Sunday, May 8, 2022

கணவனைக் கண்டெடுக்கும் முயற்சியில் தலைசுற்றும் பிரச்னை

 கணவனைக் கண்டெடுக்கும் முயற்சியில் தலைசுற்றும் பிரச்னை

முதல்ல ஒருத்தன் பெண் கேட்டு வரும்போது, எனக்கு 19 வயசு; இப்ப 30 ஆவுது.

அக்காசேர் எடுத்துக்கிறேன்எனப் பக்கத்து வீடுகளில் இருக்கும் நாற்காலிகளை சசிகலா எடுத்துக்கொண்டு போனால், அன்றைக்கு அவளைப் பெண் பார்க்க வருகிறார்கள் என அர்த்தம். இந்தக் காட்சி, கடந்த 10 வருடங்களாக மாதம் ஒரு முறையாவது காணக்கிடைப்பது. ‘இதுவரைக்கும் எத்தனை பேர் உன்னைப் பொண்ணு பார்க்க வந்திருப்பாங்க?’ என்று கேட்டால், சசிக்கும் சரியான கணக்கு தெரியாது. ‘முதல்ல ஒருத்தன் வரும்போது, எனக்கு 19 வயசு; இப்ப 30 ஆவுது. மாசம் ஒண்ணுனாநீயே கணக்குப் பார்த்துக்கயேன்என்பாள்.

நமக்குத்தான் தலைசுற்றும். பிரச்னைஅவளின் உயரம். கிட்டத்தட்ட ஆறரை அடி. வந்த மாப்பிள்ளைகள் எல்லாம் அவளைக் கழுத்து வலிக்க நிமிர்ந்து பார்த்துவிட்டுத் தெறித்து ஓடினார்கள். காலை வளைத்தபடி, சற்று கூன்போட்டு என எப்படி நின்று பார்த்தும், சசிக்குக் கல்யாணம் நடந்தபாடில்லை.

ஒவ்வொரு முறையும் புடைவை கட்டி எதிர்பார்த்து நின்று ஏமாறுவது சலிப்பான விஷயம்தான். இருப்பினும், அவளைவிட உயரமான ஒருவனைக் கண்டெடுக்கும் வரை அவள் அப்படித்தான் நின்றாக வேண்டும். என்றோ ஒருநாள்சசியைப் பிடித்திருக்கிறது!’ என்று ஒருவன் சொன்னால், ‘சசிக்கு அவனைப் பிடித்திருக்கிறதா?’ என்ற கேள்வியே எழாது. ‘விடாதே அமுக்கு!’ என அவனை அவள் தலையில் கட்டிவைத்துவிடுவார்கள்.

இது 2014-ல் திருநெல்வேலியில் ஒரு பெண்ணின் கதை.

சென்னையில் மீடியா ஒன்றில் வேலை செய்கிறாள் திவ்யா. சொந்த ஊர் விருதுநகர் அருகில் ஒரு கிராமம். மாடலிங் போட்டோகிராஃபர் ஒருவரோடு காதல். இருவரும் சென்னையில் ஒரே வீட்டில் லிவ்விங் டுகெதர்! ‘எங்க வீட்ல இவனைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு சத்தியமா அக்செப்ட் பண்ண மாட்டாங்க. என்னாலயும் அப்பாவை எதிர்த்துப் பேச முடியாதுஎன்ற முரணோடுதான் அந்தக் காதலில் அவள் பயணித்துக்கொண்டிருக்கிறாள்.

சமயங்களில் ஊரில் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாக, அப்பா தகவல் சொல்வார். ‘என்னைக்குனு சொல்லுங்கப்பாவர்றேன்!’ எனப் பொறுப்பாகக் கிளம்பிச் செல்வாள். புடைவை கட்டி, பூ வைத்து மாப்பிள்ளை பார்ப்பதற்காகக் கொஞ்ச நேரம் நின்றுவிட்டு திரும்பி வருவாள். ஆனால், திருமணத்துக்குப் பிறகு மாப்பிள்ளையோடு மும்பை போக மாட்டேன், மாப்பிள்ளை பார்க்கும் வேலை எனக்குப் பிடிக்கவில்லை, அவரோடு பேசிப் பார்த்தேன், செட் ஆகலைஎன்று ஏதேதோ காரணம் சொல்லி, ஒவ்வொரு மாப்பிள்ளையையும் தட்டிக்கழித்துவிடுவாள். அவள் வீட்டில் தொடர்ந்து மாப்பிள்ளை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவளும் விடாமல் போய் காபி கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மற்ற சமயங்களில் போட்டோகிராஃபரோடுகோயிங் ஸ்டெடி’!

இந்த நாடகத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பது திவ்யாவுக்கும் சஸ்பென்ஸ்தான். இதில் அந்த போட்டோகிராஃபர் காதலனின் மனநிலைதான் என்னை யோசிக்கவைத்தது. பெண் பார்க்கஎன அவள் ஒவ்வொரு முறை ஊருக்குக் கிளம்பும்போதும், அவன் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு அல்லாடுவானாம். இந்த வகைப் பெண்களுக்கு, பெண் பார்க்கும் படலம் ஒரு ஜாலி ஷோ. ‘வேண் டாம்னு வீட்ல சொன்னா, கேக்க மாட்டாங்க. அப்போசிரிச்சாப்போச்சுகேம் ஷோ கணக்கா சிரிக்காம காபி குடுத்துட்டு வந்துர்றது பெட்டர்!’ என எளிதாக அணுகுகிறார்கள்.

யதார்த்தம் என்னவெனில், திவ்யாவும் சசிகலாவும் ஒரே காலகட்டத்தில் அருகருகே வசிக்கிறார்கள் என்பதுதான். ‘அவனைப்போல வீடு, அவனைப்போல வேலை, மூணு வருஷத்துக்கு அப்புறம்தான் கல்யாணம்என அப்பாவை நிமிர்ந்து பார்த்து அதீத நம்பிக்கையில் ஒரு பெண் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ‘ப்ளஸ் டூ முடிச்சாச்சுல்ல. இனி எதுக்குப் படிப்பு? அடுத்த வாரம் மேலூர்க்காரங்களை வரச் சொல்லிருக்கேன். கல்யாணத்தை முடிச்சுப்புடுவோம்!’ என்ற அதட்டலான அப்பாவின் குரலுக்குத் தலையாட்டும் பெண்கள் பெருமளவில் இங்கு இருக்கிறார்கள்.

பெண் பார்க்கும் படலத்தில் ஒரு பெண் காட்டும் இமேஜ் என்பது, அவள் உண்மையான முகம் அல்ல என்பது, இன்றைய இளைஞர்களுக்கும் தெரியும்!

பெண்களுக்கு எந்தக் காலத்திலும் உடன்பாடே இல்லாத இந்தப் பெண் பார்க்கும் நிகழ்வை, காதல் திருமணங்களும் கட்டிக் காப்பாற்றுவதுதான் பெரிய முரண்.

சவீதாவும் சுரேஷம் ஆறேழு வருடக் காதலர்கள். ஒரே சாதி. பையன் வீடு தங்களுக்கு சம அந்தஸ்தான குடும்பம் என்பதால், சவீதா வீட்டில் சம்மதித்துவிட்டார்கள். ‘எங்க அப்பா-அம்மாவைக் கூட்டிட்டு வர்றேன். அவங்களுக்குப் பிடிக்கிற மாதிரி நடந்துக்கோ ப்ளீஸ்என்ற கோரிக்கையோடு சுரேஷ், சவிதாவைப் பெண் பார்க்க வருவதாகச் சொன்னான். ‘பொண்ணு குண்டா இருந்தா எங்கம்மாவுக்குப் பிடிக்காது. ஸ்லிம்மாத் தெரியுற மாதிரி டிரெஸ் பண்ணிக்கோஎன அவன் சொன்னதுதான் அவளை டென்ஷனாக்கிவிட்டது. ஒரே வாரத்தில் எப்படி ஒல்லியாவது?

சுரேஷின் அம்மா, அப்பா, அண்ணன், அண்ணிஎன ஒன்பது பேர் பெண் பார்க்க வர, சின்னத் தொப்பையை மறைக்க வயிற்றை எக்கி மூச்சைப் பிடித்துக்கொண்டு வெளியே வந்தாள்மங்களகரமானசவீதா. வந்தவர்களுக்கு வணக்கம் சொல்லி, காபி கொடுத்து, பவ்யமாக உட்கார்ந்து, கேள்விகளுக்குச் சின்னச் சிரிப்புடன் பதில் சொல்லிஎவ்வளவு நேரம்தான் மூச்சைப் பிடித்துக்கொண்டே இருப்பது? தொந்தி எட்டிப் பார்த்துவிட்டது. சவீதாவை தலை முதல் கால் வரை ஸ்கேன் பண்ணிக்கொண்டே இருந்த சுரேஷின் அம்மா, சில நிமிட இடைவெளிகளில்முளைத்துவிட்டதொந்தியைக் கண்டுபிடித்துவிட்டாள்.

பொண்ணு குண்டா இருக்காளே..! இப்பவே இப்படினா, ரெண்டு குழந்தை பெத்துட்டா உனக்கு அக்கா மாதிரி இருப்பாடா!’ என அத்தனை பேர் முன்னிலையிலும் சுரேஷிடம் சொல்ல, பெண் வீட்டார் முகங்கள் இறுக, அந்தக் கல்யாணத்தை நடத்தி முடிப்பதற்குள் சுரேஷ்-சவீதா இடையிலான காதல் கரைந்துவிட்டது!

பெண் பார்ப்பது, பெரும்பாலான குடும்பங்களில் இன்றைக்கும் ஒரு சாதாரண நிகழ்வு இல்லை. மாப்பிள்ளை வீட்டார் வந்து போவதற்குள் பெண்ணின் உறவினர்களே பெண்ணைப் படுத்தி எடுத்துவிடுவார்கள். ‘ஏன் இவ்ளோ கறுப்பா இருக்கபவுடர் போடுஎன அன்று காலையில்தான் அவள் கறுப்பாக இருப்பதைக் கண்டுபிடித்ததுபோல் நடந்துகொள்வார்கள்.

போயிட்டுச் சொல்றோம்என அவர்கள் எழுந்து போனால், அந்தப் பெண்ணின் கதை அவ்வளவுதான். மூணாவது படிக்கும்போது உள்ளாடை அணியாமல் வாசலில் நின்றது வரை நினைவுபடுத்தப்பட்டு, அதனால்தான் மாப்பிள்ளைக்குப் பிடிக்கவில்லை என அவள் திட்டு வாங்க வேண்டியிருக்கும்.

விவாகரத்து ஆன / கணவனை இழந்த பெண்களின் இரண்டாவது திருமணத்திலும், இந்தப் பெண் பார்க்கும் நிகழ்வு நிச்சயம் இருக்கும். முதல் திருமணம் பற்றி, முதல் கணவனைப் பற்றி விலாவாரியாக அங்கு பேசப்படும். அவளது மனநிலையைக் கருத்தில்கொள்ளாமல், நடுவில் நிற்கவைத்து, ‘இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறதே தப்போ?!’ என்ற குற்றவுணர்வை உருவாக்கிவிடுவார்கள்.

நிம்மிக்குத் திருமணமாகி இரண்டு வருடங்களில், ஒரு வயதில் குழந்தை இருக்கும்போது கணவர் விபத்தில் இறந்துவிட்டார். மூன்று ஆண்டுகள் கழித்து நிம்மியின் தம்பி, அவளுடைய இரண்டாவது திருமணத்துக்கு ஏற்பாடு செய்தார். பெண் பார்க்கும் அந்த மாலையில் நிம்மியின் மகன் இருந்தால் மாப்பிள்ளை வீட்டார் இடைஞ்சலாக நினைப்பார்கள் என, அவன் உறவினர் வீட்டுக்கு அனுப்பப்பட்டான்.

அந்த வருத்தத்திலேயே நிம்மி நின்றுகொண்டிருக்க, அனைவர் முன்னிலையிலும் மாப்பிள்ளையின் உறவினர்கள் ஆளாளுக்கு நேர்காணல் நடத்த தொடங்கினார்கள். ‘புருஷன் எப்படிச் செத்தான், ஜாதகம் எல்லாம் பார்த்துத்தானே கல்யாணம் பண்ணீங்க, பொண்ணுக்குத் தோஷம் ஒண்ணும் இல்லீயே?’ என்பதுபோல அது ஒரு நீண்ட பட்டியல். கூட்டத்தில் ஒரு பெண், ‘குழந்தை எப்படிப் பொறந்துச்சு?, நார்மல் டெலிவரியாசிசேரியனா?’ எனக் கேள்வியின் போக்கை மாற்றினார்.

அதோடவாவது அவர் நிறுத்திருக்கலாம். ‘வயித்துல டெலிவரி தழும்பு இருக்காபார்க்கலாமா?’ என எழுந்து வந்து நிம்மியைத் தனியறைக்கு அழைத்துச்செல்லும் முனைப்புடன் நின்றார். நிம்மியின் தம்பி, பெரிய சண்டை போட்டு அவர்களைத் துரத்த வேண்டியிருந்தது. இனி அடுத்து ஒரு திருமணத்துக்கு நிம்மி தயாராவது சிரமம்தான்.

தர்மசங்கடமான, காயப்படுத்தக்கூடிய இந்த மாதிரியான நிகழ்வுகளைத் தருவது பெரும்பாலும் பெண்களாக இருப்பதை என்ன சொல்ல? மகன்களைப் பெற்ற அம்மாக்கள் அனைவரும் மகனுக்குப் பெண் பார்ப்பதைவிட, தனக்குச் சரியாகப் பொருந்துகிற மரு மகளைத்தான் சலித்துச் சலித்துத் தேடுகிறார்கள்.

நாம ஃபர்ஸ்ட் காபி ஷாப்ல மீட் பண்ணலாம். பிடிச்சிருந்தா வீட்டுல சொல்லலாம்என்று பேச வாய் திறக்கும் பெண்கள் மட்டுமே, இந்த அபத்தங்களில் இருந்து தப்பிக்க முடிந்தவர்கள். மாப்பிள்ளையை நிமிர்ந்து ஒரு முறை முழுதாகப் பார்க்கும் வாய்ப்பு பெற்றவர்களும் இவர்களே. மற்ற பெண்கள் எல்லாம் ஒரு நிமிடம் லேசுபாசாகப் பார்த்துவிட்டு, உள்ளே போய்விட வேண்டியதுதான்.

ஒரு சேலை எடுக்க ஒன்பது கடை ஏறி இறங்கும் பெண்களுக்கு, தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பார்த்தீர்களா?

அதுவே கொஞ்சம் ரொமான்டிக்கான மாப்பிள்ளை என்றால், பெண் வேலை செய்யும் இடத்துக்கு பார்க்க வருவார். ‘ஆபீஸுக்கு எதுல வருவ, எத்தனை பேர் வேலை செய்றாங்க, எதெல்லாம் நல்லா சமைப்ப, என்ன வண்டி வெச்சிருக்க?’ என்ற அளவில்தான் இருக்கும் அவர்களது பேச்சு. ‘காதல் கல்யாணத்திலயாவது, காதலிக்கிறப்ப நாம ரொமான்டிக்கா இருக்க முடியும். கல்யாணமானதும் தன்னால ஸ்டிஃப் ஆயிடுவோம். ஆனா, நிச்சயிக்கப்பட்ட கல்யாணத்துல ஆரம்பத்துல இருந்தே ஸ்டிஃப்தான். பொண்ணு பார்த்த நாள்ல இருந்தே உர்ர்ர்ர்ர்ருனு இருக்கவேண்டியதுதான்!’ என பெண்கள் அலுத்துக்கொள்வதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

எல்லா நிச்சயிக்கப்பட்ட திருமணங்களிலும், நிச்சயம் முடிந்ததும் மாப்பிள்ளை தவறாமல் செய்யும் வேலை, நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு புது மொபைல் வாங்கித் தருவது. அவளிடம் ஏற்கெனவே அது இருக்கும்தான். ஆனாலும் தரவேண்டியது எழுதப்படாத சடங்கு. ‘ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கட்டும்என்ற பெருந்தன்மைப் புரிதலில் குக்கிராமத்தில்கூட இதற்கு அனுமதி உண்டு. ‘எனக்கு சாம்பார் பிடிக்கும். உனக்கு செய்யத் தெரியுமா? எனக்கு விஜய் பிடிக்கும். உங்களுக்கு..? புடைவை கட்டுவீங்களாசுடிதார் போடுவீங்களா?’ என்ற மிகப் பெரும் புரிதல்கள் அந்த மொபைல் பேச்சில் பரிமாறப்படும்.

பெரும்பாலான நிச்சயிக்கப்பட்ட திருமண மேடைகளில், ‘சம்பந்தமே இல்லாமக் கட்டிக்கிட்டோமோ!’ என ஆளுக்கொரு பக்கம் நின்று முழிப்பதுதான் நடக்கிறது.

நம் காலத்திலேயே இப்படியென்றால், 30 ஆண்டுகளுக்கு முன்பு? ‘அப்பாவை ஃபர்ஸ்ட் டைம் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோணுச்சு?என்று அம்மாவிடம் கேட்டேன். அவரது அப்பா இறந்த பிறகு அண்ணன்களால் செய்துவைக்கப்பட்ட திருமணம் அம்மாவுடையது. ‘எங்க பார்க்க விட்டாங்க? ஒருத்தர் வந்தார். குளிச்சிட்டு நின்ன என்னைக் கூப்பிட்டாங்க. நான் வந்து நின்னேன். அப்புறம் கல்யாணத்துக்குத்தான் வந்தாரு. அப்போதான் அவர்தான் மாப்பிள்ளைனு தெரியும். கல்யாணம் முடிஞ்சு ரெண்டு நாள் கழிச்சுப் பார்த்ததுதான்’! – அம்மா தலைமுறைப் பெண்களுக்கு, பெரும்பாலும் அனுபவம் இப்படித்தான் இருந்திருக்கும்.

அம்மாவின் தோழி அவர், கறுப்பாக இருந்ததால் திருமணம் தடைபட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. தூரத்தில் இருந்து ஒரு மாப்பிள்ளை வர, பெண் பார்க்கும் நிகழ்வில் அவரது தங்கையை உட்காரவைத்துவிட்டு, திருமணத்துக்கு இவரைப் பிடித்து உட்காரவைத்துவிட்டார்கள். எப்படியாவது கல்யாணம் நடத்திவெச்சிடணும். அப்புறம் வாழ்றதும் வாழாமப் போறதும் அவ தலையெழுத்து என்ற பெற்றோர்கள், போன தலைமுறை வரை இருந்தார்கள்தானே?! கல்யாணம் நடந்தது இரவில் விளக்கு வெளிச்சத்தில். சூரிய வெளிச்சத்தில் உண்மை தெரிந்துவிட, அன்றைக்கே ஆரம்பித்திருக்கிறது அடியும் உதையும். ஒரே வாரத்தில் அந்தத் தங்கையையும் அவருக்கே கட்டிவைத்து பிராயச்சித்தம் தேடிக்கொண்டார்கள். ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக அக்காவைக் கடைசி வரை அடித்துக்கொண்டுதான் இருந்தார் அவர்.

உண்மையில், இந்த நிலை இப்போது பெருமளவில் மாறிவிட்டதை நினைத்துச் சந்தோஷப்பட முடிகிறது. ‘எப்படியோ போஎன்ற அளவில் பெண் திருமணங் கள் பார்க்கப்படுவது இல்லை. தன் திருமணத்தைத் தானே தேர்வுசெய்யும் உரிமை, சில பெண்களுக்காவது வாய்த்து இருக்கிறது. பிடிக்காத திருமணத்தை நிறுத்துவது சாத்தியப்பட்டிருக்கிறது. பெண் பார்க்கும் படலத்தின்போது, ‘ஆங்அப்புறம்என நைட்டியோடு வந்து அமர்ந்து மொபைல் போனை நோண்டினால் போதும்… ‘பொண்ணா வளர்த்திருக்காங்க…’ எனத் தெறித்து ஓடிவிடுவார்கள் பையன் வீட்டார். அநேகம் பெண்கள் பிடிக்காத திருமணத்தை நிறுத்துவது இப்படித்தான்.

பெண் பார்க்க வரும்போது, மாப்பிள்ளை-பெண் இருவரையும் தனியாகப் பேசவிடுவது இப்போது ஃபேஷன். ‘இரண்டு பேரும் வேணும்னா போய்ப் பேசிக்கங்கஎன அவர்கள் பேசினால், தங்கள் காதில் விழும் தூரத்துக்கு அனுப்பிவைப்பார்கள். ‘என்னதான் பேசுனீங்க இரண்டு பேரும்?’ என, சமீபத்தில் பெண் பார்த்துச் சென்ற அனுபவம் உள்ள நண்பனின் தங்கையிடம் கேட்டேன். ‘எங்க காலேஜ்ல படிக்கிற அவர் ஊர் பொண்ணு பத்தி கேட்டார். ஜன்னல் ஸ்க்ரீன் நல்லா இருக்குனு சொன்னார். மதுரை அவருக்கு ரொம்பப் பிடிச்ச ஊருனு சொன்னார். காபில சர்க்கரை கம்மியாப் போட்டாதான் அவருக்குப் பிடிக்கும்னு சொன்னார். நான் எனக்கு மாதிரியே அதிகமாப் போட்டிருந்தேன். அப்புறம் போயிட்டார்என அப்பாவியாகச் சொன்னாள்.

சினிமா, சீரியல், நாவல்எனப் பார்த்துப் படித்து, தனிமைப் பேச்சின்போது கலகலவெனப் பேசுவார், கையைப் பிடித்துக்கொள்வார், சின்னதாகஹக்செய்வார் என்றெல்லாம் எதிர்பார்த்தாளாம் அவள்!

நம் சமூகத்தில் பெண்களின் வாழ்க்கையை திருமணம்தான் முடிவுசெய்கிறது. வாழ்க்கையின் முக்கால் பங்கு நாட்களை அவள் குடும்பத்துக்குள் தான் ஓட்டியாக வேண்டும். ஆகவே, திருமணம் பற்றிய, வரப்போகும் கணவர் பற்றி அதிகக் கனவுகள் அவளுக்கு உண்டு. அப்படியான தன் கனவுக் கணவனைக் கண்டெடுக்கும் முயற்சியில் வரும் நாட்களில் நம் பெண்கள் இன்னும் தீவிரமாக முனைவார்கள் என்றுதான் தோன்றுகிறது. 20 வருடங்கள் கழித்து இப்படியான சப்ஜெக்ட் பற்றி எழுத உட்கார்ந்தால், திவ்யாக்கள்தான் அதிகம் இருப்பார்கள். சசி போன்ற பெண்கள், முந்தையகண்ணகி’, ‘நளதமயந்தி’, ‘வாசுகிபோலலாங் லாங் கோ…’ என்ற அடைப்புக்குறிக்குள் போயிருப்பார்கள். அவ்வளவுதான்

No comments:

Post a Comment