Wednesday, January 19, 2022

ஓய்வு காலத்தில் கடலளவு ஆசை

 ஓய்வு காலத்தில் கடலளவு ஆசை 

பணி ஒய்வு பெற்ற பின்னால் எங்கேனும்  ஒரு குக்கிராமம்!

அதில் ஓரளவு சுமாரான ஓட்டு வீடு! வாசலில் திண்ணை ! திண்ணையைத் தாண்டி ஒரு வேப்பமரம் !! உள்ளே போனால் ஒரு ரேழி, அதைத் தாண்டிய பின்னர் கம்பி போட்ட முற்றம், தாழ்வாரம்!! தாழ்வாரத்தின் பக்க வாட்டில் ஒரே ஒருஅறை !! அதையும் தாண்டி பூஜையறை! அதையொட்டி சமையலறை !!

பின்னால் ஓரளவு பெரிய தோட்டம்! கிணறு அவசியம்!! அதனருகில் துவைக்கும் கல்!! ஏழெட்டு தென்னை, பூச்செடிகள், பவழமல்லி மரம், மாமரம், பலா மரம், வாழை மரம், கொஞ்சம் பாகற்காய் கொடி, கீரைகள் இப்படி !! ஓரிரு பசு மாடு இருந்தால் அற்புதம் !!

குக்கிராமத்துக்கு அருகில் ஒரு பத்துப் பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் ஒரு சிறு நகரம் (டவுன்) இருக்க வேண்டும் !

வாரம் ஒரு முறை டவுனுக்கு போய் ஏதேனும் அவசியத் தேவை இருந்தால் வாங்கலாம் !! "வா சுதர்சனம் என்ன டவுனுக்கு போய்ட்டு வந்தியா?" என்று அடுத்த வீட்டு பெரியவர் விசாரணை !!

காலை எழுந்து பல்விளக்கியதும் நீராகாரம்(அது இல்லைன்னா சரிப்படாது!! ) அதன் பின்னால் தியானம், உடற்பயிற்சி பின் Tea and செய்தித்தாள் !! அதை ஒரு பத்தி விடாமல் படித்து முடிக்க வேண்டும்! அப்புறம் பழையது ! தொட்டுக் கொள்ள வடுமாங்காய், மோர்மிளகாய், அப்புறம் தோட்டத்தில் கொஞ்சம் நேரம் வேலை !!

அதன் பின்னால் குளியல்! கொஞ்சம் நேரம் பூஜை. முடிந்ததும் ஊரிலுள்ள ஈஸ்வரன் கோவிலுக்கோ, பெருமாள் கோவிலுக்கோ செல்லுதல், வழிபாடு! முடித்து விட்டு வந்தால் பதினோரு மணிக்கு சாப்பாடு!!

மனைவியும் Free bird. என்ன பிரியமோ  அதை செய்ய Full Freedom.

அதன் பின்னால் வாசல் திண்ணையில் ஒத்த வயதுடைய அக்கம் பக்கத்து நம் வயதை ஒத்த நண்பர்களுடன் அரட்டை, சிறிய பேட்டரி ரேடியோவில் செய்தி கேட்டுக் கொண்டே விமர்சனம்! சரியான செட்டாக நாலைந்து பேர் சேர்ந்தால் கேரம் போர்டு, காசு வைக்காமல் ரம்மி !!

மதியம் இரண்டு மணி நேரம் தூக்கம்! மாலை ஒரு காபி ! கொஞ்சம் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சும் வேலை!  அப்புறம் தியானம் பின் கோவிலுக்கு ஆறு மணி பக்கம் ! அங்கு தரிசனத்துக்கு பின்னால் ஒரு ஏழெட்டு டிக்கெட்டுகள் உட்கார்ந்து பல விஷயங்கள் பற்றி அலசல் ஒரு எட்டு மணி வரை !!   பின் வீடு திரும்பி எளிய டிபன் நாலு இட்லி அல்லது இரண்டு சப்பாத்தி ! கொஞ்சம் பால் !

ராத்திரி திண்ணையில்பாய் விரித்துக் கொண்டு அக்கம் பக்கம் தோஸ்துகளுடன் இருட்டில் பேசிக் கொண்டே படுக்கை ! தூக்கம் வரும் போது தூங்கிப் போகுதல் !!   முடிந்தால் வாசலில் உள்ள வேப்பமரத்தின் கீழே கயிற்றுக்கட்டிலில் படுத்து ஜம்மென்று உறக்கம் !!

செல்போன் இல்லை, கணினி இல்லை, டிவி இல்லை, பேஸ்புக் இல்லை, வாட்ஸ்அப் இல்லை எதுவுமே இல்லை ! உடலில் நோயுமில்லை மனதில் கவலையுமில்லை !! வாய்க்குமா???

கடலளவு ஆசை  ஆனால் இதுவரையில் நடக்கவில்லை

No comments:

Post a Comment