Friday, July 26, 2024

பொங்கல் வடை

 பொங்கல் வடை



காலையில் முதலில் ஹோட்டல் திறந்ததும் காபி தயாராகும் ...

பின்னர் சற்று நேரத்தில் மெதுவடை போட தொடங்குவார்கள் ...

வாக்கிங் செல்லும் அன்பர்கள் சற்றே காபி பருகலாம் என்றெண்ணி உள்ளே நுழைவார்கள் ...

காபி ஆர்டர் செய்து டேபிளுக்கு வந்ததும் .

அப்போது தான் சூடாக ஆவி பறக்க மணக்க மணக்க ...

ஹோட்டலின் ஸ்டாலில் உள்ள மேடையில் மெதுவடை கம்பீரமாக வீற்றிருக்கும் ..

காபியை அப்படியே சற்றே மூடி வைத்து விட்டு சர்வரிடம் ரெண்டு மெது வடை ஆர்டர் செய்வார்கள்...

இப்போது தான் அரைத்து தாளித்து வைத்து இருக்கும் ...

புதிய தேங்காய் சட்னியில் முதல் வடையினை முக்கி உண்ணும் அதே சமயத்தில் ....

ஸ்டால் உள்ளே இருந்து சரக்கு மாஸ்டரின் குரல் கேட்கும் சர்வர்களுக்கான ஆணையாக ...

தோசை பூரி மசால் கொஞ்சம் லேட்டாகும்

இப்போ பொங்கல் மெதுவடை ரெடி ..

அதை மட்டும் ஆர்டர் எடுங்கள் ..

10 நிமிஷத்தில் இட்லியும் ரெடி ஆகிடும் என்று குரல் வரும் ...

அப்போது மீண்டும் சர்வர் அழைக்கப்படுவார் ..

பொங்கல் ரெடியா இருந்தா ஒண்ணு கொண்டா என்பார்கள் ..

கூடவே இன்னும் இரண்டு வடையும் சேர்த்து...

மணக்க மணக்க சாம்பார் சட்னியுடன் வடையும் ...

கிரீடம் போல வைத்து பொங்கல் வாழை இலையில் வைத்து வரும்...

மீதமுள்ள ஒரு வடை இப்போது வந்த இரண்டு என மூன்று வடைகளுடன் ...

முந்திரி முழிக்கும் நெய் பொங்கலை கபளீகரம் செய்து விட்டு ..

மூடி வைத்துள்ள மீதமுள்ள காபியை குடித்தவாறே ...

மீண்டும் ஒரு காபியை வாங்கி உள்ளே தள்ளி விட்டு ...

பில்லை கொடுத்து டிப்ஸும் தந்துவிட்டு வீட்டிற்கு திரும்புவார்கள் ஜாக்கிங் வாக்கிங் செல்லும் அன்பர்கள் ..

உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கு மிக மிக நல்லது ஆசைப்படுவதை உண்பது ..

பொங்கல் மெதுவடை அருமை தெரியாத சிலர் இட்லி மெதுவடைன்னு ஆர்டர் செஞ்சு சாப்பிட்டு விட்டு ...

பின்னர் பொங்கல் சாப்பிடலாம்னு தோணரச்சே வெறும் பொங்கல் மட்டும் வாங்குவாங்க ...

இப்போ தானே இட்லியோட சாப்பிட்டோமே மீண்டும் எதற்கு பொங்கலுக்கு மெதுவடை வேண்டாமே என்றெண்ணி தவிர்ப்பார்கள் ....

சொல்லப்போனால் முதலில் வெறும் இட்லி சாப்பிடுங்கள் உங்களுக்கு விருப்பம் எனில்..

இல்லையேல் ஒரு மெதுவடை வாங்கி சட்னி மட்டும் வைத்து சாப்பிடுங்கள்...

பின்னர் பொங்கல் ஆர்டர் செய்கையில்...

இரண்டு மெதுவடையாக ஆர்டர் செய்யுங்கள் ..

அது சாமர்த்தியம் சுகமும் கூட..

ஓட்டல் சப்ள்ளையர்கள் சில இடங்களில் பூரியுடன் வடையை இணைத்து விடுவார்கள் ...

அது சற்றும் பொருந்தாத கூட்டணி..

பல இடங்களில் மீந்த மெதுவடைகளை சாம்பார் வடைகளாக அவதாரம் கொடுத்து ...

மெது வடையின் தீவிர ரசிகர்களை திசை திருப்புவது ..

காபி கடைகளின் சாதூர்யதில் ஒரு வகை ..

ஒரு சில இடங்களில் அவை தயிர் வடைகளாக மாறியும் பயணிக்கும்...

வடை ரசிகர்களின் வயிற்றினுள் ..

எல்லாம் எவ்வாறு இருப்பினும் வடைக்கு பொங்கல் ...

பொங்கலுக்கு வடை என்பதே சாலச்சிறந்தது என்பது என் கூற்று ..

அதிலும் சில இடங்களில் மெதுவடை இல்லாமல் மசால் வடை போட்டு இருப்பார்கள்...

அவ்வண்ணம் இருக்கும் சூடான மொறுமொறு மசால் வடைகள்..

ஆரம்பத்தில் பொங்கலுக்கு துணையாக வருவது போல இருக்கும் ..

ஆனால் தனி ஆவர்த்தனம் செய்யும் திறன் வாய்ந்த மசால் வடைகள் பொங்கல் உடன் சேராது ...

டீக்கடை ராஜாவாகிய மசால் வடைகள் பொங்கலுக்கு உதவாது..

மெதுவாகவும் மொறுமொறுப்பாகவும் சூடாகவும் இருக்கும் மெதுவடைகளே..

பொங்கலுக்கு மிகவும் சிறந்ததாகும்

வாழ்க பொங்கல் ..

வாழ்க மெதுவடை .

வளர்க வயிறு .

No comments:

Post a Comment