Thursday, November 26, 2020

புயல் என்றால் என்ன

 

புயல் என்றால் என்ன என்றும், அது எவ்வாறு உருவாகிறது என்றும் நம் அறிவியலாய்வர்கள் கூறியிருப்பதை நாம் முழுவதுமாகத் தெரிந்து
கொள்வோம்.  Cyclone என்பது, ‘சுருண்டு கிடக்கும் பாம்புஎன்பதற்கான கிரேக்க மொழிச் சொல்லில் இருந்து உருவான வார்த்தையாம்.

           பூமியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் (Equator), வெப்பத்தால் கடல் நீர் சூடாகிறது.  இதனால் ஆவியாகும் நீர், கடலின் மேற்பரப்பில் சூழ்ந்துள்ள காற்றுடன் கலக்கிறது. இந்த சூடான ஈரக்காற்று, செங்குத்தாக நேர் மேலே செல்கிறது. கடலின் மேற்பரப்பில் இருந்த பெரும்பாலான காற்று மேலே சென்று விடுவதால், அந்த இடத்தில் குறைவான காற்றே மீதம் உள்ளது. இதனால், அந்த வளிமண்டலப் பகுதியில், காற்றழுத்தம் குறைகிறது.  இந்தக் குறை அழுத்தத்தை நிரப்ப, அதன் சுற்றுப் பகுதியில் உள்ள வளி மண்டலக் காற்று சுழன்று விரைகிறது.

          இவ்வாறு, மேலே சென்று தங்கும் சூடான ஈரக் காற்று, குளிர்ந்து, நீர்த்திவலைகள் உறைந்த மேகமாகிறது . இந்த மேகமானது, காற்றுடன் சேர்ந்து சுழல்கிறது.  மேலே உள்ள படிப்படியான நிகழ்வுகள் 1 முதல் 4 வரை, மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது.

       இப்படித் தொடர்ந்து, ஏற்படும் நீராவிப்போக்கால் அந்தப் பகுதியை மையமாகக் கொண்டு பெரிய அளவில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகிறது. அதற்கேற்றபடி, இந்தக் குறை அழுத்தப் பகுதியை நிரப்ப, வலிமையான காற்று தேவைப்படுகிறது. இந்தக் காற்று, குறை அழுத்த மையப் பகுதியைச் சுற்றிச் சுழன்று அதி வேகத்துடன் சென்று, அந்தப் பகுதியை நிரப்ப முயலுகிறது.

         காற்றின் வலிமை அதிகரித்துக் கொண்டே செல்வதால், அது புயலாக மாறுகிறது. இதனால் தான் இந்த சுழலும் மேகக்கூட்டங்கள், செயற்கைக் கோள் படத்தில் வட்டமான துளை கொண்ட மையப் பகுதியை உடைய மேகச் சுருள் போல் காட்சி அளிக்கிறது. இந்த வட்டமான மையப் பகுதிக்கு கண் என்று பெயர்.

         செயற்கைக் கோள் படத்தில் உள்ள சுழலும் மேகச்சுருளின் வேகத்தையும், அடர்த்தியையும், பரப்பளவையும் பொருத்து அதன் வலிமையைப் புரிந்து கொள்ள இயலும். இந்தச் சுழலும் மேகக் கூட்டத்தை உள்ளடக்கிய காற்று, நகர்ந்து கரையை அடையும் போது, நிலப் பகுதியை சூறாவளிப் புயலுடன் கூடிய மழையாகத் தாக்குகிறது. நிலத்தில் நீண்ட தூரம் பயணிக்கும் போது இந்தப் புயல் காற்று வலுவிழக்கிறது.

         தண்ணீரின் இயல்பு பள்ளத்தை நோக்கிப் பாய்வது. காற்றின் இயல்பு மேல்நோக்கி எழுவது. வெப்பக் காற்று விரைவாக மேலெழும். ஈரக்காற்று மெல்ல மெல்ல மேல் நோக்கிச் செல்லும். காற்றின் நகர்விற்கு வானிலை ஆய்வாளர்கள் வைத்துள்ள பெயர் சலனம்.

        ஈரக்காற்று வெகு உயரம் செல்லாமல் வானில் தங்கிவிடுவதால் அது தாழ்வுநிலை. அந்தத் தாழ்வுநிலை காரணமாக காற்றின் அழுத்தம் அதிகரித்தால் காற்றழுத்தத் தாழ்வுநிலை. காற்றழுத்தத் தாழ்வு நிலையின்போது காற்று சாதாரணமாக மணிக்கு 31 கி.மீ. வேகத்தில் வீசும். மணிக்கு 32 கி.மீட்டரிலிருந்து 51 கி.மீ. வரை காற்று வீசினால் அதற்கு அழுத்தம் என்று பெயர். அதுவே வேகம் அதிகரித்து 52-லிருந்து 61 கி.மீ. வேகத்தில் வீசினால் அது தீவிர அழுத்தம் . 62.கி.மீட்டரிலிருந்து 88 கி.மீ.வரை வீசினால் புயல் .அதற்கு மேல் கடும்புயல் (89 முதல் 118 கி.மீ.), மிகக் கடும் புயல் (119 முதல் 221 கி.மீ.), சூப்பர் புயல் (222 கி.மீ.க்கு மேல்).

புயல் வீசும்போது பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாவது கடலோரப் பகுதிகள். குறிப்பாக துறைமுகங்கள். துறைமுகங்களை நோக்கி வரும் படகுகள், கப்பல்கள். கடலில் இருந்து கரையை நோக்கி வருபவர்களை, மீனவர்களை எச்சரிக்க விடுக்கப்படும்சிக்னல்தான் இந்தக் கூண்டுகள்.

           இந்த எச்சரிக்கையைத் தெரிவிக்க, கடலில் இருந்து காண ஏதுவாக, துறைமுகத்தில் ஓர் உயர்ந்த கம்பத்தில் பகல் நேரத்தில் கூண்டுகளையும் இரவு நேரத்தில் சிகப்பு-வெள்ளை விளக்குகளையும் ஏற்றுவார்கள். கொடி ஏற்றினால் காற்றில் கிழிந்துவிட வாய்ப்புண்டு. அதனால் கூண்டு.  இந்த எச்சரிக்கையில் 11 நிலைகள் இருக்கின்றன. நிலைமையின் தீவிரம் அதிகரிக்க அதிகரிக்க எண்ணிக்கை உயர்ந்துகொண்டு போகும். இந்த நிலைக்கு இந்தக் கூண்டு என்பதை இந்திய வானிலைக் கழகம் தீர்மானித்து வைத்திருக்கிறது.

No comments:

Post a Comment