Friday, July 26, 2024

தமிழ்நாடு மின்சார வாரியம்

 தமிழ்நாடு மின்சார வாரியம்



சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக கடந்த சில நாட்களில் மட்டும் 5 முக்கியமான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

மின்சார வாரியத்தில் பல அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின்றன. பல முக்கியமான அறிவிப்புகள் தினம் தினம் வெளியாகி வருகின்றன.

அதில் சில அறிவிப்புகள் பொதுமக்கள் அதிகம் கவனிக்க வேண்டியவை ஆகும். அந்த அறிவிப்புகள் என்னென்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

அறிவிப்பு 1:

க்யூ ஆர் கோடு மூலம் மின் கட்டணம் செலுத்தும் திட்டத்தை மின்சார வாரியம் கொண்டு வந்துள்ளது. உங்களின் பதிவு செய்யப்பட்ட எண் மூலம் tangedco பக்கத்தில் லாகின் செய்து அங்கே உள்ளே க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்த முடியும். அதேபோல் க்யூ ஆர் கோடு மின்சார வாரிய அலுவலகங்களிலும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அறிவிப்பு 2: மின்சார களப்பணியாளர்களுக்கு மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பின்வரும் செயல்களை செய்ய முடியும்.

மின்கட்டணம் செலுத்தாமல் உள்ள இணைப்புகள் மற்றும் கட்டணம் செலுத்திய இணைப்புகள் பற்றிய விபரங்களை அறிய முடியும்.

மின் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்ட மற்றும் கணக்கு எடுக்கப்படாத விபரத்தை அறிய முடியும்.

மின் இணைப்பு பெயர் மாற்றம், மின் பளு குறைப்பு அல்லது அதிகரிப்பு தொடர்பான விண்ணப்பங்கள் பற்றி அறிய முடியும்.

மின்னகம் சேவை மையம், இணையதளத்தில் மின்சார சேவை தொடர்பாக நுகர்வோர் அளிக்கும் புகார் மற்றும் அதன்மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிய முடியும்.

அறிவிப்பு 3: வீடுகளில் சிறிய பாதுகாப்பு கருவி ஒன்றை பொறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் Tangedco சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி நம் வீடுகளில் RCD பொருத்துவது, நமது அன்புக்குரியவர்களின் உயிர்களைக் காப்பாற்றுகிறது! இந்த சிறிய அக்கறை மின்சார வீடுகளில் மின் விபத்துகளைத் தடுக்கும். வீடு நமது அன்பின் கூடு, அதனை RCD-யுடன் பாதுகாப்போம், என்று தமிழ்நாடு மின்சார வாரியம் Tangedco சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அதெல்லாம் சரி அது என்ன ஆர்சிடி கருவி.. சின்ன வயதில் எஸ்பிடி எமர்ஜென்சி கேள்வி பட்டு இருக்கிறோம்.. இது என்ன கருவி என்று நினைக்கிறீர்களா. விளக்கம் இதோ

ஆர்சிடி என்றால் என்ன? ஏன் பொருத்த வேண்டும்?: எஞ்சிய மின்னோட்டம் சாதனம் (ஆர்சிடி) என்பது ஒரு பாதுகாப்பு சாதனம் ஆகும். இது மின்சார ஓட்டத்தில் ஏதேனும் தவறு இருந்தால் தானாகவே மின்சாரத்தை அணைக்கும் திறன் கொண்டது ஆகும். RCDகள் சாதாரண உருகிகள் மற்றும் சர்க்யூட் பிரேக்கர்களை விட அதிக உணர்திறன் கொண்டவை. அதாவது வீட்டில்தான் பியூஸ் இருக்கிறதே என்று சொல்ல வேண்டாம்.

இது பியூஸை விட வேகமானது. அதோடு திறன் கொண்டது. மின்சார அதிர்ச்சிக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பை வழங்குகின்றன. இதனால் உங்களுக்கு ஷாக் அடிப்பதை தவிர்க்கலாம்

ஒரு RCD மூலம் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு மின்சார ஓட்டம் தவறான நேரங்களில் தடுக்கப்பட்டு உயிர்காக்க முடியும். RCD கருவி பொதுவாக மின்சார சர்க்யூட் எனப்படும் சுற்றுடன் பாயும் மின்சாரத்தை தொடர்ந்து கண்காணிக்கும்.

உதாரணமாக.. நீங்கள் மின்சார வயரை தொடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.. நேரடியாக மின்சார பகுதியை தொட்ட நபரின் வழியாக, திட்டமிடப்படாத பாதையில் மின்சாரம் பாய்வதைக் கண்டறிந்தால், அது மின்சுற்றை மிக விரைவாக அணைத்துவிடும். இதனால் இறப்பு அல்லது கடுமையான காயம் ஏற்படும் அபாயத்தைக் கணிசமாக ஆர்சிடி குறைக்கிறது.

அறிவிப்பு 4: தமிழ்நாட்டில் வாட்ஸ்ஆப்-ல் மின்கட்டணம் செலுத்தும் வசதியை மின்சார வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணம் செலுத்துவதை எளிதாக்கி உள்ளது. பயன்பாடு 500 யூனிட்டுகளுக்கு மேலே உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்தும் வாட்ஸ் ஆப் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

வாட்ஸ்ஆப்பில் TANGEDCO இலச்சினை மற்றும் பச்சை குறியீடு, இருக்கும். எண் 94987 94987 என்பதை உறுதி செய்து கட்டணம் செலுத்தலாம். பதிவு செய்யப்பட்ட எண்ணில் இதற்கு மெசேஜ் அனுப்பினால் அதில் பில் கட்டணம் என்ற ஆப்ஷன் வரும். அதில் கிளிக் செய்தால் நம்முடைய கட்டணத்தை காட்டும்.

இதில் பயன்பாடு 500 யூனிட்டுகளுக்கு மேலே உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்த முடியும்.

அறிவிப்பு 5: மின்சார வாரியமான tangedco வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டு மக்களுக்கு நற்செய்தி, தமிழக அரசின் புதிய ஆணைப்படி கீழ்காணும் கட்டிடங்களுக்கு, மின் இணைப்பு பெற 'கட்டிட நிறைவு சான்றிதழ்' தேவை இல்லை.

14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை. 750 சதுர மீட்டர் பரப்பளவிற்குட்பட்ட வீடுகளுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை. 14 மீட்டர் உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் கட்டிட பரப்பளவிற்குட்பட்ட வணிக கட்டிடங்களுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை.

அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை.