Friday, October 28, 2022

மரணத்தை நேசிப்போம்...

 மரணத்தை நேசிப்போம்...

 படித்ததில் பிடித்தது

*மனிதன் ஏன் இன்னொரு மனிதனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வேண்டும்:*

மரணம் உன்னதமானது ஒன்று.

அதை உணரும் போது உயிர் உடலில் இருக்காது.. உணர்வை சொன்னவரும் இல்லை....

ஒரு மனிதன் எப்போது அச்சம் கொள்கிறான்?

*இன்னொரு மனிதனின் இறந்த சவத்தை பார்க்கும் போது தானும் நடுங்குகிறான்...*

உலகின் வேறு எதுவும் மனிதனை

இத்தனை அசைத்துப்பார்ப்பதில்லை..

நமக்கு சோறு ஊட்டிய அன்னை,

நம்மை தோளில் சுமந்த தந்தை,

நாம் தூக்கி வளர்த்த பிள்ளை,

நாம் இன்பதுன்பங்களை பகிர்ந்த வாழ்க்கை துணை,

நம்முடன் சுற்றித்திரிந்த நண்பன்,

இவர்களின் மரணம் நம்மை புரட்டி எடுக்கும்....

ஒருநாள் நமக்கும் இருக்கிறது என்ற எண்ணமே நம்மை ஆட்டிப்பார்க்கிறது...

மனதுக்கு நெருங்கியவரை

குழிக்குள் இறக்கி

மண்ணிட்டு மூடும் போது

வரும் வெறுமை....

நாம் தலையில் சேர்த்து வைத்திருக்கும்

புகழ்,

ஈகோ,

அகந்தை,

கர்வத்தையும்

சேர்த்து மண்ணோடு மூடிவிடும்.....

ஒரு மரணத்தை காணும் போது

மனம் இறங்க வேண்டும்....

"மரணம் எனக்கும் வரும்" என்ற எண்ணம்

தான் ஒவ்வொருவருக்கும் கட்டாயம் இருக்க வேண்டியது.....

பணம் மீது தீராத வெறி,

பதவி மீது தீராத வேட்கை,

இவையெல்லாம் மரணம் எனக்கு வராது என்ற எண்ணத்தின் நீட்சியாக இருக்கலாம்.....

ஒவ்வொரு மரணத்தை காணும் போதும்

நம் மனதில் இருக்கும்

வஞ்சம்,

பகை,

ஈகோ,

போன்றவற்றை மறக்க வேண்டும்.

ஒரு பிரேதம்

மண்ணில் அடக்கப்படும் போது

வஞ்சம்,

பகை,

ஈகோவையும் அத்தோடு மண்ணுக்குள் போட்டு அடக்க வேண்டும்.

மரணத்தின் எண்ணம் நம்

இறையச்சத்தை அதிகரிக்கும்.....

மரண வீடுகளுக்கு கட்டாயம் செல்ல வேண்டும்.

காரணம் மரண வீடுகளுக்குச் சென்று மரணித்தவரைக் காணும் போது

நம் மனமும் ஒரு முறை அதற்கான ஒத்திகையை செய்து கொள்கிறது.

மண்ணின் இயற்கை சுழற்சியை

ஒழுங்கு செய்யும் ஒரே விசயம்

மரணம் மட்டுமே....

மரணத்தை நேசிப்போம்...

காரணம்

நமக்கு இவ்வுலகில் நிச்சயிக்கப்பட்டபரிசாக மரணம் இருக்கிறது..

மண்கலம் கவிழ்ந்த போது வைத்து வைத்து அடுக்குவார்

வெண்கலம் கவிழ்ந்த போது வேணும் என்று பேணுவார்

நன்கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார்

எண்கலந்து நின்ற மாயம்என்ன மாயம் ஈசனே.

மண்பானை கவிழ்ந்து உடைந்து போனால் அது தேவைப்படும் என எடுத்து அடுக்கி வைப்பார்கள். வெண்கலப் பானை வீழ்ந்து நசுங்கிப் போனால் அது வேணும் என்று பாதுகாப்பார்கள். ஆனால் நமது உடம்பை விட்டு உயிர் போய் கிடக்கும் போது அதனைப் பிணம் என்று இகழ்ந்து அது கிடந்தால் நாறும் எனக் கூறி குழிவெட்டி அதனில் போட்டு மூடிவிடுவார்கள். இப்படி ஒரு காசுக்கும் கூட உதவாத என் எண்சாண் உடம்பில் நீ நின்று ஆடிய மாயம்தான் என்ன மாயமையா ஈசனே!!!

*பேரினை நீக்கி பிணம் என்று பேரிட்டு,*

*ஊர் எல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு,*

*சூரியங்காட்டிடை கொண்டு போய் சுட்டிட்டு,*

*நீரினில் மூழ்கி*

*நினைப்பொழிந்தனரே. --===பட்டினத்தார்*

No comments:

Post a Comment