Sunday, April 28, 2024

ரயில்களில் ஏன் இன்னும் பச்சைக் கொடி காட்டுகிறார்கள்

 ரயில்களில் ஏன் இன்னும் பச்சைக் கொடி காட்டுகிறார்கள்

என்னதான் டெக்னாலஜி வளர்ந்தாலும் ரயில்களில் ஏன் இன்னும் பச்சைக் கொடி காட்டுகிறார்கள் தெரியுமா?


ரயில்கள் ஒரு ஸ்டேஷன் அல்லது ரயில்வே கேட்டை கடந்து செல்லும்போது ஸ்டேஷன் மாஸ்டர்கள் அல்லது பாயிண்ட்மேன்கள் மற்றும் ரயில் இன்ஜின் டிரைவர்கள் பச்சைக் கொடி காட்டுவார்கள்.
தற்போது தொழில்நுட்பம் வெகுவாக வளர்ந்து விட்டது. ஆனால் இன்னமும் பச்சை கொடி காட்டும் நடைமுறை ஏன் பின்பற்றப்பட்டு வருகிறது? என்ற கேள்விக்கான பதிலை இந்த செய்தியில் பார்க்கலாம்


இந்திய ரயில்வே என்பது இந்தியாவின் மிக முக்கியமான போக்குவரத்து. தினமும் லட்சக்கணக்கான மக்கள் இந்த ரயில்களில் தான் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்று வருகின்றனர். இந்த ரயில் என்பது ஒரு தனிநபரால் இயக்கப்பட வேண்டிய விஷயம் அல்ல ஒரு குழுவாகச் செயல்பட்டால் மட்டுமே ஒரு ரயில் இயங்க முடியும். இதனாலேயே இந்தியாவில் ஒரே நிறுவனத்தில் ஏராளமான ஊழியர்கள் இருக்கிறார்கள் என்றால் அது ரயில்வே துறையில் தான் இருக்கிறார்கள்.


இந்நிலையில் ரயில் போக்குவரத்தில் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்து பல விஷயங்கள் இருக்கிறது. சில நேரங்களில் நாம் கண்ணால் சில விஷயங்களைப் பார்த்திருப்போம் அதன் பயன்பற்றி பெரிய அளவில் யோசித்திருக்க மாட்டோம். ஆனால் ரயில்வேயில் அதற்குப் பின்னாலும் ஒரு காரணம் இருக்கும். ரயில்வேயில் காரணம் இல்லாமல் எந்த பொருளையும் பயன்படுத்த மாட்டார்கள்.

நாம் ரயில்களில் பயணம் செய்யும் போது ரயில் இன்ஜின் டிரைவர் ரயில் கிளம்பும் போதும் ஒரு ரயில் நிலையத்திற்குள் நுழையும் போதும் பச்சைக் கொடியைக் காட்டுவார் ரயிலில் ஸ்டேஷன் மாஸ்டர் அல்லது பாயிண்ட் மேனும் பச்சைக் கொடி காட்டுவார்கள். இது நாம் சிறு வயது முதலே பார்த்துக்கொண்டிருக்கும் பழக்கம். ரயில்வேயில் தாங்கள் கிளம்புவதையும் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு தெரிவிக்கவும் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் அந்த ரயிலைக் கடந்து செல்ல அனுமதிப்பதற்காகவும் இந்த பச்சை கொடி பயன்பட்டது.

ஆனால் இன்று தொழிற்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது தொடர்பு கொள்வதற்கு ஏராளமான வழிகள் இருக்கின்றன. இந்த பச்சை கொடி என்பது ரயில்வேயில் சிக்னல் என்ற விஷயம் அறிமுகப்படுத்துவதற்கு முன்னால் கொண்டு வரப்பட்டது. இன்று அன்று தொடர்பிற்குப் பெரிய அளவில் வாய்ப்பு இல்லை என்பதால் எளிமையான தொடர்பிற்காக சிஸ்டம் கொண்டு வரப்பட்டது.

ஆனால் இன்று தொழிற்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்டாலும் தொடர்ந்து இன்ஜின் டிரைவர்களும், ஸ்டேஷன் மாஸ்டர் அல்லது பாயிண்ட் மேன் பச்சை கொடி காட்டும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது இது ஏன் எனப் பலருக்குக் குழப்பம் இருக்கலாம். இன்று என்னதான் தொழிற்நுட்ப வசதி இருந்தாலும் தொடர்ந்து இந்த பச்சை கொடி அசைப்பதால் ஒரு குறிப்பிட்ட தகவல் பறிமாறப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது.

ரயில்கள் பெரும்பாலும் இரவு நேரத்திலேயே இயக்கப்படுகின்றன. ரயில்களில் படுத்துத் தூங்கும் வசதி இருப்பதால் நீண்ட தூரப் பயணமாக இருக்கும் என்பதாலும் மக்கள் பகல் நேரத்தைப் பயணத்தில் வீணாக்காமல் இருக்க இரவு நேரப் பயணம் மேற்கொள்வார்கள். இந்நிலையில் ரயில் ஓட்டுநர்கள் இரவு முழுவதும் முழித்திருந்து ரயிலை இயக்க வேண்டும்.அப்பொழுது தான் பாதுகாப்பான பயணம் அமையும்.

ஆனால் நள்ளிரவு நேரங்களில் ரயிலில் டிரைவர்கள் தூங்காமல் இருக்க வேண்டும். அப்படித் தூங்கிவிட்டால் ரயில் விபத்தில் கூட சிக்கலாம். ஆனால் அதற்காக தொழிற்நுட்ப விஷயம் இருந்தாலும், ரயில் ஒரு ஸ்டேஷனை கடந்து செல்லும் போது ரயில் வே ஸ்டேஷனில் இருக்கும் ஊழியர் ரயிலை பார்த்து பச்சை கொடி அசைப்பார் ரயில் டிரைவரும் இவருக்குப் பச்சைக் கொடி அசைப்பார் இதனால் ரயிலில் டிரைவர் அலார்ட்டாக இருக்கிறார்கள் என அர்த்தம்.

ஒருவேலை ரயில் டிரைவர் பச்சைக் கொடி அசைக்கவில்லை என்றால் உடனடியாக ரயில்வே ஸ்டேஷனில் உள்ள ஊழியர் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிப்பார் அவர்கள் உடனடியாக குறிப்பிட்ட ரயில் ஓட்டுநரைத் தொடர்பு கொண்டு அவர் அலர்ட்டாக இருப்பதை உறுதி செய்வார்கள். அப்பொழுதும் ரயில் டிரைவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் கார்டை தொடர்பு கொண்டு ரயிலை நிறுத்த உத்தரவிடுவார்கள்.

அதே போல சில கிராமப்புற ரயில் நிலையங்கள் ஊருக்கு வெளியே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும். அந்த இடமும் ஸ்டேஷன் ஊழியர்களுக்குப் பாதுகாப்பில்லாத விஷயமாக இருக்கும். ரயில் டிரைவர்களும் குறிப்பிட்ட ஸ்டேஷன்களில் ஸ்டேஷன் மாஸ்டர் பச்சைக் கொடி காட்டவில்லை என்றால் அங்கு ஏதோ பிரச்சனை எனக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிப்பார். உடனடியாக கட்டுப்பாடு அறை அதிகாரிகள் அந்த ஸ்டேஷன் மாஸ்டர்களை தொடர்பு கொள்ள முயற்சிப்பார்

அப்படி தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் அடுத்ததாக அந்த பகுதியைக் கடந்து செல்லும் ரயிலை குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் நிறுத்த உத்தரவிடுவார்கள். அந்த ரயிலில் உள்ள ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படும். அவர்கள் அந்த ஸ்டேஷனை சோதனையிட்டுக் குறிப்பிட்ட ஸ்டேஷன் ஏன் பதிலளிக்கவில்லை என இவர்கள் பார்க்க வேண்டும்.

இந்த விஷயத்திற்காகத் தான் இன்று எவ்வளவுதான் தொழிற்நுட்பம் வளர்ந்தாலும் ரயில்களில் இன்றும் பச்சைக் கொடியைக் காட்டும் வழக்கம் இருக்கிறது. என்னதான் தொழிற்நுட்பம் வளர்ந்தாலும் சில விஷயங்களை இன்றும் மேனுலாக மட்டுமே உறுதி செய்ய முடியும் என்பதற்கு இது மிகப்பெரிய உதாரணம்.