Saturday, February 26, 2022

இரண்டு செப்புக்காசு ஒரு குவளை மது ஒரு கூடை சோறு

 இரண்டு செப்புக்காசு ஒரு குவளை மது ஒரு கூடை சோறு


மாபெரும் சாம்ராஜ்யத்தின் மன்னர் ஒருவர் ரதத்தில் பவனி வரும்பொழுது உடன் இருந்த மந்திரி கேட்டார்,

 "மன்னா! நாட்டு மக்களை கடுமையாக வேலை வாங்குகிறீர்கள். அவர்களும் சலிக்காமல் வேலை செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு கூலியாக இரண்டு செப்புக் காசுகளும், ஒரு குவளை மதுவும், ஒரு கூடை சோறு மட்டும் தருகிறீர்களே! இது அநியாயமாகத் தெரியவில்லையா?" 

 அப்போது மன்னரின் ரதத்திற்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக முனிவர் மன்னரும் அவரது ஆட்களும் செல்வதற்கு வழிவிட்டு ஓர் ஓரமாக ஒதுங்கி நின்றார்

 அதைப் பார்த்த மன்னர் தமது ரதத்தை நிறுத்திவிட்டு, இறங்கிச் சென்று முனிவரின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார். அவரது சிரம் முனிவரின் காலில் பட்டது

 முனிவரும் தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசிர்வதித்தார்.

 இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் சங்கடப்பட்டார்

 "ஒரு மண்டலாதிபதி ஒரு பரதேசியின் காலில் விழுவதா? அரச பாரம்பரியக் கவுரவம் என்னாவது?' என்ற எண்ணம் அவரை அலைக் கழித்தது

அரண்மனைக்குச் சென்றதும் அரசரிடம் தமது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட மன்னர் சிரித்தார்.

 அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்காமல் ஒரு விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார்

 "ஒரு ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை, மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே'' என்றார்.

 மன்னரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது. எனினும் அரச கட்டளையாயிற்றே! எனவே அதை நிறைவேற்ற ஏவலர்கள் உடனே நாலாபக்கமும் பறந்தனர்.

 ஆட்டுத்தலை கிடைப்பதற்கு அதிகச் சிரமம் இருக்கவில்லை. ஓர் இறைச்சிக் கடையில் அது கிடைத்து விட்டது

புலித் தலைக்கு அலைந்தனர். அது ஒரு வேட்டைக்காரனிடம் கிடைத்தது. அன்றுதான் அவன் ஒரு புலியை வேட்டையாடியிருந்தான்.

மனிதத் தலைக்கு எங்கே போவது

 கடைசியில் சுடுகாட்டிற்குச் சென்று ஒரு பிணத்தின் தலையை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர் 

 மூன்றையும் பார்த்த மன்னர் தன் அமைச்சரிடம்

 "இம்மூன்றையும் சந்தையில் விற்றுப்பொருள் கொண்டு வாருங்கள்'' என்றார்

மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவன் அவைகளை விற்கத் திணறினான்.

 ஆட்டுத் தலை அதிகச் சிரமமின்றி விலை போனது

 புலியின் தலையை வாங்க ஆளில்லை. ஆனால் பலர் அதை வேடிக்கைத் தான் பார்த்தனர். கடைசியில் ஒரு வேட்டைப் பிரியரான பிரபு அதனை வாங்கித் தன் வீட்டில் அலங்காரமாக மாட்டி வைக்க எடுத்துப் போனான்.

மீதமிருந்த மனிதத் தலையைப் பார்த்த கூட்டம் அருவருப்புடன் அரண்டு மிரண்டு பின்வாங்கியதுஒரு காசுக்கு கூட அதை வாங்க யாரும் முன்வரவில்லை.

 அரண்மனை திரும்பிய அமைச்சர் ஆட்டுத் தலை உடனே விலை போனதையும், புலித்தலை சற்றுச் சிரமத்துடன் விலை போனதையும் மனிதத் தலையை வாங்க ஆளில்லை என்பதையும் தெரிவித்தார்.

 "அப்படியானால் அதை யாருக்காவது இலவசமாகக் கொடுத்து விடுங்கள்!'' என்றார் மன்னர். இலவசமாகக் கூட அதனை வாங்கிக் கொள்ள யாருமே முன்வரவில்லை

 இப்போது மன்னர் கூறினார்...

 "பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்பு கால் காசு கூடப் பெறாது. இலவசமாகக் கூட இதனை யாரும் தொடமாட்டார்கள்இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும்

 

ஆனால் உடலில் உயிர் இருக்கும் போது தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன தவறு?  தவிர நம் குடிமக்களில் பலர் உயிருடன் இருக்கும்போதே வயிற்றுக்காக மட்டும் வாழ்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் தலையில் இருக்கும் மூளையை உபயோகிப்பதில்லை.

 தலைவன் என்ன சொன்னாலும் அது சரியா? தவறா? என யோசிக்காமல் அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர். அதனால் அவர்கள் தலை செத்தவனின் தலைக்கு சமம். ஒரு பைசாவிற்கு கூட விலை போகாத அந்த தலைகளுக்கு இரண்டு செப்புக் காசுகளும், ஒரு குவளை மதுவும், ஒரு கூடை அன்னமும் தந்து வேலை   வாங்குகிறேன்.  அவர்களும் அதை சந்தோஷமாக வாங்கிக் கொண்டு வேலை செய்கிறார்கள்.

 வருங்காலத்தில் மன்னராட்சி மாறினாலும் இந்த வழிமுறை மட்டும் மாறாமல் மக்களிடையே காலம்காலமாகத் தொடரும்மக்களை ஆள்பவர்களும் அவர்கள் வாழ்வதற்கு இந்த யுக்தியைப் பயன்படுத்துவார்கள். உமக்கும் இரண்டு செப்புக் காசுகளும், ஒரு குவளை மதுவும் தரட்டுமா?" மந்திரி தலைதெறிக்க தேரிலிருந்து இறங்கி ஒட ஆரம்பித்தார்.

 காலங்கள் உருண்டோடின. இரண்டு செப்புக்காசுகள்  200_ரூபாயாகவும், ஒரு குவளை மது ஒரு  குவாட்டர்பாட்டிலாகவும், ஒரு கூடைச் சோறு ஒரு பிரியாணிபொட்டலமாகவும் மாறியது.

No comments:

Post a Comment