Tuesday, August 25, 2020

கல்யாண வரமருளும் காளஹஸ்தீஸ்வரர்

 கல்யாண வரமருளும் காளஹஸ்தீஸ்வரர்

                             மாமன்னன் ராஜராஜசோழன், தன் ஆட்சிக் காலத்தில் சோழ மண்டலத்தை சிறு சிறு நாடுகளாகப் பிரித்தான். அதில் முக்கிய நாடாக விளங்கிய சிங்கவள நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய அழகிய கிராமம் கத்திரிநத்தம்.


                              இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் காளஹஸ்தீஸ்வரர். இறைவி ஞானாம்பிகை. கிழக்கு நோக்கி அமைந்த ஆலயம். பலிபீடத்தையும் நந்தியையும் தொடர்ந்து அகன்ற பிராகாரம், மகாமண்டபத்தின் வலதுபுறம் அன்னை ஞானாம்பிகை தனிச்சன்னதியில் நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் இன்முகம் மலர தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். அம்மன் கோஷ்டத்தில் வைஷ்ணவி, பிராம்மி, இந்திராணி ஆகியோரின் சுதை வடிவத் திருமேனிகள் உள்ளன.


                  அர்த்த மண்டபத்தைத் தொடர்ந்து கருவறையில் இறைவன் காளஹஸ்தீஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் ராகு-கேது தோஷங்கள் விலகுவதால், இது ராகு-கேது பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது திருக்காளத்தி எனும் காளஹஸ்திக்கு நிகரானதாகவும், தென் காளஹஸ்தியாகவும் இத்தலம் கூறப்படுகிறது.
இறைவன் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி அர்த்த நாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கையும், திருச்சுற்றில் கன்னிமூலை கணபதி, வள்ளி-தெய்வானை சமேத முருகன், கஜலட்சுமி, காலபைரவர், நவகிரக நாயகர்களும் அருள்கின்றனர். நவகிரகங்களில் இங்கு சனிபகவான் முதலிலேயே காட்சிதருவது விசேஷ அமைப்பாகக் கருதப்படுகிறது.


                                சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த ஆலயம் அழகிய சுற்றுச் சுவருடன் விளங்குகிறது தலவிருட்சம், வில்வம், ஆலயத்தின் முன் அழகிய திருக்குளமும், கோடி விநாயகர் சன்னதியும் உள்ளன.


                             கோயிலில் உள்ள விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், காலபைரவர், நந்தீஸ்வரர் சிலைகள் முதலாம் ராஜராஜ சோழன் காலத்து படைப்புகள். பழங்காலத்தில் செங்கல் தளியாகவே ஆலயம் இருந்துள்ளது. தற்போதுள்ள கட்டுமானம் கி.பி. 18ம் நூற்றாண்டில் தஞ்சாவூர் மராட்டியர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


                                       கோயிலின் முன் மண்டபத்தில், தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் முதலாம் துக்கோஜி எனும் துளஜா மன்னரின் கல்வெட்டு சாசனம் காணப்படுகிறது. ராயமானிய துக்கோஜி மகாராஜா என்பவர் சப்தரிஷி நத்தம் எனும் ஊரிலுள்ள (கத்திரிநத்தம் ஊரின் பழைய பெயர்) காளஹஸ்தீஸ்வரர் சுவாமிக்கு ஆங்கிரஸ ஆண்டு, கார்த்திகை மாதம் 28ம் நாள் செவ்வாய் கிழமை சர்வமானியமாக நிலம் அளித்ததை இக்கல்வெட்டு விளக்குகிறது.


                            ராரா முத்திரைக்கோட்டை எல்லைக்கு மேற்கும், குளிச்சப்பட்டு எல்லைக்கு கிழக்கும், மருங்கை எல்லைக்கு தெற்கும், குளிச்சப்பட்டு எல்லைக்கு வடக்கும் ஆகிய இந்த நான்கு எல்லைக்கு உட்பட்ட சப்தரிஷி நத்தம் கிராமம் ஒன்றினை 24 அடி கோலால் அளந்து கண்ட 20 வேலி நிலத்தில் சப்தரிஷி நத்தம் காளஹஸ்தீஸ்வர சுவாமிக்கு சர்வமானியமாக பிரமாணம் செய்து கொடுத்தார் என்றும் இக்கல்வெட்டு தகவல் கூறுகிறது.


                            ஒரு சமயம் இறைவனுடைய சாபத்தால் பீடிக்கப்பட்ட சப்தரிஷிகளாகிய மரீசி, அத்ரி, புலத்தியர், பிருகு, ஆங்கிரசர், வசிஷ்டர், பரத்வாஜர் ஆகியோர் 48 நாட்கள் கோயில் எதிரில் உள்ள குளத்தில் நீராடி இத்தல இறைவனான காளஹஸ்தீஸ்வரரை வழிபட்டு வந்தனராம். அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட சாபமும், கடுமையான நோயும் நீங்கப் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது.
ஆலயம் திங்கட்கிழமைகளில் பக்தர்களால் நிறைந்திருக்கும். அன்று ராகுகால நேரமான காலை 7.30 முதல் 9 மணி வரை இறைவனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும் திருமணம் நடைபெற வேண்டும் என எண்ணும் கன்னியரோ, இளைஞரோ அல்லது அவர்களது பெற்றோரோ பயன் வேண்டுவோரின் ஜாதகத்தை தட்டில் வைத்து அர்ச்சனை செய்கின்றனர். அதனால் அந்த வரனுக்கு தோஷங்கள் விலகி, விரைவில் திருமணம் நடைபெறுவதாக பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகி்னறனர்.
மார்கழி 30 நாட்கள், கார்த்திகை சோம வாரங்கள், மகாசிவராத்திரி, நவராத்திரி, வருடப்பிறப்பு, பொங்கல் போன்ற நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி பௌர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது.


                             பொங்கலன்று ஆலயம் சார்பில் திருச்சுற்றில் பொங்கல் வைத்து படைக்கின்றனர். பின்னர் அதை பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகம் செய்கின்றனர். கார்த்திகை தீபத்தன்று ஆலயம் முன்பு சொக்கப்பனை தீபம் ஏற்றப்படுகிறது. தைப்பூசத்தன்று இங்கிருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு புன்னை நல்லூர் சென்று அங்கு தீர்த்தவாரி நடைபெறும்.


                                இந்து சமய அறநிலைத் துறையின் கட்டுப்பாட்டில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் இந்த ஆலயத்தில் குடும்ப ஒற்றுமைக்கு அர்த்தநாரீஸ்வரர் ஆராதனையும் நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வத்திற்கு கால பைரவர் பூஜையும், பிரதோஷ வழிபாடும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. பக்தர்களின் குறைகளையும், கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரரை நீங்களும் ஒருமுறை தரிசித்து வரலாமே!

எங்கே இருக்கு: தஞ்சையிலிருந்து 8 கி.மீ. தொலைவிலும், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் கத்திரிநத்தம் உள்ளது.

தரிசன நேரம்: காலை 7-12; மாலை 4.30-8

No comments:

Post a Comment