1924. Old Thanjavur ... பழைய தஞ்சாவூர் ... குண்டு பல்பு
நம்ம ஊருக்கு கரண்ட் ... “பைக்காரா” லைன் .. வந்த கதை.. தஞ்சை டவுனுக்கு கரண்ட் வந்து 100 ஆண்டுகள் ஆகிடுச்சு!!
1924 ஆம் ஆண்டில் தஞ்சை ரயில்வே ஸ்டேஷன் சாலையில் (இப்போது காந்திஜி சாலை) தெரு விளக்குகள் அமைப்பதற்காக எண்ணெய் இயந்திரங்களின் (ஜெனெரேட்டர்) உதவியுடன் முதன்முதலில் சிறிய அளவில் மின்சாரம் தயாரிக்கத் தொடங்கியது ஒரு தனியார் நிறுவனம் .
குண்டு பல்புகள் என்று சொல்லக்கூடிய மின்சார விளக்குகள் முதன் முதலாக தெரு விளக்குகளாக ரயில்வே ஸ்டேஷன் சாலையில் எரிய தொடங்கின..
ஆங்கிலேய கிழக்கு இந்தியா கம்பெனி தஞ்சாவூர் நாட்டை, 1799 முதல் , தஞ்சாவூர் கோட்டை நகர் நீங்கலாக, ஆள தொடங்கினர். அதாவது 1799 முதல் 1858
வரை, இப்போதுள்ள தஞ்சாவூர் நகரம் இரண்டு நாடுகளாக இருந்தது . கோட்டை சுவர் மற்றும் நான்கு வீதிகளின் உள்ளடங்கிய பகுதி மராத்திய ராஜ்யமாக இருந்தது . கோட்டைக்கும் வெளியே வெள்ளைக்காரன் ஆட்சி !! அதாவது கீழவாசல், கரந்தை, மகர்நோம்புச்சாவடி, பூக்கார தெரு, வண்டிக்காரத்தெரு ... வல்லம் வரை வெள்ளைக்கார நாடாக இருந்தது .
1858ல் பிரிட்டிஷ் அரசாங்கம், மராட்டியர்களிடமிருந்து தஞ்சாவூர் கோட்டை நிர்வாகத்தையும் ஏற்றுக்கொண்டபின், 1866ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியர்களால் தஞ்சை உள்ளாட்சி அமைப்பு (முனிசிபாலிடி/ நகராட்சி) உருவாக்கப்பட்டது. அதன் பின் ஏகப்பட்ட வளர்ச்சி திட்டங்களை உருவாக்கியது.
1924க்கு முன்னதாக ‘லாந்தர் ‘விளக்குகள் மற்றும் ‘காஸ் லைட்’கள் தெரு விளக்குகளாக இருந்தன. ("லான்டர்ன்" (Lantern) என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து "லாந்தர்" தெரு விளக்கு என்ற பெயர் உருவானது ...."ஹரிகேன்" (Hurricane Lamp - கப்பல்களில் உபயோகிக்க கூடிய புயல் விளக்கு) என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து "அரிக்கன் லைட்" உருவானது ...
வெள்ளையர்கள் வந்த பிறகு கண்ணாடி சிம்னி விளக்குகள் (புகை கூண்டு அமைப்புடன்) மற்றும் லாந்தர் விளக்குகள் அறிமுகம் ... நாளடையில் சிம்னி விளக்குகளை "சிம்லி" விளக்கென்றும் கூறினர்.
1889ல் முதல் மண் எண்ணெய் உற்பத்தி இந்தியாவில், அசாம் மாநிலத்தில் உள்ள “டிக்பாய்” நகருக்கு அருகில் தொடங்கியது.
1864 முதல், “சிம்லா”, பிரிட்டிஷ் இந்தியாவின் கோடைகால தலைநகராக விளங்கியது. இமாலயா மலை பகுதியை சார்ந்த “சிம்லா” பிரபலமாக இருந்ததால் ஆஸாமில் கண்டுபிடித்த எண்ணையை “சிம்லா எண்ணெய்” என்றே பொதுவாக குறிப்பிட்டனர் ... காலப்போக்கில் ... பேச்சுவாக்கில் “சிம்லா எண்ணெய்” ..
"சிமிலி எண்ணெய்"
என்று பெயர்பெற்றது ... அதனை ஊற்றி எரிகின்ற விளக்குகளுக்கு "சிமிலி விளக்கு" என்று பெயர் வந்தது ...
1869ல் .. தஞ்சாவூரில் தெரு விளக்குகள் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டன. இது பொதுவாக தூண்களில் இருக்கும்.... நான்கு ராஜ வீதிகளிலும் ... தெரு மூலைகளில் மற்றும் முக்கிய இடங்களில் நிறுவப்பட்டன. .. அந்த விளக்குகளில் “ஆமணக்கு எண்ணை”யை விட்டு எரியவிட்டனர் ... விளக்குகளுக்கு ஆமணக்கு எண்ணெய் உபயோகிக்கப்பட்டதால் அதற்கு “விளக்கெண்ணெய்” என்று பெயர் வந்தது பிற்காலத்தில் தான் மண்ணெண்ணெய் உபயோகிக்கப்பட்டது..
1929 -1930 முதல் தஞ்சை நகராட்சி சொந்தமாக மின்சாரம் உற்பத்தி செய்து விநியோகித்து.
1927 ஆம் ஆண்டு, மின் திட்டங்களைத் தொடங்க, பிரிட்டிஷ் அரசு, முதன் முதலாக மின்சாரத் துறையை ஏற்படுத்தியது ... மின் திட்டங்களையும் வெற்றிகரமாக நிறுவிய பெருமை இந்தியாவின் முதல் மின்சார பொறியாளர் சர் ஹென்றி ஹோவர்ட்.அவர்களை சாரும்.
1930 - 1940 களில் பைக்காரா மின் உற்பத்தி நிலையம் மற்றும் மேட்டூர் மின் உற்பத்தி நிலையம் செயல்பட தொடங்கின ... அணைக்கட்டுகள் மூலம் தயாரிக்கப்பட்ட மின்சாரம், பொதுவிநியோகத்திற்கு விற்கப்பட்டது ..அவை தஞ்சைக்கு மின்சாரம் வழங்கத் தொடங்கின .... மாநில ஹைட்ரோ கிரிடில் (State Hydro Grid) இருந்து மின்சாரத்தை வாங்கி மொத்த மின்சாரத்தை விநியோகத்தில் ஈடுபட்டன தனியார் நிறுவனங்கள்.
அந்த கால கட்டத்தில் பெரிய மின் கம்பங்கள் நிறுவப்பட்டு மின் கம்பிகள் மூலம் வந்ததை தஞ்சை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர் ... மின் கம்பிகள் மூலம் வரும் மண்ணெண்ணெய் மூலம் தான் விளக்குகள் எரிகிறது என்று நம்பின காலம் அது!! (அதே பழக்கத்தில் தான் இன்றும் நாம் "பல்பு எரியுதா?" .. என்று கேட்பது பழக்கமானது).
தஞ்சையில் பெரிய மின் கம்பங்களை பார்த்தால் இன்றும் அதை
"பைக்காரா லைன்"
என்றுதான் வயதானவர்கள் கூறுவார்கள் .. ஏனென்றால் தஞ்சைக்கு முதன் முதலில் பைக்காராவில் இருந்து தான் கரண்ட் வந்தது .
‘மோயார்’ மின் திட்டம், மேட்டூர் மின் திட்டம், ‘பைக்காரா III’ நிலை மின் திட்டம், மதுரைக்கு அருகிலுள்ள சமயநல்லூரில் உள்ள அனல் மின் திட்டம், ‘பாபனாசம் II’ நிலை மின் திட்டம், ‘பெரியார்’ மின் திட்டம் ... ஆகிய திட்டங்கள் ஆங்கிலேயர் ஆட்சியின் போது உருவாக்கப்பட்டது.
இந்திய சுதந்திரத்திற்கு பிறகு ‘குந்தா ஹைட்ரோ-எலக்ட்ரிக் திட்டம்’ மற்றும் நெய்வேலி மின் உற்பத்தி ஆகியவை காமராஜரின் ஆட்சியின் போது தொடங்கப்பட்டன. அதே காலகட்டத்தில் தான் பைக்காரா, மேட்டூர் , எண்ணூர் , பெரியார் போன்ற பழைய மின் நிலையங்கள் அபிவிருத்தி செய்து மேம்படுத்தப்பட்டது ... அதிக அளவு மின் உற்பத்தி செய்யப்பட்டது ... அதன் காரணமாக தான் "பசுமை புரட்சி"
மற்றும் "வெண்மை புரட்சி" திட்டங்கள் முதன் முதலாக காமராஜரால் உருவாக்கப்பட்டது. விவசாய பாசனத்திற்கு தாராளமாக மின்வசதி செய்து தரப்பட்டது .. அதன் காரணமாக மெட்றாஸ் மாநிலம் பால் உற்பத்தியிலும், நெல் மற்றும் பிற விவசாய உற்பத்தியிலும், தன்னிறைவு பெற்றது ..
தஞ்சை மாவட்டத்தில் மின் விநியோகம், உள்ளாட்சி அமைப்புகள் அல்லது தனியார் நிறுவனங்களின் கைகளில் இருந்தது. இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களையும் கையகப்படுத்த அரசாங்கத்திற்கு உதவும் வகையில் 1949ல் சட்டம் இயற்றப்பட்டது.
மின்சாரம் வந்ததை அடுத்து நேரடியாக வந்த ஒரு நலத்திட்டம் ... "கிராமப்புற ஒலிபரப்பு மற்றும் மக்கள் வானொலி கேட்கும் திட்டம்". பல இடங்களில் வானொலி பெட்டிகள் நிறுவப்பட்டன, இந்த வானொலி தொகுப்புகள் பொதுவாக ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் ஒலிபரப்பப்பட்டன. இந்த வசதியைப் பெற்ற முதல் மாவட்டங்களில் தஞ்சை ஒன்றாகும். 1938 ஆம் ஆண்டில் தஞ்சையில் ராணி பூங்கா / ராஜப்ப பூங்காவில் ஒரு வானொலி பெட்டி இருந்தது .. மாலை நேரங்களில் இந்த ஒலி பரப்பைக் கேட்க ஒரு கூட்டம் இங்கே கூடும்.
மின்சாரம் வந்தவுடன் சினிமா கொட்டகைகள் 1930 களில் இருந்து தஞ்சையில் நிறுவப்பட்டன ....
மின்சக்தி வருகையால் வாழ்க்கை தரம் வெகுவாக 1940-50 -60 களில் இருந்து மாற தொடங்கின ... வசதி பெற்ற வீடுகளில் மெதுவாக குண்டு பல்பு லைட், பேன், மற்றும் ரேடியோ புக ஆரம்பித்தன ... ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக 6 மணிக்கு உறங்க போன ஊர் ... விடிய விடிய விழித்திருக்கும் சக்தி பெற்றன... இரவு பகலானது!!
No comments:
Post a Comment