Sunday, January 23, 2022

பென்னிகுவிக்

 பென்னிகுவிக்

தஞ்சாவூர் என்பது ராமநாதபுர மாவட்டத்தின் வறண்ட பகுதியாகவே முன்பு இருந்தது, கல்லணை கட்டி சோழன் காவேரியினை அங்கு திருப்பிய பின்பே அது வளமானது  ஆனால் ராமநாதபுரம் வறண்ட பகுதியாகவே நீடித்தது, வைகையில் வெள்ளம் வரும் காலம் தவிர வேறு நீர் ஆதாரமில்லை, வறண்ட பூமி அது

அது கிட்டதட்ட  100 ஆண்டுகளுக்கு முன்புவரை மகா மோசமாக இருந்தது, அது என்றல்ல வைகையினை நம்பி இருந்த , அதன் சற்று தொலைவில் இருந்த எல்லாமே வானம் பார்த்த பூமியாக காய்ந்தே இருந்தது

கிழக்கிந்திய கம்பெனி என்பது கொள்ளை அடிக்கவந்தது, அடித்தது வரிபிடுங்குவதை தவிர , அவர்கள் கம்பெனி விவகாரம் தவிர மக்களுக்கு ஏதும் செய்யவில்லை

 இந்திய ஆட்சி 1857ல் பிரிட்டானியர் வசம் சென்றபின் ஓரளவு மக்கள் நல திட்டங்கள் வந்தன, அந்த பொறியாளனும் அப்பொழுது உருவாகி இருந்தான், அவன் பெயர் *பென்னிகுவிக்*

 அவன் தந்தை ராணுவ அதிகாரி, பெனன்னிகுவிக் ராணுவத்திற்கான பொறியாளராக உருவாக்கபட்டான், ராணுவத்திற்கான பாலம், கோட்டை இன்னபிற விஷயங்களை உறுதியாக கட்ட உருவக்கபட்டவன் அவன்

 சென்னை மாகாணத்தின் பொதுபணிதுறை அதிகாரியாக அவனை ஆங்கில அரசு அமர்த்திற்று

 அன்று திருச்சி, மதுரை எல்லாம் வரிவசூல் மையங்கள், அப்படித்தான் பென்னிகுவிக் மதுரை பக்கம் வந்தான், அது ஒரு பஞ்சகாலம்

 பஞ்சத்தால் மக்களும், மாக்களும் கருகிசாவும் கொடுமையினை அவன் கண்டான், மனம் ஒப்பவில்லை. ஆம் அவனின் இரக்கமுள்ள மனம் துடித்தது

 ஒரு ஆட்சியாளனாக அவர்களுக்கு ஏதாவது செய்ய துடித்தான், ஆம் அவர்களுக்கு தேவை நீர், அதற்கொரு பெரும் ஆதாரம், என்ன செய்யலாம்

 காடுமேடெல்லாம் அலைந்தான், ஒவ்வொரு ஓடையாக தேடினான், முல்லை பெரியாறு என இரு ஆறுகள் இருப்பதையும் அவை அரபிகடல் நோக்கி ஓடுவதையும் கண்டான்

 இயற்கைக்கே கிழக்கே வர முடியாதவாறு ஆண்டவன் படைத்திருந்தான், ஆண்டவனின் கட்டளையினை மீற அவனைபோல் இளகிய மனம் கொண்ட பென்னிகுவிக் முடிவெடுத்தான்

 ராணுவத்திற்கான வலுவான கட்டுமானங்களை கட்டிய அவனின் அனுபவ மூளை, சாத்தியமில்லா அவ்விஷயம் சாத்தியம் என சொன்னது

 இரு ஆறுகளும் இணையும் இடத்தில் அணைகட்ட வேண்டும் அதை கிழக்கே இருக்கும் பக்கம் திருப்ப வேண்டும்

 அவன் மனம் சொன்னதே தவிர நிலமை சிக்கலானது, மலை உச்சியில் அணைகட்ட வேண்டும் அதுவும் கல்லும் மண்ணும் சுமந்து சென்று கட்ட வேண்டும்

 அந்த மழைபிடிப்பு பகுதி, இன்னபிற பகுதி திருவாங்கூர் மன்னனிட்ம் இருந்தது, அவனிடம் ஆயிரம் வருடம் ஒப்பந்தம் போட்டு வாங்குவதே பெரும்பாடாயிற்று

 மலை உச்சியில் அந்த மழை ,கொசுகடி, அட்டை, குளிர் , காட்டு மிருகம், நோய்கள் என  இன்னும் ஏகபட்ட இடைஞ்சல்களை தாண்டி கட்ட வேண்டும்

 அதைவிட முக்கியம் கட்டிய அணையிலிருந்து தண்ணீரை கொண்டுவர வழியில்லை, வடியவிட்டால் வேறு எங்கோ செல்லும்

 ஆம் பாறையினை துளையிட்டு அதன் மூலம் வைகையில் கலக்க செய்ய வேண்டும்

 நினைத்து பார்த்தால் மாபெரும் சவால் அது, மலைமேல் ஒரு அணைகட்டுவது நினைத்துபார்க்க முடியா சவால்களை கொண்டது, அதுவும் கட்டிவிட்டு நீரை கொண்டுவருவது எல்லாம் நினைத்து பார்க்க முடியா சிக்கல்கள்

 ஆனால் மதுரை ராமநாதபுர மக்கள் நிலமையினை நினைத்த பென்னிகுவிக் அதை வாழ்வின் கர்மமாகவே கருதினான்

 ஆங்கில அரசு முதலில் சம்மதிக்கவில்லை, ஆயினும் பென்னிகுவிக் விடவில்லை மக்களிடம் வசூலிக்கும் வரி அவர்களுக்காக பயன்படுவதை தவிர என்ன நீதி இருக்க முடியும் என வாதிட்டான், அரசு பணிந்தது

 ஆங்கில அரசு கொடுத்த நிதியில் வேலை தொடங்கியது, கடும் சிரமம். ஒரு கல்லை எடுத்து கொண்டு அல்லது ஒரு சட்டி சுண்ணாம்பினை எடுத்து மலைஏறுங்கள் புரியும்

 இரு ஆண்டுகள் வேலை நடந்தது, அணை எழும்பியது. டைபாய்டு மலேரியா என சாவு ஒருபுறம் கரைந்து கொண்டிருந்த பணம் ஒருபுறம் என சவால் வந்தது

 அதைவிட சவால் கனமழை உருவில் வந்தது, ஒரே நாள் இரவில் அணையினை தரைமட்டமாக்கியது வெள்ளம்

 உடல் சோர்ந்த பென்னிகுவிக் மனமும் சோர்ந்தான் , ஆனாலும் அந்த வெள்ளம் அவனுக்கு ஒரு நம்பிக்கையினை கொடுத்தது

 "இதுதான் வேண்டும் இந்த வெள்ளம்தான் வேண்டும், இந்த மாபெரும் வெள்ளம் மதுரை பக்கம் பாயவேண்டும். ஏதோ சிறிய ஓடை என கணக்கிட்டேன் இல்லை இது மாபெரும் ஆறாக இருக்கின்றது, போதும் 5 மாவட்ட மக்களுக்கு தாராளமாய் போதும்

 ஆனால் அணை மிக வலுவாக இருக்க வேண்டும், மகா வலுவான அணைகட்ட இன்னும் பணம் வேண்டும்"

 ஆனால் ஆங்கில அரசு மறுத்தது, சாத்தியமில்லா விஷயத்தில் பென்னிகுவிக் இறங்கி அரசு பணத்தை வீணாக்கியதாக குற்றசாட்டு எழுந்தது

 (இப்போதுள்ள அரசியல்வாதிகள் என்றால் அணை இடிய இடிய கட்டிகொண்டே இருந்திருப்பார்கள், சம்பாதித்திருப்பார்கள். ஆனால் அந்த காலம் அப்படி இல்லை)

 விளைவு மக்களுக்கு தேவை இல்லா பணி எனக்கெதற்கு என ராஜினாமா செய்த பென்னிகுவிக் லண்டன் திரும்பினான்

 எதற்கு ஓய்வெடுக்கவா? அல்ல தன் சொத்துக்களை விற்றான் போதா குறைக்கு கையேந்தி பிச்சை எடுத்தான்

 ஆம் எங்கிருந்த வந்த அவனுக்கு இந்த மக்களின் கண்ணீர் அப்படி பாதித்திருக்கின்றது , மனம் உருகி நின்றிருக்கின்றான்.

 அந்த பணத்தோடு வந்த பென்னிகுவிக் மறுபடியும் அந்த இடத்தில் அணைகட்டினான், இம்முறை மிக உறுதியாக கட்டினான்

 அந்த சுரங்கத்தையும் வெட்டினான்

 தன் வேள்வியில் வென்று 1895ம் வருடம் அந்த அணையினை மக்களுக்கு கொடுத்தாம், ஆம் நம் மக்களுக்கே கொடுத்தான்

 இறுதியாக அவன் கனவுபடியே முல்லையும் பெரியாறும் கலந்து வைகையில் கலந்தது

 தேனிமாவட்டம் புத்துயிர் பெற்றது, அந்த மகிழ்ச்சி ராமநாதபுரம் வரை வந்தது

 ஆம் 5 மாவட்ட மக்கள் அவனால் இன்றும் வாழ்கின்றனர்.

 அவன் யார்? அவனுக்கும் இவர்களுக்கும் என்ன சம்ப்ந்தம்? வந்தான் வறுமையினை பார்த்தான் அத்தோடு சென்றிருக்கலாம்எதற்காக இந்த சவால், அதுவும் சொந்த பணத்தை கொண்டு, சொத்துகளை எல்லாம் விற்று சவால்

 அவன் சொன்னது இதுதான் "பணம் என்னிடம் இருந்தால் என் தலைமுறை வாழும், அதை நான் இக்காரியத்திற்கு செலவிட்டால் ஓராயிரம் தலைமுறை தொடர்ந்து வாழும்"

 உள்ளத்தில் நல்ல உள்ளம் என்பது இதுதான்

 தன் உடல் பொருள் ஆவி வாழ்வு சம்பாத்தியம் என எல்லாவற்றையும் இவர்களுக்காகவே இழந்திருக்கின்றான், ஆனால் வரலாற்றில் தெய்வமாக நின்றுவிட்டான்

 அந்த அணை இன்றும் தேக்கடி அருகே கம்பீரமாக நின்று மதுரை பெல்ட்டினை தாங்கி நிற்கின்றது, அவனின் நியாயமான தியாகமான சொந்த பணம் என்பதாலோ என்னவோ எந்த வெள்ளமும், கேரள சதியும் அதை அசைக்க முடியவில்ல்லை

 இன்னும் 300 ஆண்டுகாலம் அது அசையாது, 500 ஆண்டுகளுக்கு பின் காலம் மாறினாலும் முல்லைபெறியாறு தமிழகத்திற்கானது என்ற அவனின் வெற்றி மாறாதது

 நானும் மனிதன் அவர்களும் மனிதர்கள், சக மனிதர்கள் வாழ என்னால் முடிந்ததை செய்வேன் என அவன் வந்து நின்று போராடியதற்கு என்ன ஈடு நாம் கொடுக்க முடியும்?

 இயற்கை வலிமை, கேரள சதி என எல்லாவற்றையும் தாண்டி அந்த அணை நிற்கின்றது என்றால் பென்னிகுவிக்கின் தர்ம சக்திக்கும் பங்கு இருக்கின்றது, முழு மனிதநேயத்தில்  உருவான அணை அது

 இதனால் தனக்கென்ன லாபம் என அவன் யோசித்தானா? இதை கட்டினால் தன் வாரிசுகள் வாழும் என சிந்தித்தானா?

 அவன் சொத்தை எல்லாம் விற்றபின் அவனின் வாரிசுகளும் வஉசி வாரிசு போலவே தவித்தன, மிக சமீபத்தில்தான் அவரின் பேரன் இந்தியா வந்து அணையினையும் அவருக்கு மக்கள் வைத்த மணிமண்டபம், சிலை மற்றும் அபிமானத்தை எல்லாம் கண்டான்

 நிச்சயம் அவன் தாத்தா கோடி அரண்மனை கட்டியிருந்தாலும் இந்த பெருமையும் மகிழ்வும் வந்திரா மகிழ்ச்சியில் திரும்பிசென்றான்

 தன் தாத்தா செய்த காரியத்திற்காக வீடெல்லாம் படம் வைத்து, ஊரெல்லாம் சிலைவைத்து கொண்டாடுகின்றார்கள் என்பதை தவிர என்ன பெருமை ஒரு பேரனுக்கு வேண்டும்?

 உலகின் மொத்த செல்வத்தையும் பென்னிகுவிக் தன் குடும்பத்திற்காக சேர்த்திருந்தால் இப்பெருமை கிடைக்குமா?

 நல்ல தாத்தா சேர்த்து வைக்க வேண்டியது இந்த பெருமையினைத்தான்.

வறண்ட பகுதி அவனால் வளம்பெற்றது, இப்படித்தான் கன்னியாகுமரி பக்கம் மிச்சிகன் எனும் வெள்ளையன் வந்து பேச்சிபாறை அணைகட்டி அதை செழிக்க வைத்தான்

ஆனால் ராதாபுரம் பகுதிமட்டும் ஒரு வெள்ளையன் கண்ணுக்கும் தெரியாமல் போன வறண்ட பகுதி, காமராஜர் ஓரளவு முயன்றார் முழுவெற்றி இல்லை

 பென்னிகுவிக்கினை நினைக்கும் பொழுதெல்லாம் ராதாபுரம் பக்கம் அப்படி ஒருவன் வராமலே போய்விட்டானே என்ற ஏக்கமே வரும்

 அவ்வகையில் தேனி முதல் சிவகங்கைவரையிலான மக்கள் சக்திவாய்ந்த தெய்வங்களை வணங்கி இருக்கலாம், வரம் பெற்றிருக்கலாம்.

 அந்த உண்மையான மனித நேய மகானுக்கு, பெரும் மனம் படைத்த புனிதனுக்கு இன்று பிறந்த நாள்

 அவனின் அந்த மாபெரும் பொதுநல சிந்தனையும், அந்த தொலைநோக்கும் உறுதியும் சிலாகிக்க கூடியது, அவன் வரலாறேல்லாம் ஒவ்வொரு அரசியல்வாதியும் பதவி ஏற்கும் முன் படிக்க வேண்டிய சாசனம்

 குறிப்பாக பொதுபணித்துறை பொறுப்பாளர்கள், ஆம் அதற்கு இலக்கணம் வகுத்தது அவனே

 தென் தமிழக மக்கள் நன்றியோடு நினைகும் அந்த பெருமகனின் நினைவு ஒருகாலமும் அழியாது

 தேனிபக்கம் ஒவ்வொருவர் வீட்டிலும் அவன் படத்தை வைத்து வணங்குகின்றார்கள், தெய்வமாய் கொண்டாடுகின்றார்கள்

 மதுரை இருக்கும் வரை மீனாட்சியம்மன் ஆலயம் நிலைத்திருப்பது போல் அவனும் நிலைத்திருப்பான்.

 உண்மையான மானுட நேயத்திற்கு மதம், இனம், மொழி, சாதி என எதுவுமில்லை என்பதை நிரூபித்தவன் பென்னிகுவிக்

 *உலகெல்லாம்  பொங்கல் கொண்டாடும் நேரம், தேனி மக்கள் அந்த தெய்வத்திற்காக கொண்டாடுகின்றார்கள், அவனே அவர்களின் காவல் தெய்வம்.*

No comments:

Post a Comment