Thursday, December 16, 2021

மச்சபுரீஸ்வரர் கோவில்

 

    கும்பகோணம் அருகே உள்ள தேவராயன் பேட்டையில் அமைந்து உள்ளது மீன ராசிக்காரர்களின் மச்சபுரீஸ்வரர் கோவில்... சங்கு, சக்கர இத்தல முருக பெருமானை அறிவீர்களா !

இந்த கோவிலின் அதிசய வரலாற்றை தெரிந்து கொள்வோமா ?

              கும்பகோணம் அருகே உள்ள தேவராயன் பேட்டையில் அமைந்து இருக்கும் மச்சபுரீஸ்வரர் கோவில். திருமால் எடுத்த முதல் அவதாரம் மச்சாவதாரம்.  மச்சம்என்றால்மீன்என்று பொருள். வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த ஹயக்ரீவன் என்ற அசுரனை அழிப்பதற்காக திருமால் எடுத்த அவதாரம் இது.

                       இந்த மச்ச அவதாரத்துடன் சம்பந்தப்பட்ட கோவில், கும்பகோணம் அருகே உள்ள தேவராயன் பேட்டையில் அமைந்து இருக்கும் மச்சபுரீஸ்வரர் கோவில்.  இந்த ஆலயத்தில் உள்ள மூலவர் பெயர் மச்சபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் சுகந்த குந்தலாம்பிகை. மீன் உருவில் இருந்த மகாவிஷ்ணு, தன் சுய உருவத்தை அடைய இத்தலத்து சிவனை வழிபட்டதாக தல வரலாறு தெரிவிக்கிறது.

            இந்த ஆலயம் மீன ராசிக்காரர்களின் பரிகாரத் தலமாக விளங்குகிறது. ஒரு சமயம் படைப்புக் கடவுளான பிரம்மா அசந்து தூங்கி விட்டார். அப்போது ஹயக்ரீவன் என்ற அசுரன், பிரம்மனிடம் இருந்த படைப்புக்கு ஆதாரமான வேதங்களை திருடிச் சென்று விட்டான். இதனால் உலகம் ஸ்தம்பித்தது. பிரம்மன் செய்வதறியாது திகைத்தார். பரந்தாமனை துதித்து, வேதங்களை மீட்டு தரும்படி வேண்டினார். அப்போது மகாவிஷ்ணுவை நோக்கி சத்யவிரதன் என்ற மன்னன் நீரையே உணவாக கொண்டு கடும் தவம் செய்து கொண்டிருந்தான். ஒரு முறை அவன் தன்னுடைய தினசரி கடன்களை செய்து ஆற்றில் இரு கைகளாலும் நீரை அள்ளிய போது, சிறிய மீன் குஞ்சு ஒன்று கைகளில் வந்தது. அந்த மீன் அதிசயிக்கத்தக்க வகையில் பேசியது.

             அந்த மீன் மன்னரிடம், ‘மன்னா! என்னை மீண்டும் நீரில் விட்டு விடாதீர்கள். பெரிய மீன்கள் என்னை விழுங்கி விடும்என்றதுமீன் பேசுவதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னர், அந்த மீனை தன் கமண்டலத்தில் போட்டுக் கொண்டார். சிறிது நேரத்தில் அந்த கமண்டலம் அளவுக்கு மீன் வளர்ந்துவிட்டது. அதனால் அதை ஒரு பெரிய பாத்திரத்தில் விட்டார். அதற்கு மேலும் மீன் வளர்ந்து விட்டது. பிறகு குளத்தில் மீனை போட்டார்.

           என்னே அதிசயம் ! சிறிது நேரத்தில் குளம் அளவுக்கு மீன் வளர்ந்து விட்டது. இறுதியில் படைவீரர்கள் உதவியுடன் மீனை தூக்கிக் கொண்டு போய் கடலில் விட்டார். மீன் கடலளவு வளர்ந்து பிரமாண்டமாய் நின்றது. இதைக் கண்ட மன்னன், தான் வழிபடும் திருமாலே இதுபோன்ற திருவிளையாடலை நடத்துவதாக அறிந்து கொண்டார்.  பரந்தாமா! தாங்கள் இந்த உருவம் பெற்றதற்கும், என்னிடம் வந்ததற்கும் காரணம் என்ன?’ என்றார். 

          அப்போது மீன் வடிவில் இருந்த மகாவிஷ்ணு, ‘மன்னா! வருகிற ஏழாவது நாளில் பிரளயம் ஏற்பட்டு உலகமே வெள்ளத்தில் மூழ்கப் போகிறது. அச்சமயம் பெரிய படகு ஒன்று இங்கே வரும். அதில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் ஏற்றி விடு. பிரளய வெள்ளத்தில் அந்த படகு மிதக்கும். மச்ச அவதாரம் எடுத்து, நான் அந்த படகை சுமந்து கவிழ்ந்து விடாதவாறு காப்பாற்றுவேன். அப்போது நீங்கள் அதன் காரணத்தையும், என் மகிமையையும் அறிவீர்கள்என்று கூறிவிட்டு மறைந்தார்.

          மகாவிஷ்ணு கூறிய படி ஏழாவது நாளில் பெரிய பிரளயம் ஏற்பட்டு வெள்ளம் சூழ்ந்தது. அப்போது பெரிய படகு ஒன்று அங்கே வந்தது. மன்னனும் உயிர்களை காப்பாற்ற அவற்றை படகில் ஏற்றிக் கொண்டு சென்றார். பலத்த காற்றால் படகு அலைக்கழிக்கப்பட்டது. அப்போது மகாவிஷ்ணு மச்ச அவதாரத்தில் தோன்றி படகை சுமந்து சென்று பிரளயம் முடிந்ததும் நிலத்தில் விட்டு, அனைத்து உயிர்களையும் காப்பாற்றினார்.  மகாவிஷ்ணு, மன்னனுக்கு மச்ச புராணத்தை உபதேசித்தார்.  பின்னர் பரந்தாமன் வேகமாக வெள்ளத்தினுள் சென்று, அசுரனுடன் போரிட்டு அவனை அழித்து வேதங்களை மீட்டு பிரம்மனிடம் ஒப்படைத்தார்.

          இறைவன் மீன் வடிவம் தாங்கி, உலகையும் காத்து, வேதங்களையும் மீட்ட பெருமை உடையது இத்தலம். மச்ச அவதாரத்தில் இருந்து சுய உருவம் அடைய பரந்தாமன் முயற்சித்த போது, அசுரனை கொன்ற தோஷம் காரணமாக அவரால் சுய உருவத்தை அடைய முடியவில்லை. இதனால் அவர் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கினார். சிவனின் அருளால் மகாவிஷ்ணு சுயஉருவம் அடைந்ததாக தலபுராணம் கூறுகிறது. மகாவிஷ்ணுவுடன் தேவர்கள், பிரம்மா ஆகியோரும் இத்தல இறைவனை வழிபட்டு பேறு பெற்று உள்ளனர்.

                1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவில் கட்டிடக்கலை, சிற்பக்கலைக்கு உறைவிடமாக விளங்குகிறது. தஞ்சை பெரிய கோவிலுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தது. இங்கு 55 கல்வெட்டுகள் உள்ளன. மகாவிஷ்ணு மச்ச அவதாரம் கொண்டு சிவனை வழிபட்ட சின்னம் கோவில் முகப்பில் கருங்கல்லால் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டு உள்ளது. மச்சபுரீஸ்வரர் ஆலயம் வேதங்களை மீட்ட தலம் என்பதால், கல்வி கற்று வரும் மாணவர்கள் அவசியம் வந்து வழிபட வேண்டிய தலம் இது. மாணவர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து மச்சபுரீஸ்வரரையும், சுகந்த குந்தலாம்பிகையையும் வணங்கி தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொண்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம்

          குலதெய்வ வழிபாடு செய்யாமல் விட்டவர்கள், இங்கு வந்து வழிபட்டு மீண்டும் தங்கள் குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்தால் குலதெய்வத்தை வழிபடாததால் வந்த தோஷம் விலகும்.  சங்கு, சக்கரத்தில் முருகன் : மச்சபுரீஸ்வரர் கோவிலில் முருகனுக்கு தனி சன்னிதி உள்ளது. முன்னால் 3 முகம், பின்னால் 3 முகம், 12 கரங்கள், வலது கையில் சங்கும், இடது கையில் சக்கரமும் ஏந்தி உள்ளார். திருமாலுக்கு உள்ளதைப் போலவே இங்கு முருகனுக்கும் சங்கு, சக்கரம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

           ஆறுமுகனுடன், வள்ளி தெய்வானையும் உடன் உள்ளனர். இங்கு சத்ரு சம்ஹார பூஜை செய்வது நல்லது. பொதுவாக கருவறை பின்புறம் கோஷ்டத்தில் லிங்கோற்பவர் இருப்பார். இக்கோவிலில் அந்த இடத்தில் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் 3 அடி உயரத்தில் அருள்பாலிக்கிறார்.  மகாவிஷ்ணுவை சங்கு, சக்கர முருகன் பார்க்கிறார். இது இக்கோவிலின் தனிச்சிறப்பு ஆகும். அமைவிடம் : தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 20 கிலோமீட்டர் தூரத்தில் பண்டாரவாடை என்ற கிராமம் உள்ளது. அங்கிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் மச்ச புரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பாபநாசத்தில் இருந்தும், பண்டாரவாடையில் இருந்தும் பஸ், ஆட்டோ வசதி உண்டு.

No comments:

Post a Comment