Sunday, October 29, 2017

தமிழ் மொழி வரலாறு



தமிழ் மொழி வரலாறு

1.தமிழ் மொழி வரலாற்றுக்கான அடிப்படைச் சான்றுகள்
1. 0 முன்னுரை
                “பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுஎன்பது அறிவியல் அடிப்படையில் முதன்முதலாக உயிரியல் மாற்றங்களை ஆராய்வதற்கே பயன்படுத்தப்பெற்றது. பின்னர் அக்கோட்பாடு மானிடவியலின் பல்வேறு துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பெற்றது. இந்தியாவைப் பொறுத்தவரையில் இப்பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுபரிணாம வாதம்என்ற பெயரில் நெடுங்காலமாகவே வழங்கி வந்துள்ளது. ஆயினும் மொழி ஆராய்ச்சிக்கு அக்கொள்கை ஒரு போதும் பயன்படுத்தப் பெறவில்லை. ஏனெனில் உயர்தனிச் செம்மொழி அல்லது சரியான வழக்கு என்பதில் பற்றுக் கொண்டோர் அதனின்றும் மாறுபட்டவைகளையெல்லாம் பிழையானவை என்றும் இழிந்தவை என்றும் நம்பியதே இதற்குக் காரணமாகும். மேலும் இலக்கியம், தத்துவம், நியாயசாத்திரம், சமயம் முதலிய எத்துறையாயினும் அத்துறையின் பிற்கால வழக்குகளில் ஏற்பட்ட மாற்றங்களையெல்லாம் மூல நூல்களின் மீதே ஏற்றிச் சொல்லும் உரை மரபும் காரணமாகும். இவையன்றி என்றும் மாறாத இளமையுடையதாக, கன்னித்தாயாக, மொழியைத் தெய்வ நிலைக்கு உயர்த்தியமையும் மொழியை வரலாற்று முறையில் அணுகுவதற்கு இடையூறாக அமைந்தது. தமிழரும் தம்மொழியைக்கன்னித்தமிழ்என்பர்.
எனவே இழிவழக்குகளின் வரலாறு (History of Corruption) என்பதினின்றும் வேறுபட்ட தமிழ்மொழி வரலாறு என்பது புதுமையானது; மரபு வழிப்பட்டோரால் பொதுவாகச் சரியானது என ஒத்துக் கொள்ளப்படாதது, திராவிடமொழிகள்
அனைத்தும் அடிப்படையானதும் தூய்மையானதுமான தமிழிலிருந்தே தொடங்கி வளர்ந்தன என்று கருதியதால் கால்டுவெல்லின் திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணமும் இந்த இழிவழக்குகளின் வரலாறு என்ற கொள்கைக்கே ஆக்கம் தந்தது. நமது பல்கலைக்கழகங்களில் ஆங்கில மொழி வரலாறு கற்பது தமிழ் மொழி வரலாறு ஒன்றின் தேவையை நமக்கு உணர்த்தியுள்ளது. எனினும் இத்தகைய வரலாற்றைத் தொடர்புறக்கூறும் தனித்ததொரு பாடநூல் எதுவும் இல்லை என்பதும் உணரத்தக்கது. இத்தேவையை ஓரளவு நிறைவு செய்யும் நோக்கிலேயே இந்நூல் அமைகிறது.
2. 0 மொழியின் மாறுபடும் இயல்பு
2. 1 சொற்களும் அவற்றின் பொருள்களும்
வரலாற்றின் பல்வேறு கால கட்டங்களில் அரசியல், பண்பாட்டு, வணிகத் தொடர்பிலான சூழ்நிலைகளால் தமிழ்மொழி பிறமொழிகளுடன் தொடர்பு கொள்ள நேரிட்டமையால் தமிழ் வழக்காற்றில் இணைந்துவிட்ட பல பிறமொழிச் சொற்களின் வரலாற்றைக் கூறும்தமிழின் புறவரலாறு’ (External history of Tamil) இதில் முதலிடம் பெறுகிறது. தமிழ்மொழியின் சொற்றொகுதி (Vocabulary) வளர்ச்சியினை மொழியின்சொல் மாற்றம்’ (Lexical change) என்ற வகையில் விளக்கலாம். இது தமிழ் மொழி வரலாற்றின் சுவையானதொரு பிரிவாக அமையும். இயற் சொற்களிலும் (Native words) பிற மொழிச் சொற்களிலும் (Foreign words) தொடர்ச்சியான பொருள் மாற்றங்களும்(Semantic changes) நிகழ்ந்துள்ளன. பொருள் மாற்றங்கள் ஒரு குறிப்பிட்டபொருளமைப்பைக் (Semantic structure)காட்டி நிற்கின்றன. சமுதாயத்தில் காலத்திற்குக் காலம் நிகழ்ந்த வளர்ச்சிப் போக்குகளை எதிரொலிக்கும் வகையில் வாழ்க்கையின் பலநிலைகளை வெவ்வேறு முறையில் வலியுறுத்திக் கூறுமுகத்தான் ஒருசொல் தன் பொருள் எல்லையிலிருந்து வேறொரு எல்லைக்கு மாறுதல் பொருள் அமைப்பில் ஒரு மாற்றத்தையே உணர்த்தி நிற்கிறது. சான்றாகஅறம்என்ற சொல்அறம்என்ற பொருள் எல்லையிலிருந்துசமயம்என்ற பொருள் எல்லைக்கு ஆழ்வார்கள், நாயன்மார்களின் பாக்களில் மாறுகிறது. இச்சொல்அடிப்படையில்நல் ஒழுக்கம்என்ற பொருளையே தந்து பின் சமயக் கோட்பாட்டின் அடிப்படையில் நல்லன எல்லாவற்றையும் குறிக்கும் சொல்லாகியது.
2. 2 ஒலியனியல் (Phonology)
மற்றொரு பிரிவு மொழியின் ஒலிகள் தொடர்பானது, ரகரமும் ஆடொலியாகிய றகரமும் (இவ்வொலி ஒரு காலத்தில் நுனியண்ணத் தடையொலியாக ஒலிக்கப்பெற்றது) தமிழில் பெரும்பாலான கிளை மொழிகளில் ஒன்றாகிவிட்டன. இது மொழியின் ஒலியன் அமைப்பையே (Phonemic structure) மாற்றுகின்றது. ஆனால் ஈருயிரிடை வரும் கடையண்ணத் தடையொலியை உரசொலியாக ஒலிப்பது மொழியின் ஒலியன் அமைப்பைப் பாதிக்காத வெறும் ஒலி மாற்றமே.
2. 3 உருபொலியனியல் (Morphophonemics)
உருபொலியன் மாற்றங்கள் எனச் சில உள்ளன. அவையாவன : () உருபுகளின் வடிவம் அல்லது ஒலியன் அமைப்பில் மாறுபாடுகள். காட்டு: ‘பொலன்என்னும் சொல்பொன்எனவும்மண்என்னும் சொல்மண்ணுஎனவும் மாறுதல். () இலக்கண வடிவுகளின் மாற்றங்களில் மாற்றங்கள். காட்டு : ‘அதன்என்னும் சொல்அதற்குஎன்ற சொல்லில்அதற்-’ என்ற மாற்று வடிவத்தையும் பின்னர்அதனுக்குஎன்ற சொல்லில்அதனு-’ என்ற மாற்று வடிவத்தையும் பெறுதல்.
2. 4 உருபனியல் (Morphology)
உருபன்களின் கட்டமைப்பிலும் மாற்றங்கள் உள்ளன. பழைய வடிவங்களுக்குப் பதிலாகவோ அல்லது கூடுதலாகவோ புதிய உருபன்கள் தோன்றுதலும் அல்லது உருபுகளை அடுக்கி வழங்கும் முறைமையில் மாற்றங்களும் இவ்வகையில் அடங்கும். செயப்பாட்டு வினை விகுதியின் வளர்ச்சியையும் துணை வினைகளின் வளர்ச்சியையும், (பால் விகுதிகள் தொடக்கக்காலத்தில் வழக்கில் இல்லை என்று கொண்ட நிலையில்) பால் காட்டும் விகுதிகளின் வளர்ச்சியையும் எடுத்துக் காட்டுகளாகத் தரலாம்.
2. 5 தொடரியல் (Syntax)
தொடரியல் அமைப்பிலும் மாற்றங்கள் உள்ளன. காட்டு : ‘நோகோ யானேஎன்னும் தொடரில் யான் என்னும் எழுவாய் பயனிலைக்குப் பின்னால் பழங்காலத்தே பெரிதும் பயின்று வந்துள்ளது. இதனை வெறும் செய்யுள் விகாரம் என்று தள்ளிவிடமுடியாது. இத்தகைய தொடரமைப்பு இன்றைய தமிழில் எழுவாய் முன்னும் பயனிலை பின்னுமாக அமையும் பெருவழக்கினின்றும் மாறுபட்ட பழைய வழக்கினைச் சுட்டி நிற்கிறது.
3. 0 அடிப்படைச் சான்றுகள் (Sources)
3. 1 இலக்கியம்
தமிழ் மொழியின் வரலாற்றுக்கான அடிப்படைச் சான்றுகளுக்கு இலக்கியங்களையே முதன்மையாகக் கொள்ள வேண்டியதிருக்கிறது. இலக்கியம் என்று குறிப்பிடுகின்ற பொழுது இலக்கியத் தரம் வாய்ந்த நூல்கள் என்ற வரையறைக்கு உட்படுத்தாது எல்லாப் பொருள்களையும் பற்றிய உரைநடை அல்லது செய்யுள் வடிவில் உள்ள எல்லாத் தமிழ் நூல்களையும் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். இங்கு இலக்கியக் கோட்பாடுகளின் அடிப்படையில் தள்ளப் பெற்ற இலக்கியமல்லாத நூல்களே ஒருவேளை நமக்குப் பெரும்பயன் தருவனவாக இருக்கலாம். நூல்களையும் இருவகைகளாகப் பிரித்தல் வேண்டும்.
1. இலக்கிய மொழி நடையில் (literary language) அமைந்தவை.
2. பேச்சு மொழி நடையில் (Colloquial language) அமைந்தவை.
மிகுந்த தொல்லைகளோடன்றி இலக்கிய மொழியில் பேச்சு மொழி வழக்குகளைக் கண்டறிதல் கடினமே. கலம்பகங்களிலும் சைவ, வைணவக் குரவர்கள் பாடிய பாடல்களிலும் நாட்டுப் பாடல்களிலும் தற்காலப் பாடல்களிலும் பேச்சு வழக்கிலுள்ள சில தொடர்கள் மீட்டும் மீட்டும் வருதலைக் காணலாம். “பழமொழிபோன்ற சில இலக்கிய நூல்களில் குறித்துப் பாதுகாக்கப் பெற்று வரும் பழமொழிகள் பேச்சு வழக்கு இலக்கியத் திறனைச் சார்ந்தன ஆயினும் இலக்கிய மொழி நடையிலேயே காணப்பெறுகின்றன. பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்திற்குப் பின்னரே பாமர மனிதனின் தேவைகளை நிறைவு செய்கின்ற இலக்கியங்கள் தோன்றி வளர்வதனைக் காண்கிறோம். இவ்வகையில் கள்வனின் பாட்டாகிய நொண்டிச்சிந்து, குடியானவரின் நாடகமாகிய பள்ளு, கட்டபொம்மன் கும்மி, ராமப்பையன் அம்மானை, கான்சாகிப் சண்டை போன்ற பழையனவும் புதியனவுமாகிய கதைகள், நிகழ்ச்சிகள் ஆகியனவற்றை எளிய நடையில் விளக்கும் பல அம்மானைகள் ஆகியனவற்றைச் சுட்டலாம். பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் படித்தறியாத பாமரமக்களின் பேச்சுவழக்குக்கள் கொண்ட நாடகங்கள், புதினங்கள் ஆகியவற்றைக் காண்கிறோம். இவை பேச்சு வழக்கினை ஆராய்வதற்கு இன்றியமையாதன.
3. 1. 1 எச்சரிக்கைகள் (Safeguards)
மேற்கூறியவற்றை ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்கின்ற போது மிக்க கவனத்துடன் பயன்படுத்துதல் வேண்டும். முதலாவதாகப் பல நூல்களுக்கு நல்லனவும் நம்பக்கூடியனவு மான பதிப்புக்கள் இல்லை. பல நூல்கள் பதிப்பிக்கப்பெறாமல் உள்ளமையால் அவற்றை ஏடு அல்லது கையெழுத்துப்படி நிலையிலேயே ஆராய வேண்டியுள்ளது. அப்படியே நூல்கள் மிக நல்லமுறையில் கிடைப்பதாயிருந்தாலும் அவை பழையனவும் புதியனவுமாகிய வழக்காறுகளைக் கொண்ட அருங் காட்சியகமாகவே உள்ளன. தமிழ்ப் புலவர்கள்முன்னோர் மொழி பொருளே யன்றி யவர் மொழியும் பொன்னே போற் போற்றுவர்”.1 பேச்சுமொழி இலக்கியங்களில் கூடப் புலவர்கள் வட்டார வழக்கு மாற்றங்களைக் குறிக்க இயலாத நிலையில் உள்ள தமிழ் நெடுங்கணக்கினையே பயன்படுத்துவதால் பழைய ஒலிப்பு முறையினைக் கண்டறிதல் கடினமாகின்றது.
3. 2 தமிழ்ச் சான்றோர் இயற்றிய இலக்கண நூல்கள்
அடுத்து நமக்குக்கிடைக்கும் அகச்சான்றுகளாவன இலக்கணங்களும் அவற்றின் உரைகளுமே. மொழியின் அமைப்பினை விளக்க எழுந்த சிறந்த முயற்சிகள் இவை. நல்ல காலமாக இந்நூல்களில் தமிழ் ஒலிகள் பற்றிய ஒலிப்பு முறை விளக்கங்கள் உள்ளன. இது போலப் புணர்ச்சி மாற்றங்களும் விரிவாக விளக்கப்பெற்றுள்ளன. மொழியினது உருபனியல் பற்றி விளக்கும் பகுதியும் இங்கு உண்டு.
3. 2. 1 எச்சரிக்கைகள்
மேற்கூறிய அகச்சான்றுகளையும் மிகுந்த எச்சரிக்கையுடனேயே கையாளல் வேண்டும். ஏனெனில் பழைய கருத்துக்களையே தங்கள் காலத்திய மொழியில் விளக்குகின்ற போக்கே இந்நூல்களில் காணப்படுகிறது. மேலும் பின்னைய இலக்கண ஆசிரியர்கள் ஒலிப்பு முறைகளைப் பற்றி விளக்கும் பொழுது தங்கள் காலத்தில் வழக்கிலிருக்கும் ஒலிப்பு முறையினை ஆராய முயற்சி செய்தார்களா என்பது ஐயத்திற்குரியது. எடுத்துக்காட்டாகப் பின்னைய இலக்கண ஆசிரியர் ஒருவர் அடிநா அடியண முறயத்தோன்றும் என்று யகரத்தின் ஒலிப்பு முறைபற்றிக் கூறுவதைச் சுட்டலாம்.
3. 3 உரையாசிரியர்கள்
உரையாசிரியர்கள் மூலநூல் முழுவதற்குமே விளக்கம் கூறப் பெரிதும் முற்பட்டிருக்கிறார்கள். தம் காலத்திய வழக்காறுகளுக்கெல்லாம் தொல்காப்பியத்தைத் தக்க முறையில் விளக்குவதன் மூலம் அந்நூலிலேயே விதிகளைக் காண முற்படுவதை இங்குச் சான்றாகச் சுட்டலாம்.3
பல்வேறு காலங்களில் எழுதப்பட்ட இவ்வுரை வேறுபாடுகள், பழைய நூல்களில் குறிப்பிட்டுக் கூறப்படும் வழக்காறுகளிலிருந்து மாறுபட்டனவும், புதிதாய் நிலைபெற்றனவுமான தம் காலத்திய வழக்காறுகளைப் பற்றிய பொதுவான செய்திகளை அறிய உதவுகின்றன. இம்முறையில் இவ்வுரைகளுக்கு இடையிலுள்ள வேறுபாடுகளெல்லாம் கால வேறுபாட்டின் காரணமாக மாறிய வழக்காறுகளின் அடிப்படையில் அமைகின்றன. நிலைபெற்ற வழக்காறுகளிலிருந்து தம் காலகட்டத்தை ஒட்டி மொழியமைப்பில் ஏற்பட்ட சில மாறுதல்களை இந்த உரையாசிரியர்கள் உணர்ந்தே உள்ளனர். எனவே மொழியானது மாறுதலுக்கு உள்ளாகிறது என்பதையும் அவர்கள் உணர்ந்தே இருந்தனர் எனக் கருதலாம். உரையாசிரியர்களின் அடிப்படை ஆதார நூலான தொல்காப்பியமேகடிசொல் இல்லை காலத்துப் படினேஎனக் கூறுகிறது.4 எனவே மொழியில் நிகழும் மாறுதல்களுக்கு அவை இலக்கிய வழக்கினைக் குறிப்பனவாயிருப்பினும், சான்றுகள் இவ்வுரை நூல்களில் உள்ளன எனலாம். எனவே மொழி வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களின் அடிப்படையில் பல்வேறு மொழி வழக்காறுகளை வேறு பிரித்து அறிந்து கொள்வதற்கு இவ்வுரை நூல்களையும் அவ்வுரை விளக்கத்திற்கு அடிப்படையான இலக்கியங்களையும் கவனமாக ஆராய்ந்து ஒப்பிட்டுக் காணல் வேண்டும்.
3. 4 வெளிநாட்டவர் எழுதிய இலக்கணங்கள்
தமிழ்ச் சான்றோர் எழுதிய இலக்கண நூல்களைத் தவிர வெளிநாட்டவர், குறிப்பாக மதபோதகர்கள், வெளிநாட்டவர் தமிழைக் கற்கும் வகையில் எழுதிய இலக்கண நூல்களும் உள்ளன. மேற்கத்திய நாடுகளோடு கொண்ட தொடர்புகளின் முக்கியமான விளைவுகளில் இதுவும் ஒன்றாகும். போர்ச்சுக்கீசிய மொழியில் தமிழ் இலக்கணநூல் ஒன்று இருந்ததாம். ஆனால் அது நமக்கு இன்று கிடைக்கவில்லை. டச்சுக்காரரான பால்தே(Baldaeus) என்பார் எழுதிய இந்தியாபற்றிய நூலில் தமிழ்மொழி பற்றிய ஒரு பிரிவு உள்ளது. தமிழ் மொழியின் உச்சரிப்புக்கள், அதன் பெயர்ச் சொற்களின் வேற்றுமைப் பாகுபாடுகள், வினைச்சொற்களின் வினை விகற்ப வாய்பாடுகள் முதலியவற்றோடு இயேசு பெருமான் மீதானகர்த்தர் கற்பித்த செபத்தின்’ (Lord’s Prayer) தமிழாக்கம் ஒன்றினையும் இதில் இணைத்துள்ளார்.5 தமிழ்ச்சொற்கள் இந்நூலில் டச்சு நெடுங்கணக்கில் எழுதப்பட்டுள்ளன. தக்காணக் கல்லூரி ஆண்டு இதழில் இந்நூல் மொழி பெயர்க்கப்பட்டு அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.6 1680 ஆம் ஆண்டில் கோஸ்டா பால்த்சரா (Costa Balthsara)7 என்பார் தமிழ் இலக்கணம் ஒன்றை இலத்தீன் மொழியில் எழுதினார். புருனோ (Bruno) என்பார் 1685 ஆம் ஆண்டில் ஒரு தமிழ் இலக்கணநூல் எழுதியதாக அறிகிறோம்.8 ஆனால் இதுகாறும் இந்நூல் பதிப்பிக்கப்படவில்லை. பதினெட்டாம் நூற்றாண்டில் தரங்கம்பாடிச் சமயப் போதகர் குழுவைச் சேர்த்த சீகன்பால்கு (Ziegenbalg) தமிழ் இலக்கண நூல் ஒன்றை எழுதினார்9 (‘ச்என்னும் ஒலியை ‘tsch’ எனக் குறித்தல் காண்க). பின்னர் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் பேச்சுத் தமிழின் இலக்கணம் ஒன்றை எழுதினார்.10 அதனுடைய சிறப்பினைக் குறைத்து மதிப்பிட முடியாது.
பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் எல்லீஸ், கால்டுவெல் போன்றோர் எழுதிய சிறந்த நூல்களும் உள்ளன.
ஒலிக்குறியீடுகள் எதுவும் இல்லாத நிலையில், இந்நூல்களிலுள்ள உச்சரிப்புப் பற்றிய விளக்கங்களையெல்லாம் புரிந்து கொள்வது கடினமாக உள்ளது. ஏனையோரது விளக்கங்களைக் காட்டிலும் தமிழ்ப்பாவலரும் அறிஞருமான பெஸ்கியின் விளக்கங்கள் பின்பற்றத்தக்கன. பெஸ்கி சுட்டிக்காட்டுவது போல இவ்விலக்கணநூல்கள் சிலவற்றில் நெடில் போன்ற சில முக்கியமான ஒலிக்குறிப்புக்கள் குறிக்கப்படவில்லை. பெஸ்கி தம் வாழ்வின் பெரும் பகுதிக் காலம் தமிழகத்திலேயே வாழ்ந்தார். தமிழகத்திற்குச் சிறிது காலம் வந்து சென்ற பால்தே போன்றோரின் நூல்களைவிட ஹாக்கெட்11 குறிப்பிடுவதுபோலநீண்டகாலம் மொழியுடன் நேரடியாகத் தொடர்புடையபெஸ்கி போன்றோரின் நூல்கள் நம்பத் தகுந்தன. பேச்சுத்தமிழோடு நெருங்கிய பயிற்சியின்மை காரணமாகவோ அல்லது தங்களது மறதியின் காரணமாகவோ சில தவறுகள் இந்நூல்களில் காணக் கிடக்கின்றன. சிலர் தமிழ்ச் சொற்களை வேற்று நெடுங்கணக்கில் எழுதும்பொழுது மயக்கமுற எழுதியுள்ளனர்.12
3. 5 அகராதிகள்
தமிழ்மொழி வரலாற்றுக்கான அடிப்படைச்சான்றுகளில் ஒன்றாக அகராதிகளையும் குறிப்பிடலாம். நம்முடைய ஆராய்ச்சியைப் பொறுத்த வரையில், செய்யுள் நடையில் எழுதப்பட்ட பண்டைக் காலத்திய நிகண்டுகள் என்பன பிற்காலத்தில் போர்ச்சுக்கீசியர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோர் தயாரித்த அகராதிகளைப் போல அவ்வளவாக நமக்கு உதவமாட்டா. போர்ச்சுக்கீசிய மொழியிலும் தமிழிலும் பெஸ்கி எழுதியுள்ள அகராதிகள் இவ்வகையில் அருஞ்சாதனைகளேயாகும். கிறித்துவ மதப்போதகர்கள் இதற்குப் பின்னர் பல அகராதிகளைத் தயாரித்துள்ளனர். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தமிழ்ச் சொற்களஞ்சியம் ( Tamil Lexicon) இலக்கியப் பேச்சு, கிளைமொழி வழக்குகளைத் தருகிறது. இது தனித்தன்மையும், மிகுந்த பயனுள்ளதுமாகும்.
பர்ரோ, எமனோ ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளபடி, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சொற்களஞ்சியமும் தமிழ்மொழியின் ஒட்டுமொத்தமான மொழிநூல் ஆவணமன்று.13 இந்நூல் எழுதப் படுகையில் பல தமிழ்நூல்களின் காலம் முடிவு செய்யப்படாமல் இருந்தமையால் இந்நூல் வரலாற்று நெறியில் தயாரிக்கப்படவில்லை என்பதையும் கருத்திற்கொள்ள வேண்டும்.
3. 6 கல்வெட்டுக்கள்
தமிழ்மொழி வரலாற்று ஆராய்ச்சிக்கு உதவும் அடுத்ததொரு அடிப்படைச் சான்று கல்வெட்டுக்களாகும். தமிழகத்தின் தென் மாவட்டங்களிலுள்ள குகைகளில் பிராமி வரிவடிவத்தில் எழுதப்பட்ட சிறிய கல்வெட்டுக்கள் பல காணப்படுகின்றன. இவை பிராமி வரிவடிவத்தின் தெற்கத்திய முறையில் எழுதப்பட்டவையாகும். கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் தொல் எழுத்தியல் ( Paleography) ஆராய்ச்சி அடிப்படையில் இவற்றின் காலத்தைக் கிறிஸ்துவுக்கு முந்திய மூன்றாம் இரண்டாம் நூற்றாண்டுகள் என மதிப்பிடுகின்றனர். அடுத்த சில நூற்றாண்டுகளைச் சேர்ந்த மிகச்சில கல்வெட்டுக்கள் நீங்கலாக கி. பி. ஏழாம் நூற்றாண்டின் வரை கல்வெட்டுக்களின் வரலாற்றில் நீண்டதொரு இடைவெளி காணப்படுகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து தற்காலம்வரை ஒவ்வொரு நூற்றாண்டிற்கும் உரிய ஏராளமான கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இவை தவிர செப்பேடுகளும், அரசினர் மற்றும் தனியார் ஆவணங்களும் நமக்குக் கிடைத்துள்ளன. இவற்றிலெல்லாம், அவ்வக் காலத்தைச் சேர்ந்த பேச்சு மொழி வழக்குகள் மிகுந்துள்ளதைக் காணலாம்.
பிற்காலத்திய கல்வெட்டுக்களில் செய்யுட் பகுதிகள் காணப்படுகின்றன. இலக்கிய அடிப்படைச் சான்றுகளைப் பயன்படுத்தும் பொழுது நாம் கடைப்பிடிக்க வேண்டிய எச்சரிக்கைகளைப் பற்றி முன்னர்க் குறிப்பிட்டோம். அவற்றையும் இங்குக் கருத்திற் கொள்ள வேண்டும்.
3. 6. 1 எச்சரிக்கைகள்
சில சமயங்களில் கல்வெட்டுக்களில் அவற்றை எழுதியோரின் நடையை மட்டுமே காண்கிறோம். அல்லது அக்காலத்தில் பொது ஆவணங்களில் செல்வாக்குடன் விளங்கிய நடையையே காண்கிறோம். அக்காலத்திய பேச்சு மொழியில் அல்லது செய்யுளில் இடம் பெற்ற பிற மொழிச் சொற்கள் இக்கல்வெட்டுக்களிலும் மிகுதியாக இடம் பெற்றுள்ளன. இப்போது ஆவணங்களில் சட்டத் தொடர்பான பழைய மரபுத் தொடர்களும் பழங்கலைச் சொற்களும் காப்பாற்றப்பட்டுள்ளன. எனவே இவற்றின் காலத்தை அவை காணப்படும் கல்வெட்டுக்களின் காலத்தவைதான் என மதிக்கக்கூடிய ஆபத்தும் உள்ளது. மேலும் இந்த ஆவணங்கள் சிலவற்றின் காலத்தை முடிவு செய்வதும் கடினமானது. பல செப்பேடுகள் போலியானவை என ஆராய்ந்து தள்ளப்பட்டுள்ளன. மேலும் ஆவணங்களின் உண்மைத் தன்மையை முடிவு செய்வதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். ஆவணங்களை எழுதியோர் செய்த தவறுகளையும் கருத்திற் கொள்ள வேண்டும். இத்தவறுகள் வெறும் கையெழுத்துப் பிழையன்றெனின் அவையும் நமது ஆராய்ச்சிக்கு முக்கியமானவையே ஆகும்.
பழந்தமிழ் நூல்களில் ஓலைச் சுவடிகளை வரலாற்றுப் பதிவேடுகளாகவும் ஆவணங்களாகவும் கருதலாம். ஓலைச் சுவடி எழுதுவோர் அனைவரும் கற்றவர் அல்லர். எனவே அவர்கள் பேசிய முறையிலேயே எழுத விழைந்தனர். இவர்கள் செய்த பெரும் எழுத்துப் பிழைகள் கூட, அக்காலத்தின் மொழி நிலையை அறிய உதவக் கூடும். திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவர் ளகர மெய்யையும் ழகர மெய்யையும் வேறுபாடின்றி எழுதுவார் ஆயின், அது அவ்விரு ஒலிகளும் அக்கிளை மொழியில் ஒன்றாகவே கருதப்படுகின்றன என்பதைச் சுட்டிக் காட்டுவதாகும். இந்நோக்கில் பார்க்கையில் நமது காலத்திய, அதற்கு முந்திய தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் எழுதிய கட்டுரைகள் கூட நம் ஆராய்ச்சிக்கு முக்கியமானவைகளே ஆகும்.
3. 7 பிறமொழிக் கல்வெட்டுக்கள்
தமிழ்ச் சொற்களையும், தமிழர் பெயர்களையும், தமிழக இடப்பெயர்களையும் கொண்டுள்ள, இலங்கைச் சிங்களமொழிக் கல்வெட்டுக்களைப் போன்ற பிற மொழிக் கல்வெட்டுக்கள் தமிழ் மொழி வரலாற்றுக்கு அடிப்படைச் சான்றுகளாகப் பயன்படக் கூடியனவாகும்.
அரிக்கமேடு அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மட்பாண்டங்கள் சிலவற்றில் தென்மாவட்டங்களில் உள்ளது போன்ற பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன. பண்டைய நாணயங்களில் காணப்படும் எழுத்துக்களையும் இவற்றோடு சேர்த்துக் கொள்ளலாம்.
3. 8 ஆவணங்களை ஆராயும் முறை
இந்த ஆவணங்களை நமது ஆராய்ச்சி நோக்கங்களுக்கு உரிய அடிப்படைச் சான்றுகளாகப் பயன்படுத்தும் பொழுது ஏற்படும் பலசிக்கல்களை இங்கு ஆராயவேண்டும்.14 உயர் தனிச் செம்மொழிகளையும், இதர பிற மொழிகளையும் பொறுத்தவரையில் அறிவியல் முறையிலானபதிப்புமுறைத் திறனாய்வு’ ( textual criticism) மிகச் சிறந்து வளர்ந்துள்ளது. இதனைத் தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்கும் ஆசிரியர்கள் பலர் இன்னும் அறியாதிருப்பதும் இடர்ப்பாடு தருவதேயாகும்,
மேலும் தொல் எழுத்து ஆராய்ச்சியாளரும், கல்வெட்டு ஆராய்ச்சியாளரும் வரிவடிவங்களை ஒப்பிட்டு ஆராய்ந்து, இதுவரை அறியப்படாத பண்டைய வரிவடிவங்கள் பலவற்றின் தன்மையைக் கண்டுபிடித்து உள்ளனர். இருப்பினும் சிந்து சமவெளி நாகரிகத்தின் வரி வடிவம்பற்றிய உண்மைத்தன்மையைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் இதுவரை வெற்றி பெறவில்லை. ஓர் ஆவணம் முழுமையாக அல்லது பகுதியாக அல்லது சில தொடர்கள் மட்டுமாவது இருமொழிகளின் வரிவடிவங்களிலும் எழுதப்பட்டிருக்குமாயின் அது ஆராய்ச்சிக்குப் பெரிதும் உதவக் கூடியதாகும்.
மொழியியலாரும் ஒப்பிலக்கணத்தாரும் ஓர் ஒலிவடித்திற்கு ஒரு வரிவடிவம் என்ற முறைமையும் மாறிப்போகத்தக்க அளவில் வரிவடிவ அமைப்பினுள் ஓர் ஒழுங்கமைதி ஏற்படவேண்டும் என்ற கருத்தில் வரிவடிவ ஆக்கமுறைகளைச் சீர்திருத்தி வருகின்றனர். எடுத்துக் காட்டாக, உச்சரிப்பில் ககர மெய்யோடுகூடிய அகரம், வரிவடிவத்தில் உயிர் மெய் எழுத்தான ககரக் குறியோடு குறிக்கப் படுவதே இயல்பு. ஆனால் சிற்சில இடங்களில் இதற்கு மாறாக வரிவடிவில் ககர மெய்வடிவோடு மட்டுமே அமைந்து நிற்கக் காணுகிறோம். இம்முறைகளின் பயனாகத் தமிழ் ஆவணங்களில் மெய்கள், சொல் முடிவுகள், வாக்கிய இடைவெளிகள் முதலியன குறிக்கப்படாத பொழுதும் அவற்றைப் படித்து விடலாம். வரிவடிவமுறையின் பல்வேறு குறிப்புக்கள் மொழியின் ஒலியன் அமைப்பை அறிய மிகுந்த கவனத்துடன் பயன்படுத்தப்படுகின்றன. தமிழில் நுனியண்ண மூக்கொலியும், நுனிநா பல் மூக்கொலியும் ஒன்றான பின்னரும் வெவ்வேறானதாகவே எழுதப்படுகின்றன. இது வரிவடிவ மரபைக் குறிப்பதற்கேயாம். மொழிக்கு முதலில் ஓர் எழுத்தும், ஏனைய இடங்களில் மற்றோரெழுத்தும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு மொழியின் வரி வடிவம் பிறிதொரு குடும்பத்து மொழிக்குப் பயன்படுத்தப்படும் பொழுது, முரண்பாடுகள் தோன்றுகின்றன. திராவிட மொழியான கோண்ட் மொழியை, தேவநாகரி வரிவடிவத்தில் எழுதும் பொழுது எகரம், ஒகரம் ஆகியவற்றைக் குறிப்பதில் இடர் ஏற்படுகிறது. (தேவநாகரி வரிவடிவத்தில் எகரமும் ஒகரமும் இல்லை என்பதை இங்கு நினைவிற்கொள்ள வேண்டும்.) உச்சரிப்பில் மாற்றங்கள் ஏற்பட்ட பிறகும், பழைய முறையிலேயே எழுதும்மரபின் நீட்சிஇருப்பினும் அது அம்மொழியின் வரலாற்று வளர்ச்சியை அறிய உதவும் குறிப்பைத் தருகிறது.15
மேலும் சிக்கலான ஆவணங்களின் ஒலித்திறனாய்வு இப்போது எளிதாகி வருகிறது. இவற்றில் உள்ள பிழையான எழுத்துக்கள், யாப்பியல், கலை மரபுகள் என்பன சரியான உச்சரிப்பைக் கண்டறிய உதவுகின்றன. ஒரு மொழியின் வரிவடிவம் பிறிதொரு மொழியை எழுதப்பயன்படும்பொழுது, அம்மொழி ஒலிப்பு முறை பற்றிய உண்மை நிலையை அறிந்து கொள்ள அது பெரிதும் உதவுகிறது. பெரும்பாலான இந்திய வரிவடிவங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்றே கூறலாம் ; குறிப்பிட்ட வட்டாரத்தில் வழங்கும் உச்சரிப்பின் தனிப்பட்ட வளர்ச்சிகள் என்ற வரையறைக்கு உட்பட்டு, பல்வேறு மொழிகளிலுள்ள எழுத்துக்களின் உச்சரிப்புத் தன்மையைத் தெளிவாக அறிந்து கொள்ள இக்குடும்பப் பாங்கின் அமைப்பு உதவுகிறது. புதிய ஒலிகளின் உச்சரிப்பிற்காகப் புகுத்தப்பட்ட ஒலிக் குறியீட்டுப் புள்ளிகளும் கோடுகளும்( diacritical marks) பெறும் மதிப்பை அறியவும் இம்முறை உதவியுள்ளது. இந்த முறையில்தான் தமிழ்க்குகைக் கல்வெட்டுக்களின் பிராமி எழுத்துக்கள் ஆராய்ந்து வாசிக்கப்பட்டன. சமஸ்கிருதத்திலிருந்து இந்திய மொழிகள் கடன் பெற்ற உருபன்களின் ஒலிமதிப்பு தெரிந்திருப்பது, இத்தகைய ஒலி ஆராய்ச்சிக்குப் பெரிதும் உதவக் கூடியதாகும். ஒலியன்களைத் தரும் ஒப்பீட்டு முறையானது, மூல ஒலிகளுக்கும் ( Original Sounds) பின்னர் ஆக்கப்பட்ட ஒலிகளுக்கும் ( Derived Sounds) இடையே உள்ள பொதுமைப் பண்புகளை ஆராய இடந்தருகிறது.
3. 9 பிறமொழியாளர்கள் குறிப்புரைகள்
தமிழ்ப் பெயர்களையும் சொற்களையும் பற்றிப் பிற மொழிகளில் வழங்கும் குறிப்புக்கள், அடுத்துக் குறிப்பிடப்பட வேண்டியதொரு மூல ஆதாரமாகும். கி. மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த வரருசியும்
( Vararuci)
கி. மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பதஞ்சலியும் ( Patanjali) குறிப்பிடும் சில தென்னிந்தியச் சொற்களுடன் இதைத் தொடங்கலாம். இதற்குப் பின்னர் பாலி, சமஸ்கிருதம்,16 பிராகிருதம் ஆகிய மொழிகளின் இலக்கியங்களிலும், குமாரில பட்டரின் ( Kumarila Bhatta) ‘தந்திர வார்த்திகா’ ( Tantra Varttika) போன்ற நூல்களிலும், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற திராவிடக் குடும்ப மொழிகளிலும் குறிப்புக்கள் வருகின்றன. கி. பி. பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தலீலா திலகம்’ ( Lila Tilakam) என்னும் மலையாள நூல் பாண்டிய நாட்டிலும், சோழ நாட்டிலும் நிலவிய சில வழக்காறுகளையும் உச்சரிப்புக்களையும் குறிக்கின்றது. இதற்கு முற்பட்ட இராமசரிதம் போன்ற மலையாள நூல்கள், தமிழ் நூல்களே எனக் கூறப்படுவதுமுண்டு. மேலும் கல்வெட்டுக்களில் உள்ள சமஸ்கிருத சுலோகங்களில் அம்மொழி வரி வடிவத்திலேயே தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளன என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும்.
இவற்றைத் தவிர இந்நாட்டிற்கு வந்த வெளிநாட்டவர் இங்குள்ள நகரங்களையும் துறைமுகங்களையும் ஏற்றுமதிப் பொருட்களையும் பற்றிக் குறிப்பிட்டு உள்ளனர். மெகஸ்தனீஸ் ( Megasthenes), பெரி புளுஸின் ஆசிரியர் ( the author of the Periplus) ப்ளினி ( Pliny), தாலமி ( Ptolemy) போன்றோர் இத்தகைய செய்திகளைத் தருகின்றனர். சீன யாத்திரிகர் யுவான் சுவாங் ( Hieun Tsang) இவ்வகையில் முக்கியமானவர். மேலை நாடுகளிலிருந்து வந்த மார்கோபோலோவும் ( Marcopolo) பிற யாத்திரிகர்களும் நமது ஆராய்ச்சி நோக்கில் முக்கியமானவர்கள். கிறிஸ்துவச் சமயப் போதகர்கள் தம் நாட்டிற்கு அனுப்பிய கடிதங்களை இந்நோக்கோடு ஆராய்வது பெரும் பயன் தருவதாகும். அரசுப் பதிவேடுகளிலும், விதிமுறைகளிலும், ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள தமிழ்ப் பெயர்களும், மேலைநாட்டு மொழிகளின் அகராதிகளில் புகுந்து விட்ட தமிழ்ச் சொற்களும் ஆராய்வதற்கு உரியன ஆகும்.
பிற மொழி வரிவடிவங்களில் எழுதப்பட்ட சொற்கள் அம் மொழிகளின் இயல்புகளுக்கு ஏற்ப மாற்றி எழுதப்பட்ட சொற்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கூறமுடியாது. காலத்துக்குக் காலம் மாறிய உச்சரிப்பு மாற்றங்களை எல்லாம் புரிந்து கொள்ள இலக்கியங்களும், பிற தமிழ் நூல்களும் உதவமாட்டா. பிற மொழி மூலங்கள் எல்லாம் தமிழ்ச் சொற்கள் பிற மொழியாளர்களால் எவ்வாறு கேட்கப்பட்டன என்ற செய்தியைத் தருகின்றன. தங்களது தாய்மொழியின் ஒலியன் அமைப்புக்கு இயைய தமிழ் ஒலிகளைப் பிறமொழியாளர் கேட்டிருக்கக் கூடும் என்ற உண்மையை, இவ் அடிப்படைச் சான்றுகளைப் பயன்படுத்தும் பொழுது கருத்திற் கொள்ள வேண்டும்.
பிறமொழிச் சொற்களைத் தமிழில் ஏற்றுப் பயன்படுத்தியிருப்பதும் நம் ஆய்வுக்குரியதாகும். கடன் தரும் மொழியின் ஒலியன் அமைப்புக்கு இணையான கடன் வாங்கும் மொழியில் உள்ள ஒலியன் அமைப்பை அவை தருகின்றன. ஆனால் எந்த ஒலியன் தொடர் அந்நிய மொழி ஒன்றின் ஒலியன் தொடருக்கு நெருங்கியது என்பதைக் கணிப்பது இயலாது. கடன் வாங்கப்பட்ட சொற்களின் ஒலியன் அமைப்பைக் கொண்டே நெருங்கிய உறவுடைய ஒலியன் பற்றிய முடிவுக்கு வரவேண்டும்.
3. 10 கிளை மொழிகள்
தற்காலக் கிளை மொழிகளைப் பற்றிய ஆய்வுகள், தற்காலப் பேச்சு மொழியின் அடிப்படை இயல்புகளைக் காட்டுவதுடன், பழைய வழக்காறுகளையும் வெளிக் கொணர்கின்றன. திருநெல்வேலிக் கிளை மொழியில் உள்ள முன்னிலைப் பன்மை வடிவமானநீம்’, குரல்வளை வெடிப்பொலி ( glottal stop) உச்சரிக்கப்படுதல் போன்றவற்றைச் சான்றாகக் காட்டலாம். பல பொருள் குறிக்க ஒரு சொல் வருவதன் விளைவானமொழி இயல் நோயைத்’ ( linguistic pathology) தீர்க்கக் கிளை மொழிகள் வழி முறைகளைப் பெற்றுள்ளன. சான்று : ‘உத்தரம்எனும் சொல்உத்தரக்கட்டை’, ‘பதில் அல்லது அனுமதிஆகிய இருபொருளைக் குறித்தது. பின்னர் இரண்டாவது பொருளைக் குறிக்க, ‘உத்தாரம்என்ற சொல் தோன்றியது.
3. 11 ஒப்பியல் முறை
இறுதியாகத் திராவிட மொழிக் குடும்பத்தை ஆராய மொழி இயலார் பயன்படுத்தும் ஒப்பியல் முறையைக் குறிக்க வேண்டும். இந்தோஐரோப்பிய மொழி ஒப்பியல் ஆய்வு அடைந்துள்ள அளவு வளர்ச்சியையும் முதிர்ச்சியையும் திராவிட மொழி ஒப்பியல் ஆய்வு இன்னும் அடையவில்லை. இன்றுள்ள நிலையில் ரோமன்ஸ் மொழி17( Romance Languages) ஒப்பியல் ஆய்வு அடைந்துள்ள வளர்ச்சி நிலையிலேயே திராவிட மொழி ஒப்பியல் ஆய்வும் உள்ளது. இதனால் திராவிட மொழிகளின்மூல-மொழியை’ (Proto-language) இந்தோ-ஐரோப்பிய மொழி ஒப்பியல் ஆராய்ச்சியில் உள்ளதுபோல, மிகப் பழைய காலத்திற்குக் கொண்டு சென்று ஆராய முடியாது. எனவே புதிய ஆராய்ச்சி முறைகள் வகுக்கப்பட்டுச் செம்மைப்படுத்தப்பட வேண்டும். அமெரிக்காவைச் சேர்ந்த எமனோ (M. B. Emeneau)இங்கிலாந்தைச் சேர்ந்த பர்ரோ (T. Burrow ) போன்ற மேலை நாட்டவர்கள் இந்த ஆய்வில் மிகுந்த ஆர்வம் காட்டி உள்ளனர். அவர்களின் வழிகாட்டுதலுடன் தென்னக அறிஞர்கள் பலர் இத்துறையில் நற்பணி ஆற்றியுள்ளதையும் நினைவு கூர வேண்டும். திராவிட மொழிகளின் அடிச் சொல் அகராதி ( Dravidian Etymological Dictionary) இதுவரை நிகழ்ந்த திராவிட மொழி ஆய்வுகளின் மொத்த விளைவென்றே சொல்ல வேண்டும். இவ் அரிய களஞ்சியத்தைப் பயன்படுத்தி தமிழ்ச்சொற்களை அவற்றிற்கு இனமாக உள்ள பிற திராவிட மொழிச் சொற்களோடு ஒப்பிட்டு ஆராய எனக்கு இங்கு போதிய வாய்ப்பில்லை. அத்தகைய ஆய்வு தமிழ் வடிவங்களின் வரலாற்றை விளக்கப் பெரிதும் உதவும் என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

 

No comments:

Post a Comment