Sunday, January 11, 2026

திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர்

திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர்

திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ! சனீஸ்வரரைபொங்கு சனியாக மாற்றிய திருக்கொள்ளிக்காடு! - சூரியனுக்கு வரம் தந்த அக்னீஸ்வரர் வழிபட்டு மகிழ்வோம்

சனீஸ்வரரைபொங்கு சனியாக மாற்றிய திருக்கொள்ளிக்காடு! - சூரியனுக்கு வரம் தந்த அக்னீஸ்வரர்

சூரியனாருக்கு வரம் தந்த அக்னீஸ்வரர் கோயில், திருக்கொள்ளிக்காடு எனும் தலத்தில் அமைந்துள்ளது. சனீஸ்வரர் தவமிருந்து வழிபட்டதால், பொங்கு சனீஸ்வரர் எனும் பெருமை பெற்ற திருத்தலமும் இதுதான்! பொங்கு சனியை நினைத்து எள் தீபம் ஏற்றுங்கள்.

வெப்பத் தகிப்பை யாரால்தான் தாங்கிக் கொள்ளமுடியும். சூரியனாரின் மனைவி உஷாவால் சூரியனாரின் உஷ்ண உக்கிரத்தைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. பக்கத்தில் நெருங்கமுடியாமல் மருகினார். நிழலாக உள்ள சாயாதேவியை சூரியனாருக்கு மணம் செய்துவைத்தார். சாயாவாலும் சூரியத் தகிப்பை தாங்கமுடியவில்லை.

இதனால் பாவம்... சூரியனார் நொந்துபோனார். என்ன செய்வது எனத் தெரியாமல், திருக்கொள்ளிக்காடு எனும் திருத்தலத்துக்கு வந்து சிவனாரை நினைத்து தவம் புரிந்தார். சூரிய பகவானின் தவத்தில் மகிழ்ந்த ஈசன், சூரியனாருக்கு வரமளித்தார். அதன்படி சூரியனார் - உஷா தம்பதிக்கு எமதருமர், சூரியனார் - சாயா தம்பதிக்கு சனீஸ்வரர் மகனாக அவதரித்தார்கள் என்கிறது புராணம்.

நவக்கிரகங்களில் ஒரு கிரகமாக இடம்பிடித்தார் சனீஸ்வரர். ஆனாலும் அவருக்கு ஒரு வருத்தம்... தன்னைக் கண்டு எல்லோரும் நடுநடுங்கிப் போகிறார்களே என்று! தந்தை காட்டிய வழியாக, திருக்கொள்ளிக்காடு திருத்தலத்துக்கு வந்தார். கடும் தவம் புரிந்தார். சிவபூஜைகள் செய்தார். இதனால் சிவனருள் பெற்று, பொங்கு சனியானார்.

வெப்பத் தகிப்பு கொண்ட சூரியனார் வணங்கி வழிபட்ட திருத்தலம் என்பதால் சிவனாருக்கு அக்னீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்ததாகவும் சொல்வார்கள். அக்னிப் பிழம்பென சனீஸ்வரருக்கு காட்சி தந்து அருளியதால் இந்தப் பெயர் அமைந்ததாகவும் ஸ்தல புராணம் தெரிவிக்கிறது.

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கொள்ளிக்காடு. இங்கே சிவனாரின் திருநாமம் - அக்னீஸ்வரர். முக்கியமாக, பொங்கு சனி பகவான் தனிச்சந்நிதியில் காட்சி தருகிறார் இங்கே! கைகளில், கலப்பை, காகத்தின் சின்னம்பொறிக்கப்பட்ட கொடி, அபய வரத முத்திரை என காட்சி தருகிறார்.

இன்னொரு சிறப்பு... சனீஸ்வரருக்கு அருகில் தனிச்சந்நிதியில் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீமகாலட்சுமித் தாயார். எனவே, திருக்கொள்ளிக்காட்டில் பொங்கு சனீஸ்வரரையும் மகாலக்ஷ்மி தாயாரையும் மனதார வேண்டிக்கொண்டாலே, மங்கல காரியங்கள் சீரும் சிறப்புமாக நடைபெறும். ஐஸ்வர்ய கடாக்ஷம் பெருகும் என்பது ஐதீகம். கிரக தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும் என்கிறார்கள் பக்தர்கள்.

சனிபகவான் பாதிப்பில் இருந்து தப்பிக்க

சனிபகவான் பாதிப்பில் இருந்து தப்பிக்க

பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு விநாயகரை வணங்க வேண்டும். பிறகு விநாயகரை மூன்று சுற்று சுற்ற வேண்டும். அப்போது கையில் உள்ள அரிசியை போட வேண்டும். அதை எறும்புகள் தூக்கி செல்லும். அப்படி தூக்கி சென்றால் நமது பாவங்களில் பெரும்பாலனவை நம்மை விட்டு போய்விடும். வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால் அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்ய வேண்டும்.

பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்துக்காக சேமித்து வைத்து கொள்ளூம். இரண்டரை ஆண்டுகளுக்கு எறும்புக்கு அந்த உணவு போதும். இதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை கிரக நிலை மாறும். அப்போது பரிகாரம் வலுவிழந்து விடும். எனவே நாம் அடிக்கடி பச்சரிசி மாவை எறும்புக்கு உணவாக போட வேண்டும். ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம். இதன் மூலம் இந்த பரிகாரத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனிபகவான் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.

ஒருவருக்கு சனி திசை வந்து விட்டால் கூடவே சந்தேகத்தையும் ஏற்படுத்தி விடுவார். யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அஷ்டமத்து சனி நேரடி சண்டையை உருவாக்காது. நம்மை சேர்ந்த உறவினர்கள் மூலம் பிரச்னைகளை உருவாக்கி விடும். இதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் வருமாறு….

தேவை இல்லாமல் சந்தேகப்படக் கூடாது. உப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும். சுவையான உணவுகளை தவிர்க்க வேண்டும். சகிப்புத் தன்மையை அதிகரிக்க வேண்டும். எது நடந்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்ற வேண்டும். மன நலம் குன்றியவர்களுக்கு உதவ வேண்டும்.

பிரதோஷ பூஜைகளில் பங்கேற்பது நல்லது. சனி தசை நடக்கும் போது எந்த செயல் செய்தாலும் தாமதமாகும். அதற்காக கோபப்படக் கூடாது. பொறுமையாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். இப்படி நம்மை மாற்றிக் கொண்டால் சனி பாதிப்பில் இருந்து சற்று தப்பிக்கலாம்.

இன்னும் இதுபோன்ற பரிகாரம் மனமுருகி வழிபட்டு செய்தால் சனிபகவானின் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபடலாம்……………

திருக்கொள்ளிக்காடு பொங்கு சனி பகவானை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் அவரை நினைத்து விளக்கேற்றுங்கள். எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. பிறகொரு நாளில், திருக்கொள்ளிக்காடு சென்று அக்னீஸ்வரரையும் பொங்கு சனீஸ்வரரையும் கண்ணாரத் தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள். கஷ்டமெல்லாம் தீரும். கவலைகள் அனைத்தும் பறந்தோடும்!

No comments:

Post a Comment