Thursday, August 1, 2024

விலைமாது விடுத்த கோரிக்கை..!

 விலைமாது விடுத்த கோரிக்கை..!



படித்ததில் அதிர்ந்து போன கவிதை..!

விலைமாது விடுத்த கோரிக்கை..!

--------------------------------------------------

இராமனைப் போன்று வேசமிட்டிருக்கும்

பல ராட்ச்ஷசனுக்கும்

என்னைத் தெரியும்.

பெண் விடுதலைக்காக போராடும்சில

பெரிய மனிதர்கள் கூட

தன் விருந்தினர்' இவர்களது பங்களா

விலாசத்தை' நளின கவுரவத்துடன்' தந்ததுண்டு.

என்னிடம்

கடன் சொல்லிப் போன

கந்து வட்டிக்காரகளும் உண்டு.

சாதி சாதி என சாகும்

எவரும் என்னிடம்

சாதிப் பார்ப்பதில்லை.

திருந்தி வாழ நான் நினைத்தபோதும்'

என்னை தீண்டியவர்கள்' யாரும் திருந்தவிட்டதுமில்லை'

திரும்பவிட்டதும்மில்லை.

பத்திரிக்கையாளர்களே!

விபச்சாரிகள் கைது' என்றுதானே

விற்பனையாகிறது..

விலங்கிடப்பட்ட ஆண்களின்

விபரம் வெளியிடாது ஏன்...?

பெண்களின் புனிதத்தை விட

ஆண்களின் புனிதம்

அவ்வளவு பெரிதா?

அரைசான்' காயிந்த வயிற்றுக்கு இருட்டறைக் கட்டில்'

காட்டில் இரை தேடும்

குருவியைப் போல்

என்னை யாரும் பரிகசிக்கவில்லை.

கட்டில் மேல் கிடக்கும்

இன்னொரு இயந்திர கருவியைப் போலத் தான்

என்னை கையாளுகிறார்கள்.

நான் இருட்டில் பிணமாக மாறினால்தான்

பகலில் அது பணமாக மாறும்.

நான் சிதைந்த பின்தான்

என் குடும்பத்தின் பசியாறும்.

நிர்வாணமே என்

நிரந்தர உடையானதால்

சேலை எதற்கென்று

நினைத்ததுண்டு.

சரி

காயங்களை மறைப்பதற்கு

கட்டுவோம் என்று

கட்டிக்கொண்டு இருக்கிறேன்.

என் மேனியில் இருக்கும்

தழும்புகளைப் பார்த்தால்

வரி குதிரைகள் கூட

வருத்தம் தெரிவிக்கும்.

எதையும் வாங்க வசதியில்லாத

எனக்கு

விற்பதற்க்காவது சரி இந்த

உடம்பு இருக்கிறதே!

நாணையமற்றவர்களின் நகங்கள்

கீறி கீறி என்

நரம்பு வெடிக்கிறதே!

வாய்திறக்க முடியாமல்'

நான் துடித்த இரவுகள்' அடுத்தடுத்து' துடித்ததுண்டு

எலும்புகள் உடையும் வரை

என்னை கொடுமைப் படுத்திய

கொள்கையாளர்களும் உண்டு.

ஆண்கள்

வெளியில் சிந்தும் வேர்வையை

என்னிடம் ரத்தமாய்

எடுத்து கொள்கிறார்கள்.

தூறல் சிந்தாத வான் மேகமில்லை.

கீறல் படாத தாசியின் தேகமில்லை.

என்னை தாசி என்று

ஏசும் எவரைப் பற்றியும்

கவலைப் பட்டதே இல்லை..

ஏனெனில்

விதவை - விபச்சாரி

முதிர்கன்னி - மலடி

ஓடுகாலி - ஒழுக்கங்கெட்டவள் தாசி வேசி

இதில் ஏதேனும்

ஒரு பட்டம்

அநேக பெண்களுக்கு

அமைந்திருக்கும்.

இது இல்லாமல் பெண்கள் இல்லை.

எப்போதும்

இழிவு சொல் ஆண்களுக்கு இல்லை.

முதுமை என்னை

முத்தமிடுவதற்க்குள்

என் வயிற்றில் பிறந்த மகளை மருத்துவராய்

ஆக்கிவிட வேண்டும்.

என் மீது படிந்த தூசிகளை

அவளை கொண்டு

நீக்கி விட வேண்டும்.

இருப்பினும்

இந்த சமூகம்

இவள்

மணிமேகலையை என்பதை மறந்துவிட்டு

மாதவியின் மகள் என்பதை மட்டுமே

ஞாபகம் வைத்திருக்கும்.

இறுதியாக

இரு கோரிக்கை.

என்னை

நறுக்கி மென்று தின்ற ஆண்களே!

மனைவிடமாவது கொஞ்சம்

மென்மையாக இருங்கள்.

எங்களுக்கும் இருப்பது

உடம்பு தான்

இரும்பல்ல.

என் வீதி வரை

விரட்டிவரும் ஆண்களே!

தயவு செய்து விட்டுவிடுங்கள்.

நான் விபச்சாரி என்பது

என் வீட்டுக்கு தெரியாது.

இப்படிக்கு- அவள்

No comments:

Post a Comment