Monday, February 20, 2023

ஒளவையாரின் நாலு கோடிப்பாடல்கள்

 ஒளவையாரின் நாலு கோடிப்பாடல்கள்

ஒரு முறை சோழ நாட்டிலே ஒரு களிநயமான நிகழ்ச்சி அரங்கேறியது. அன்று சோழ மன்னனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, மன்னன் தம் புலவர்களை எல்லாம் அழைத்து மறுநாள் பொழுது விடிவதற்குள் "நாலு கோடிப்பாடல்" பாடிவர வேண்டும் என்று கட்டளையிட்டார்.

 

ஒரு நாளில் நாலு பாடல் என்பதே பெரிய வேலை. அதுவும் புலமையுடன் எழுத வேண்டும். நாற்பது பாடல் என்றாலும் பரவாயில்லை. ஒரேயடியாக நாலுகோடிப் பாடல்கள் வேண்டுமானால் நாங்கள் எப்படி எழுதுவோம். ஐயோ சொக்கா...! என்று தருமியைப் போலப் புலம்பத் துவங்கி விட்டார்கள் புலவர்கள். எப்படிப் பாடுவது என அஞ்சினார்கள்.

அந்த வழியாக வந்த ஒளவையார், புலவர்கள் இப்படி புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து என்னவென்று விசாரித்தார். புலவர்களோ "எப்படிச் சிக்கிருக்கோம் பார்த்தீங்களா??" என்று வடிவேலு ரேஞ்சுக்கு நடந்ததைக் கூறினார்கள்.

 

இதைக் கேட்ட ஒளவைப் பாட்டி "பூ இவ்வளவு தானா?" என்று சொல்லி 'சிறப்பான பண்புளைக்' குறிக்குமாறு நான்கு பாடல்களை ஒவ்வொன்றும் ஒரு கோடிக்குச் சமானம் எனப் பொருள் படும்படியாகப் பாடி அந்த நான்கு பாடல்களையும் புலவர்களிடம் தந்தார்.

 

மறுநாள் புலவர்கள் அந்தப் பாட்டை மன்னரிடம் பாடிக்காட்டினார்கள். மன்னனுக்கோ மிகவும் ஆச்சரியம். இத்தனைச் சிறப்பு வாய்ந்த பாடலை இவ்வளவு சமயோசிதமாகப் பாட ஒளவையாராலேயே முடியும் என்று கூற புலவர்களும் ஒத்துக்கொண்டார்கள்.

பெருமகிழ்ச்சியடைந்த மன்னன் ஒளவைப்பாட்டியை அழைத்து அவருக்கு பெரு மரியாதை செய்து பரிசுகளும் கொடுத்து மகிழ்ந்தான் என்கிறது வரலாறு.

விடிவதற்குள் பாடப்பட்ட அந்த நான்கு கோடிப்பாடல் என்னவென்று கேட்கிறீர்களா? பாடலும் அதற்க்கு உண்டான விளக்கமும் இதோ கீழே:

 

1)மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று

மிதியாமை "கோடி" பெறும்;

நல்ல பண்புகளை மதித்து நடக்காதவரின் வீட்டின் முன்பகுதியைக் கூட மிதிக்காமல் இருப்பது, செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். (அதாவது மதியாதார் தலைவாசல் மிதியாதே!)

 

2) உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்

உண்ணாமை "கோடி" பெறும்;

உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

 

3) கோடி" கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு

கூடுதல் கோடி பெறும்;

கோடி பொன்னைக் கொடுத்தாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

 

4) கோடானு "கோடி" கொடுப்பினும் தன்னுடைநாக்

கோடாமை கோடி பெறும்..

பலகோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

 

No comments:

Post a Comment