Thursday, December 2, 2021

ரம்பை வழிபட்ட திருதியை திருநாள்!

 

செல்வம் அள்ளித்தரும் அட்சய திருதியை எல்லோருக்கும் தெரியும். பெண்களுக்கு அதே ஐஸ்வரியத்தோடு பேரழகையும் அள்ளித் தரும் விரதம்தான் ரம்பா திருதியை! கார்த்திகை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாம் நாள் ரம்பா திருதியை கொண்டாடப்படுகிறது. தேவலோகப் பேரழகியான ரம்பை, தன் அழகும் ஐஸ்வரியமும் கூடுவதற்காக இந்திரன் அறிவுரையின்பேரில் கௌரிதேவியாகிய கார்த்தியாயினியை வழிபட்ட நன்னாள் இது என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

 

ரம்பா திருதியை எப்படி உருவானது என்பது பற்றி ஓர் அழகான கதை சொல்லப்படுகிறது.

ஒருமுறை, தேவசபை கூடியபோது, இந்திரனும் இந்திராணியும் அரியணையில் அமர்ந்திருந்தனர். பட்டுக் கம்பளம் விரிக்கப்பட்ட மேடையில் தேவலோகப் பேரழகிகளான ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகியோர் நடனமாடிக் கொண்டிருந் தனர். ஒருகட்டத்தில், தங்களில் யார் சிறப்பாக நடனமாடுகிறார்கள் என ஒரு போட்டி எழ... மூன்று பேரின் நடனத்தின் வேகம் அதிகமானது. தேவலோக முதல் பேரழகி என்ற தனது பட்டத்தைத் தக்க வைத்துக்கொள்ள எண்ணிய ரம்பை, அரங்கமே அதிரும்படி ஆக்ரோஷமாக ஆடினாள்.

 

அப்போது யாரும் எதிர்பார்க் காத நிலையில், ரம்பை அணிந்திருந்த நெற்றிப் பொட்டும் பிறைச் சந்திரனும் கீழே விழுந்து விட... நிலைகுலைந்தாள் அவள். இந்தக் காட்சியைக் கண்ட ஊர்வசியும் மேனகையும் ரம்பையைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து, தங்களது ஆட்டத்தை நிறுத்திவிட்டு வெளியேறினர். அவர்களின் செய்கையை தனக்கு நேர்ந்த அவமானமாகக் கருதிய ரம்பை, கீழே விழுந்த அணிகலன்களை எடுத்துக் கொண்டு, அழுதபடியே அரங்கை விட்டு வெளியேறினாள்.

நடந்ததை எல்லாம் தேவர் பெருமக்கள் வியப்புடனும், அதிர்ச்சியுடனும் பார்த்துக் கொண்டிருக்க... 'இன்றைய சகுனம் சரியில்லை; சபை கலையலாம்என்று உத்தரவிட்டு எழுந்தான் இந்திரன்.

அன்று இரவு, ரம்பைக்குத் தூக்கம் வர மறுத்தது. சபையில் தனக்கு நேர்ந்த அவமானத்தை எண்ணி எண்ணிக் கண்ணீர் சிந்தினாள். அந்தச் சிந்தனையிலேயே பொழுதும் விடிந்தது. முதல் வேலையாக, தூக்கம் தொலைத்த கண்களுடன் இந்திரனைச் சந்தித்தாள். 'நேற்று அவையில் எனக்கு ஏற்பட்ட அவமானத்துக்குப் பிராயச்சித்தம் வேண்டும். நடந்த சம்பவத்தால் 'முதல் அழகிஎன்ற அந்தஸ்து என்னை விட்டுப் போய்விட்டதோ என்று அச்சம் கொள்கிறேன்' என்று கண்ணீர் வடித்தாள் ரம்பை.

 

ரம்பையை முறைத்துப் பார்த்த இந்திரன், 'நர்த்தனம் புரிபவர்கள் நர்த்தன பாவங்களின் விதி மாறாமல் ஆடுவதே முறை! மோகினி உருவாக இருக்கும் நீங்கள் மூவரும் நர்த்தனமா புரிந்தீர்கள்? ராட்சதக் களிக்கூத்தை அல்லவா ஆடிவிட்டீர்கள்! அதிலும், உன்னுடைய ஆட்டம்தான் பேயாட்டமாகி அரங்கையே அதிரவைத்துவிட்டது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கலைகளின் அரசி கலைவாணி, அதைக் காணச் சகிக்காமல்தான் உனது பிறைச் சந்திரனைக் கழற்றியதோடு, நெற்றிப் பொட்டையும் அகற்றி விட்டாள். அதனால், இன்னும் சில ஆண்டுகளுக்கு உன்னுடைய அழகிப் பட்டமும் நர்த்தன முறையும் அரங்குக்கு வராமலேயே இருக்கட்டுமே..!' என்று ஆவேசப்பட்டுப் பேசினான்.

'தேவேந்திரா! பதவி உயர்வுக்கும், பட்டத்துக்கும், கௌரவத்துக்கும் தேவருலகில் அதிபதியான நீங்களே என்னை விலகி இரு என்று சொல்லலாமா? இதற்குச் சரியான வழியை- பிராயச்சித்தத்தை எனக்கு இப்போதே சொல்லி, எனது துயரத்தைப் போக்கிட வேண்டும்'' என்று மன்றாடினாள் ரம்பை.

 

அழுது புலம்பும் ரம்பைக்கு ஆறுதல் சொல்ல விரும்பிய தேவேந்திரன், 'பூலோகத்தில், தன் பதியைத் தேடிச்சென்ற பார்வதிதேவி கௌரி அன்னையாக அவதரித்திருக்கிறாள். அவள் ஒரு மகிழ மரத்தின் கீழ் தவக்கோலத்தில் இருக்கிறாள். அந்தத் தேவியை விரதமிருந்து வழிபட்டால், உனக்கு அருள் செய்வாள். உனக்கு நேர்ந்துள்ள களங்கமும் தீரும்' என்றான்.

அதன்படி பூலோகம் வந்த ரம்பை, அன்னை கௌரிதேவியைத் தேடினாள். அவள் வந்தது கார்த்திகை மாதம் என்பதால், எங்கு பார்த்தாலும் தீபங்கள் வரிசையாக ஒளிர்ந்து கொண்டிருந்தன. தனக்கும் வாழ்வில் ஒளி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு அவள் கௌரிதேவியைத் தேடியபோது, அந்த அன்னையின் தரிசனம் கிடைத்தது.

 

கார்த்திகை மாதத்தில் அமாவாசைக்கு இரண்டாவது நாள்தான் துவிதியை திதி. இந்த நன்னாளில் மஞ்சளால் அம்பிகையை பிரதிமையாக (பொம்மையாக) செய்து, விரதம் இருந்து பூஜை செய்தாள் ரம்பை. மஞ்சள்கொண்டு கௌரிதேவியை செய்து வணங்கியதால், இந்த விரத பூஜைக்கு (திந்திரிணி- மஞ்சள்) தீந்திரிணி கௌரிவிரதம் என்று பெயர் ஏற்பட்டது. முறையாக ரம்பை செய்த பூஜையை ஏற்றுக் கொண்ட கௌரிதேவி, மறுநாள் தங்க நிறத்தில் ஸ்வர்ணதேவியாக அவளுக்குக் காட்சி தந்தாள். மேலும், ரம்பையின் பூஜையில் மகிழ்ந்த தேவி, மீண்டும் தேவலோகத்தில் முதல் அழகியாகும்படி அவளுக்கு அருள்புரிந்ததோடு, அவளது முக அழகையும் ஐஸ்வரியங்களையும் இன்னும் அதிகமாக்கி அருளினாள். தவிர, 'நீ மேற்கொண்ட இந்த விரத நாள், இன்று முதல் உனது பெயரால் 'ரம்பா திருதியைஎன்று பெண்கள் கொண்டாடும் தங்கத் திருவிழாவாக ஆகட்டும்'' என்றும் ஆசீர்வதித்தாள்.

கௌரி அன்னையாக பார்வதிதேவி காட்சி தந்தபோது, அழகுக்கு உரியவனாம் கார்த்திகேயனை மடியில் வைத்தபடி கார்த்தியாயினியாக- பொன்மேனியளாகக் காட்சி தந்தாள். இதன் காரணமாகத்தான், எங்கெல்லாம் காத்யாயனி கோயில்கள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் கௌரிக்கும் சந்நிதிகள் இருக்கும். பெண்கள் புதிதாக பொன் நகை வாங்கியதும், அதை இந்த அம்மன் சந்நிதியில் வைத்து ஸ்வர்ணபூஜை செய்து நகைகளைப் பெற்று அணியும் வழக்கம் உள்ளது.

 

ஆக, அழகும் ஐஸ்வரியங்களும் அள்ளித் தரும் நன்னாள்தான் ரம்பா திருதியை. அன்றைய தினம் ரம்பாதேவி யந்திரத்தையோ, கௌரிதேவியாம் காத்யாயனி யந்திர வடிவையோ பூஜையறையில் வைத்து வழிபட்டால் சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம். வடஇந்தியாவில் ரம்பாதேவி யந்திரம் வைத்து அன்றைய தினம் விசேஷ பூஜைகள் செய்வர்.

No comments:

Post a Comment