Followers

Sunday, July 30, 2017

அம்புலிமாமா கதைகள்...



            ஆயிரத்து தொளாயிரத்து எழுபதுகளிலும், எண்பதுகளிலும்  மிகவும் புகழ் பெற்று விளங்கிய மாணவர் நூல்களில் அம்புலிமாமா முதல் இடத்தில்  இருந்ததெனச் சொல்லலாம்.

பள்ளிசெல்லும் பிள்ளைகளுக்குத்தான் என்றாலும் அம்புலிமாமா கதைகளும், அவற்றில் சொல்லப்பட்ட நீதிகளும் மனிதர்கள் அனைவருக்கும் என்றால் அது மிகையாகாது.

நல்லது கெட்டதென இரு வேறுபாடுகளையும் சொல்லி, "நல்லது செய்யின் நல்ல முடிவும், தீயது செய்யின் அதன் விளைவு தீமை" என்றும் இளம் வயதிலேயே சொல்லித்தந்து பிள்ளைகளை சீர்படுத்திச் சென்ற பெருமை அம்புலிமாமாவிற்கு உண்டு. அறிவுரைகளைச் சொன்ன அதேநேரம், ஆக்கபூர்வமான கருத்துக் குவியலாகவும் ஒவ்வொரு இதழும் வெளிவந்தது.

வேதாளமும் விக்ரமாதித்தனும் தொடர் எனக்கு மிகவும் பிடித்தது.

ஒவ்வொரு கதையும்,
"தன்முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான்..."
எனத்தொடங்கி...

"விக்ரமனின் இந்த சரியன பதிலால் அவனது மௌனம் கலையவே வேதாளம் தான் சுமந்து வந்த உடலோடு மீண்டும் முருங்க மரத்தில் ஏறிக்கொண்டது..."
என முடியும்.

கதையின் முடிவில் வேதாளம் கேட்கும் கேள்விக்கான பதிலை விக்ரமாதித்தன் எப்படிச்  சொல்லுவான் என முன்கூட்டியே யூகிக்கும் அன்றிருந்த  ஆர்வத்தை இன்று நினைத்தாலும் முகத்தில் புன்னகையை வரவழைக்கிறதுகாரணம் சில நேரங்களில் எனது யூககத்திற்கும் அப்பாற்பட்டதாக  முடிவுகள் இருந்தன. "அடடா... இதைக் கவனிக்காது போனோமே எனவும்  எண்ணியதுண்டு.

கணினியின் வரவால் அம்புலிமாமா இதழ்கள் அதிகம் பேசப்படாது போனாலும், மாணவர்களின் மொழித்திறனை வளர்க்கவும்,  வாசிக்கும் பழக்கத்தினை தூண்டவும் ஆசிரியர்கள் அதனை பள்ளிப் பிள்ளைகளுக்கு பரிந்துரை செய்யலாம்.

No comments:

Post a Comment