் தொல்லைக்கு மிக முக்கிய காரணமாகும். இதனைத் தீர்க்க, உங்களுக்காக சில டிப்ஸ் இங்கே...

பப்பாளி : வாயு உருவாகும் சமயங்களில் பப்பாளி ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளுங்கள். இது வாயுவை சமன் செய்கிறது. ஜீரண அமிலங்களை முறையாக தூண்டுகிறது. இதனால் வாய்வு தடுக்கப்படுகிறது.

மசாலா பொருட்கள் : சீரகம், ஏலக்காய், சோம்பு போன்றவை மிகச் சிறந்த நிவாரணிகளாகும். வாயுத் தொல்லை ஏற்பட்டவுடன் இதனை வெறும் வாயில் மென்றால் உடனே நல்ல பலன் கிடைக்கும்.

சீமை சாமந்தி டீ : சீமை சாமந்தி டீ பேக் இப்போது எல்லா சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கும். அதனை வாங்கி தண்ணீரில் தேநீர் தயாரித்து குடித்தால், வாய்வுத் தொல்லை வராமல் தடுக்கும். வந்தாலும் உடனடி நிவாரணம் தரும்.

வாழைப்பழம் : வாழைப்பழம் மிகச் சிறந்த பலனை தரும். வாய்வுத் தொல்லை இருப்பவர்கள் உடனடியாக வாழைப் பழம் சாப்பிட்டால் கட்டுப்படுத்திவிடும்.

தேங்காய் : தேங்காய் துருவலை சாப்பிடலாம் அல்லது தேங்காய் நீர் அல்லது தேங்காய் பாலை குடிப்பதால் வாய்வு தொல்லை குணமாகிறது. இவை ஜீரண உறுப்புகளை ஆசுவாசப்படுத்தி அமில உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது.

பேரிக்காய் : ஆப்பிளைப் போன்ற சத்துக்களுடன் இருக்கும் பேரிக்காயும் வாய்வுத் தொல்லையிலிருந்து விடுதலை தருகிறது. ஜீரண சக்தியையும் தூண்டும். தினமும் 1பேரிக்காய் சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை உண்டாகாது.

புதினா இலைகள் : புதினா அமில உற்பத்தியை தடுக்கிறது. வாய்வினால் அவதியுறும்போது புதினா இலைகளை மென்றால் நல்ல தீர்வு கிடைக்கும். புதினா எண்ணெயை வெந்நீரில் ஒரு துளி கலந்து குடித்தால் வேகமாக பலன் கிடைக்கும்.

மிளகு சூரணம் : மிளகை பொடி செய்து 50 கிராம் எடுத்து, 2 டம்ளர் நீரில் சேர்த்து 20 நிமிடங்கள் நன்றாக காய்ச்சி, அந்த நீரை வடிகட்டி, கால் டம்ளர் அளவு என மூன்று வேளை அருந்தினால் வாயுத் தொல்லை குணமாகும்.

சுக்கு காபி : சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால் வாயுத் தொல்லை நீங்கும். காய்ந்த கறிவேப்பிலை, ஓமம், கசகசா, சுண்டைக்காய் வற்றல், மற்றும் சுக்கு இவற்றில் தேவையான அளவு சமமாக எடுத்து இவற்றை நெய்யுடன் வறுத்து பொடியாக்கி சாப்பிட்டால் வாயுத் தொல்லைக் குணமாகும்.