Thursday, June 30, 2022

சமயபுரம் மாரியம்மன் கோவில்.

 சமயபுரம் மாரியம்மன் கோவில்.

        தமிழ்நாட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் முக்கியமானது சமயபுரம் மாரியம்மன் கோயில். இது, திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

 வரலாறு :

    சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர். இது ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகும். பிற்காலத்தில், பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அந்த கோட்டையும் நகரமும் அழிந்து வேம்புக்காடாக மாறியது. இங்கு தான் அம்மன் கோவில் உருவாகியதாக நம்பப்படுகிறது.

 அம்மனின் வரலாறு :

         வைணவி என்ற மாரியம்மன் சிலை ஸ்ரீரங்கத்தில் இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால், ஸ்ரீரங்கத்தில் இருந்த ஜீயர் சுவாமிகள், வைணவியை ஸ்ரீரங்கத்தில் இருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டனர். அவரின் ஆணையின்படி, வைணவியின் விக்கிரகத்தை ஆட்கள் அப்புறப்படுத்துவதற்காக வடக்கு நோக்கி சென்று சற்று தூரத்தில் இளைப்பாறினார்கள். பிறகு மாரியம்மனின் சிலையை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள், அச்சிலையைப் பார்த்து அதிசயப்பட்டார்கள். பின், அக்கம் பக்கத்தில் இருந்த கிராமத்து மக்களைக் கூட்டிவந்து அதற்கு 'கண்ணனூர் மாரியம்மன்" என்று பெயரிட்டு வழிபட்டனர்.

         அக்காலத்தில் விஜயநகர மன்னர் தென்னாட்டின் மீது படையெடுத்து வரும்போது கண்ணனூரில் முகாமிட்டார்கள். அப்போது அரண்மனை மேட்டிலிருந்த கண்ணனூர் மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோவில் கட்டி வழிபடுவதாக சபதம் செய்தார்கள். அதன்படியே அவர்கள் வெற்றியும் கண்டார்கள். அம்மனுக்கு கோவிலையும் கட்டினார்கள்.

          விஜயரங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் கி.பி. 1706-ல் அம்மனுக்கு தனிக்கோவில் அமைத்தார்கள் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோவில் இன்று, 'சமயபுரம் மாரியம்மன்" கோவிலாக மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

 அம்மனின் உருவம் :

            சமயபுரம் மாரியம்மன் சிலை அம்மன் எட்டு கைகளுடன், தலை மாலை கழுத்தில், சர்ப்பக் கொடையுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் படி அமைந்துள்ளது.

 அம்மனின் சிறப்பு :

          பிள்ளை வரம் கிட்ட அதிக அளவில் சமயபுரத்து அம்மனை வேண்டிக் கொள்கின்றனர். வேண்டுவோர்க்கு வேண்டும் வரத்தை சமயபுரம் மாரியம்மன் அளிப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

No comments:

Post a Comment