Friday, September 20, 2019

திருவல்லம் பரசுராமர் ஆலயம் - "தட்சிண கயை' - புண்ணிய சேத்திரம்

திருவல்லம் பரசுராமர் ஆலயம் - "தட்சிண கயை' - புண்ணிய சேத்திரம்


          திருவல்லம் பரசுராமர் ஆலயம் - "தட்சிண கயை' - புண்ணிய சேத்திரம் >> பரசுராமர் முகம் சந்தனத்தில் வரையப்பட்டுள்ளது . ஐயனை தரிசிக்க கண் கோடி வேண்டும் . பரசுராமர் வடக்கு பார்த்து இருக்கிறார். பரமசிவன் கிழக்கு பார்த்து. பகவதி, கணபதி கோயில்கள் இருக்கின்றன. பரசுராமர் சகல கலைகளையும் கற்றவர். அஸ்திரம் பிரயோகிப்பதில் இவருக்கு நிகர் யாருமில்லை. >> பரசுராமருக்கு பிறகு மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோரால் பரசுராமர் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை பூஜை செய்துள்ளனர். பரசுராமர் தன் தாய்க்கு பிதுர் தர்ப்பணம் கொடுத்த தலமாதலால் இத்தலம் "தட்சிண கயை' ன்னும் அழைக்கப்படுகிறது. >> 


          இறந்தவர்களின் ஆன்மா உயர்ந்த நிலையை அடையவும், கொடிய மரணமடைந்தவர்களின் ஆன்மா அமைதியடையவும் சிறப்பு வழிபாடுகளைச் செய்யச் சிறந்த தலமாகக் கேரள மாநிலம், திருவல்லம் பரசுராமர் கோவில் அமைந்திருக்கிறது. >> கரமனை ஆறு, கிள்ளியாறு, பார்வதிபுத்தனார் ஆறு ஆகிய மூன்று ஆறுகள் சேருமிடத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா என மூவருக்கும் தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன. இங்குள்ள சிவ பெருமானை பரசுராமரும், விஷ்ணுவின் தோற்றமான வேதவியாசரை விபா கரண முனிவரும், பிரம்மாவை ஆதிசங்கரரும் நிறுவினர் என்று இக்கோவிலுக்கான தல வரலாறுகள் தெரிவிக்கின்றன. இக்கோவில் வளாகத்தில் பகவதி, கணபதி ஆகியோருக்கும் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. >> இங்குள்ள விஷ்ணுவின் தோற்றத்திலான வேதவியாசர் சன்னிதியில், குழந்தைகள் கல்வியில் சிறப்பு பெற்றிட வேண்டிச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அருகிலுள்ள பிரம்மன் சன்னிதியில் நோயற்ற நீண்ட கால வாழ்க்கை வேண்டி வழிபாடுகள் செய்யப்படுகின்றன
   

         
                 இங்குள்ள பரசுராமர் பாதம் பொறிக்கப்பட்ட பீடத்தின் முன்பாக, அமைதியான மனநிலை அளிக்க வேண்டிப் பலரும் வணங்கிச் செல்கின்றனர். பிதுர் தர்ப்பணம் : >> முன்னோர்களில் மூன்று தலைமுறையினர்களின் உயர்வுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் செய்யப்படும் சடங்கை, ‘பிதுர் தர்ப்பணம்என்று சொல்கின்றனர். பிதுர் உலகத் தேவதைகளான வசு, ருத்ர, ஆதித்யர்களை எள் மற்றும் தண்ணீரால் நினைத்துக் கொண்டு இந்தச் சடங்கு செய்யப்படுகிறது. இந்தச் சடங்கின் முடிவில் எள் கலந்தத் தண்ணீர், இறந்தவர்கள் பூவுலகில் செய்த செயல்பாடுகளுக்கேற்பத் தற்போதடைந்திருக்கும் நிலையில் அமிர்தமாகவோ, நெய்யாகவோ, தண்ணீராகவோ, பாலாகவோ, புல்லாகவோ, ரத்தமாகவோ மாறி, அவர்கள் பெற்றுக் கொள்ளும்படியாக வேண்டிக் கொள்ளப்படுகிறது. இதன் மூலம் அந்த ஆன்மா மகிழ்ச்சியையும், உயர்வையும் அடையும் என்பது இச்சடங்கின் நம்பிக்கை .. 
 
             
                   தல வரலாறு : >> ஜமத்கனி முனிவர் - ரேணுகாதேவி தம்பதியரின் கடைசி மகனாகப் பிறந்தவர் ராமர். விஷ்ணுவின் ஆறாவது தோற்றமாகக் கருதப்படும் அவர், சிவபெருமானை வழிபட்டு, அவரிடமிருந்துபரசுஎனும் கோடாரியைப் பெற்றதால்பரசுராமர்என்று அழைக்கப்பட்டார். ஒரு நாள் ரேணுகாதேவி ஆற்றில் குளிக்கச் சென்றார். அவர் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கிய போது, வானத்தில் சென்று கொண்டிருந்த ஒரு கந்தர்வனின் நிழல், அந்த ஆற்று நீரில் தெரிந்தது. ஆற்று நீரில் தெரிந்த நிழல் உருவத்தைப் பார்த்து அவர் வியப்படைந்தார். இந்தக் காட்சி தியானத்திலிருந்த ஜமத்கனி முனிவரின் மனதில் தோன்றி மறைந்தது. உடனே ஜமத்கனி முனிவர், தனது மகன் பரசுராமரை அழைத்து, ‘உன் தாய், கந்தர்வன் ஒருவனைப் பார்த்து மயக்கம் கொண்டு விட்டாள். உடனடியாக அவளைக் கொன்று விட்டுத் திரும்பி வாஎன்று ஆணையிட்டார். தந்தையின் ஆணையைக் கேட்டப் பரசுராமர், தனது தாய் என்றும் பாராமல் ரேணுகா தேவியைக் கொன்று விட்டுத் திரும்பினார். திரும்பி வந்த அவர், ‘தந்தையே, தங்களின் ஆணைப்படி நான் தங்களது மனைவியைக் கொன்று விட்டேன். ஆனால், தற்போது நான் தாயை இழந்து நிற்கிறேன். என் மனம், தாயன்பை வேண்டித் தவிக்கிறது. என் தாயின் உடலை உயிர்ப்பித்துத் தந்திட வேண்டும்என்று வேண்டினார். ஜமத்கனி முனிவரும், தான் சொன்னதைக் கேட்டு எந்த மறுப்பும் சொல்லாமல், தன் தாயையே கொன்று திரும்பிய மகனின் வேண்டுகோளை நிறைவேற்ற முன் வந்தார். உடனே அவர், தன் மனைவியின் உடலுக்கு உயிர் கொடுத்து, முன்பு போலவே திரும்பி வரச் செய்தார்

             பின்னொரு நாளில் ஜமத்கனி முனிவருடன் பகை கொண்டிருந்த அரசன் ஒருவன், யாருமில்லாத வேளையில் ஆசிரமத்துக்குச் சென்று, கண்களை மூடி தியானத்தில் இருந்த ஜமத்கனி முனிவரைக் கொன்றுவிட்டு தப்பிச் சென்று விட்டான். இதனையறிந்த பரசுராமர், அந்த அரசனைத் தேடிச் சென்று கொன்றார். அத்துடன், அரச குலத்தினர் அனைவரையும் தானே அழிப்பதாகச் சபதம் செய்தார். அதே வேளையில், திருமணம் செய்து கொண்டிருக்கும் அரசர்களை மட்டும் ஒரு வருடம் வரைக் கொல்வதில்லை என்று முடிவு செய்து கொண்டார். தான் செய்த சபதத்தின்படி அரச குலத்தைச் சேர்ந்த பலரையும் தேடிச்சென்று, அவர்களுடன் சண்டையிட்டு, அவர்களை அழித்துக் கொண்டிருந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, தன் தாயைக் கொன்றது, அரசர்களைப் போட்டியிட்டுக் கொன்றது போன்ற செயல்கள் அவரது மனதில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி, அவருக்குப் பெரும் துன்பத்தைத் தந்தது. அந்த துன்பத்திலிருந்து விடுபட விரும்பிய அவர், இனி எவருடனும் போர் செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்து, இறைவழிபாட்டில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். தான் செல்லும் இடங்களிலெல்லாம் இறையுருவங்களை நிறுவி, அதற்குச் சிறப்பு வழிபாடுகளைச் செய்தபடி பயணித்துக் கொண்டிருந்தார். அப்படி ஒருநாள், கேரள மாநிலத்தில் ஓடிக்கொண்டிருந்த கரமனை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அந்த ஆற்றில் அவருக்குச் சிவலிங்கம் ஒன்று கிடைத்தது. அந்தச் சிவலிங்கத்தை ஆற்றின் கரைப்பகுதியில் நிறுவி வழிபாடு செய்யத் தொடங்கினார். அப்போது அவர், தன் தாயைக் கொன்ற பாவம், பல அரசர்களைக் கொன்ற பாவமெல்லாம் நீங்கியதாக உணர்ந்தார். அந்தக் கோவிலிலேயே தன் தாயின் ஆன்மா உயர்வுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் ஆன்மா அமைதி வழிபாட்டுச் சடங்கினைச் (பிதுர் தர்ப்பணம்) செய்தார். அந்தச் சடங்கிற்குப் பின்பு, அவருடைய அம்மாவின் ஆன்மா உயர்வு கிடைத்தது தெரிந்து மகிழ்ந்தார். அவருக்கு ஏற்பட்டிருந்த மன வருத்தமெல்லாம் மறைந்து போனது. பரசுராமர் சிவபெருமானை வழிபட்ட இடத்தில், அவரது பாதம் பொறிக்கப்பட்ட பீடம் ஒன்று இருக்கிறது. இந்தப் பீடத்தின் அருகில் பரசுராமர் கோடாரியுடன் நிற்கும் சிலை ஒன்று இருக்கிறது. இங்குள்ள பீடத்திற்குத் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன

திருவல்லம் பெயர்க் காரணம் : >> 

         திருவல்லம் பரசுராமர் கோவில் விஷ்ணுவின் தலைப்பகுதியாகவும், திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில் விஷ்ணுவின் உடல் பகுதியாகவும், திருவனந்தபுரம் அருகே உள்ள திருப்பாதபுரம் கோவில் விஷ்ணுவின் கால் பகுதியாகவும் விளங்குவதாக ஐதீகம். ஒரே நாளில் இம்மூன்று தலங்களுக்கும் சென்று இறைவனை வணங்குவது அனைத்து நலன்களையும், வளங்களையும் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. முற்காலத்தில் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியின் தலைப் பகுதி தற்போது திருவல்லம் என்றழைக்கப்படும் பகுதி வரை நீண்டிருந்ததாம். எனவே திருவல்லம் என்ற இடத்தை தமிழில்தலைஎன்று பொருள் தரும் மலையாள மொழிச் சொல்லானவல்லம்என்ற பெயரில் அழைத்தனர். இறைவனின் தலைப்பகுதி என்பதைத் தெரிவிக்கும் விதமாகத்திருவல்லம்என்கின்றனர். திருவனந்தபுரம் பத்மநாபரை நிறுவிய வில்வ மங்களம் சுவாமிகள் செய்த வழிபாட்டால், திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியின் உருவம் தற்போது உள்ள அளவுக்குச் சுருங்கிப் போய் விட்டதாக இக்கோவிலின் தல வரலாறுகளில் சொல்லப்பட்டிருக்கின்றன.. அமைவிடம் : கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரம் நகரிலிருந்து கோவளம் கடற்கரைக்குச் செல்லும் புறவழிச் சாலையில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது 

                     திருவல்லம் திருத்தலம் ஆலயம் தினமும் அதிகாலை 5 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் தினசரி வழிபாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆலயத்தில்திருவோணம் ஆறாட்டுமற்றும்பரசுராமர் ஜெயந்திஎனும் இரு விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

No comments:

Post a Comment