Wednesday, February 28, 2018

பொய்மையும் வாய்மையிடத்து .......



பொய்மையும் வாய்மையிடத்து .......

அக்பரின் மந்திரியும் மதியூகியுமான பீர்பால் ஒரு முறை தன் நண்பருடன் உலா வந்துகொண்டிருந்தார். அப்போது சில மனிதர்கள் ஒரு முதியவரை ரத்தவிளாறாக அடித்துக்கொண்டிருந்தார்கள். பீர்பால் வேகமாக எல்லோரையும் விலக்கி வைத்தார். அந்த முதியவரிடம் நடந்ததை பற்றி விசாரித்தார்.

அந்த முதியவர் " ஐயா, நான் ஒரு ஜோசியன், என் தொழிலுக்கு விரோதமாக என்றைக்கும் நடந்ததில்லை. சற்று முன் ஒரு ஜமீன்தார் தன் கைகளை என்னிடம் காண்பித்து பலன் கூற சொன்னார். அவர் ராசியின் படி, அவருடைய சொந்தங்கள் எல்லாம் அவர் கண் முன்னேயே தங்கள் ஆயுளை முடிப்பார்கள் என அவர் விதி அமைக்க பட்டிருக்கிறது. ஆகையால் நானும் அவ்வாறே அவரிடம் எடுத்துரைத்தேன். அதனால் பெரும் சினம் கொண்ட ஜமீன்தார் தன் ஆட்களை கொண்டு என்னை இப்படி அடித்து உதைத்து விரட்டி விட்டார்" என்று பீர்பாலிடம் கூறினார்.

சற்று யோசித்த பீர்பால் அந்த ஜோசியரின் காதில் அறிவுரை கூறினார்.

ஒரு வாரத்திற்கு பின், அந்த ஜோசியர் மீண்டும் அதே ஜமீன்தாரிடம் ஒரு மாறுவேடம் பூண்டு சென்றார். இந்த முறை அவர் முகம் கொள்ளாத சிரிப்புடனும் கை நிறைய பொற்காசுகளுடனும் வந்தார்.

பீர்பாலின் நண்பருக்கு ஒரே அதிசயம் " என்ன பீர்பால் ? பாவம் அவர் கொள்கையை மீறி அவரை பொய்யான பலன்கள் கூற வைத்துவிட்டாயா ?" என வினவினார். அதற்கு பீர்பால் "இல்லை நண்பா ! இம்முறையும் அவர் உண்மையைத்தான் கூறினார்" என்றார்.

"அது எப்படியப்பா சாத்தியம் ? சென்ற வாரம் கூறிய அதே பலனை கூறி அடி வாங்கிய அவர் எப்படி இவ்வாரம் அதையே கூறி பரிசு பெற முடியும் ? "

பீர்பால் பெரும் சிரிப்புடன் "ஹா..ஹா...! நண்பா கடந்த வாரம் அவர் என்ன சொன்னார் ? உங்கள் கண் முன்னரே உங்கள் சொந்தங்கள் அனைத்தும் தன் ஆயுளை இழக்கும் என கூறினார் அல்லவா ? அதே உண்மையை இம்முறை - உங்கள் சொந்தங்கள் மத்தியில் நீங்கள் தான் அதிக காலம் வாழ்வீர்கள் - எனவும் கூறலாம் அல்லவா ? ஹா...ஹா....ஹா....."

நண்பரும் பீர்பாலின் மதியூகத்தை எண்ணி வியந்து போனார்.

நீதி : உண்மை என்பது ஒரு கசப்பு மருந்து தான். ஆயினும், தேன் தடவி மருந்து ஊட்டினால் அது சரியாகவும் இறங்கும். அதன் பலனும் கிட்டும்.
 

No comments:

Post a Comment